தற்போதைய செய்திகள்

தி.மு.க.வுக்கு எதிராக வாக்களிக்க பெண்கள் தயார்- நத்தம் இரா.விசுவநாதன் உறுதி

செங்கல்பட்டு

தாலிக்கு தங்கம் திட்டத்தில் திருமண நிதியுதவி கிடைக்காமல் பெண்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்கும். ஏமாற்றம் அடைந்த பெண்கள் தி.மு.க.வுக்கு எதிராக வாக்களிக்க தயாராகி விட்டார்கள். என்று கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் கூறி உள்ளார்.

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரத்தில் உள்ள சண்முகம் சாலை பாரதி திடலில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாம்பரம் மத்திய பகுதி கழகசெயலாளர் எல்லார் செழியன் தலைமை வகித்தார்.

தாம்பரம் கிழக்கு பகுதி கழக செயலாளர் எம்.கூத்தன், மேற்கு பகுதி கழக செயலாளர் ஏ.கோபிநாதன், சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதிக் கழக செயலாளர் இரா.மோகன், மாடம்பாக்கம் பகுதி கழக செயலாளர் மாடம்பாக்கம் எம்.தேவேந்திரன், பெருங்களத்தூர் பகுதி கழக செயலாளர் ஜெ.சினுபாபு, பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மதுரப்பாக்கம் எம்.பி.மனோகரன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

கூட்டத்தில் கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன், கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல செயலாளர் கோவை எம்.சத்யன், மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, தலைமைக்கழக பேச்சாளர்கள் எம்.ஜி.ஆர். ஈ.வெங்கடேசன், வண்னை கணபதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் பேசியதாவது:-

ஒரு பொய்யை மீண்டும் பலமுறை சொன்னால் அது உண்மையாகி விடும் என்று கூறிய கோயபல்ஸ் எண்ணத்தின்படி தி.மு.க. பல்வேறு பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை நம்பவைத்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது.

சுமார் 520க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு அவற்றில் எதையும் நிறைவேற்றாமல் தற்போது 70 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக அமைச்சர்கள் தொடர்ந்து பொய்யான தகவல்கள் மேடைதோறும் பேசி வருகின்றனர்.

இதில் சில அமைச்சர்கள் 40 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக ஒரு கருத்தினையும் தெரிவிக்கிறார்கள். ஆக இவர்கள் இப்படி ஒவ்வொருத்தரும் மாறுபட்ட கருத்தினை சொல்வதிலிருந்து எந்த அளவுக்கு பொய்யான தகவல்களை சொல்கிறார்கள் என்பதனை அறிந்துகொள்ள முடிகிறது.

மேலும் தி.மு.க. அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி தமிழக அரசிடம் இல்லை. மத்திய அரசும் நிதியினை கொடுக்க முடியாத அளவுக்கு இவர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டார்கள். உண்மையிலே கழகம் மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பினை ஏற்கவேண்டிய சூழ்நிலை தான் நிலவியது.

ஆனால் ஸ்டாலின் இப்படி பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி விட்டார். இருந்தபோதிலும் மிக குறைந்த வாக்கு சதவிதத்தில் தான் கழகம் வெற்றி வாய்ப்பினை இழந்தது.

தற்போது தேர்தல் நடந்தால் இமாலய வெற்றியினை கழகம் பெறும். தி.மு.க. எதிர்க்கட்சி என்கிற அங்கீகாரம் கூட இல்லாமல் போய் விடும். அதற்கு காரணம், மக்கள் ஏமாந்து, மனம் நொந்து போய் இருக்கிறார்கள். தேர்தலில் தங்களது கோபத்தை வெளிப்படுத்த தயாராகி விட்டார்கள்.

உதாரணத்திற்கு பெண்கள் தங்களுக்கு ரூபாய் 1000 கிடைக்கும் என்று நம்பி ஏமாற்றம் அடைந்தார்கள். மாணவர்கள் நீட் தேர்வு ரத்தாகும் என்று நம்பி ஏமாற்றம் அடைந்தார்கள். முதியோர்கள் உதவித்தொகை கிடைக்கும் என்று நம்பி ஏமாற்றம் அடைந்தார்கள்.

தாலிக்கு தங்கம் திட்டத்தில் திருமண நிதியுதவி கிடைக்காமல் பெண்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். இப்படி ஏமாற்றம் அடைந்தவர்கள் தி.மு.க.விற்கு எதிராக வாக்களிக்க தயாராகி விட்டார்கள்.

அதேநேரம் கழக ஆட்சி சிறப்பானது என்று பேசவும் தொடங்கி விட்டார்கள். தேர்தல் நடந்தால் மிகப்பெரிய வெற்றியை கழகம் பெறும். கழகத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து தி.மு.க. அரசின் குறைகளை கூறிக் கொண்டிருக்கையில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மட்டும் ஸ்டாலினை பார்த்து தி.மு.க. அரசை புகழ்ந்து பேசியது நம் கழகத்தினரிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. ஓ.பி.எஸ்சுக்கு எடப்பாடியாரை ஏற்றுக்கொள்ளவதை விட ஸ்டாலினை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தார்.

ஸ்டாலினை பற்றி ஏதாவது குறை கூறினால் வேதனை அடைகிறார். எதிரிகளை பக்கத்தில் வைத்துக்கொள்ளலாம் ஆனால் துரோகிகளை மட்டும் பக்கத்தில் வைத்துக்கொள்ளக்கூடாது. எனவே துரோகிகளை வெளியேற்றியதால் கழகம் புனிதம் அடைந்துள்ளது.

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வருவதற்கு ஸ்டாலின் ஒரு தடையே இல்லை. ஓ.பி.எஸ் தான் தடையாக இருந்தார். இனி எந்த பிரச்சினையும் இல்லை. கூடிய விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்கும். எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி அமையும்.

இவ்வாறு கழக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் பேசினார்.