தற்போதைய செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது-கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் செல்வி விந்தியா பேச்சு

திருப்பூர்

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்றும் தி.மு.க.ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும் கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் செல்வி விந்தியா கூறி உள்ளார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்சார கட்டணம், பால் விலை உயர்வு, குப்பை வரி, தண்ணீர் வரி, தொழில்வரி, பாதாள சாக்கடை வரி ஆகிய வரிகளை உயர்த்தி தமிழக மக்களை வாட்டி வதைக்கும் மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் அரிசிக்கடை வீதியில் நடந்த இந்த பொதுக்கூட்டத்துக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சு.குணசேகரன் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு மத்திய பகுதி கழக செயலாளர் எம்.கண்ணப்பன் வரவேற்று பேசினார்.

இக்கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் செல்வி விந்தியா பேசியதாவது:-

துணிக்கும். துணிவுக்கும் பெயர் பெற்ற ஊர் திருப்பூர், கொடிகாத்த குமரன் பிறந்த ஊர். கடந்த தேர்தலில் பொய்யான வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றிய திமுக ஆட்சி அமைத்தது. நான் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டு வருவேன் என்று கூறி தெரு விளக்கு கூட இல்லாமல் ஆட்சி நடத்தி வருகிறது.

அதிமுக ஆட்சியில் மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். ஆனால் திமுக ஆட்சியில் மின் கட்டணத்தை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது. கஜானாவில் பணம் இல்லை என்று கனத்த இதயத்தோடு மின்சார வரியை உயர்த்தியதாக செந்தில் பாலாஜி கூறினார்,

ஆனால் 130 கோடிக்கு கருணாநிதி பேனாவிற்கு சிலை வைக்க மட்டும் நிதி இருக்கும். ஸ்டாலினை பொறுத்தவரை பேனா வைத்ததை சாதனை என்று நினைப்பார். கருணாநிதிக்கு பேச்சும் எழுத்தும் தண்ணீரில் மட்டும் தான். என்றுமே நிலைக்காது. அதேபோல் தான் மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதியும். திட்டம் போட்டு மக்களை ஏமாற்றி திருடும் கூட்டம் தான் திமுக.

மின்சார துண்டிப்பு காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் அதைப் பற்றி திமுக கவலைப்படவில்லை, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் துரைமுருகன் பேசும்பொழுது மின் துண்டிப்பு ஏற்பட்டதற்கு நான்கு ஊழியர்களை பணிமாற்றம் செய்துள்ளனர்.

அவர்களுக்காகவே வாழ்பவர்கள் தான் திமுகவினர், ஆனால் மக்களைப்பற்றி சிந்தித்து மக்களுக்காகவே வாழ்பவர்கள் தான் அதிமுக. கேரளாவில் மின்சார கட்டணம் அதிகம் எனவே பிற மாநிலத்தில் கேட்டு தான் மின்சார கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. அதுவும் பிற மாநிலத்துடன் குறைவாக உள்ளது என்று செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

அதேபோன்று அருகாமை மாநிலமான பாண்டிச்சேரியில் மது விலை குறைவாக உள்ளது. இங்கே அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள் மதுவிலக்கு இல்லை என்று கூறிவிட்டு அதிக விலைக்கு மது விற்பனை திமுக செய்து வருகிறது மக்கள் சிந்திக்க வேண்டும், திருப்பூர் மக்கள் தொழிலை நம்பி மட்டுமே வாழ்கிறார்கள் கடந்த திமுக ஆட்சியில் மின்வெட்டால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலர் தொழிலை மூடிவிட்டு சொந்த ஊரை காலி செய்துவிட்டு சென்றுள்ளனர். தற்போதும் சொத்து வரி, வீட்டு வரி, மின்சார வரி, குடிநீர் வரி, தொழில் வரி வரி என மக்களை துயரத்துக்கு வாழ்த்துகின்ற ஆட்சி தான் திமுக. மக்கள் மிகுந்த வறுமையான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு திமுக திருந்தவில்லை. மீண்டும் மக்களை இதுபோன்ற துயரத்திற்கு மக்களை தள்ளி விடுகிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததுமே மக்கள் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகி விட்டார்கள். திமுகவின் கொள்கை என்ன என்று பார்த்தால், மக்களை இருட்டில் வைப்பது தான். ஆளத்தெரியாத திமுக ஆட்சி எப்படி நடக்குது என்று பார்த்தால், வெறும் வீடியோ ஆட்சி தான் நடக்கிறது. திமுக கட்சிக்காரர்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. அவர் தலைவரே சரி இல்லை. கடந்த வாரம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளம்பர நோக்கத்தில் வீடியோ வெளியிட்டார்.

சாப்பாட்டை மீதம் வைத்ததுடன், அந்த தட்டிலேயே குழந்தைகள் முன் கை கழுவுகிறார்கள். தி.மு.க.வில் கவுன்சிலர் வந்தால் அடிப்பான். எம்.எல்.ஏ., வந்தால் அடிப்பார். ஏன் முதல்வரே வந்தாகும் அடிப்பார் என்ற நிலை தான் இருக்கிறது. மக்கள் பணிக்காக அரசு ஒதுக்கும் நிதி இந்த ஆளத்தெரியாத ஆட்சியில் 60 சதவீதம் கமிஷனாகத் தான் போகிறது.

அமைச்சர் முதல் அடிமட்ட கவுன்சிலர் வரை கமிஷன் போகிறது. மீதி 40 சதவீதம் நிதியில் தான் பணி நடக்கிறது. அண்ணன் எடப்பாடியார் ஆட்சியில் எவ்வளவு பணிகளை செய்து இருக்கிறோம். அதுவெல்லாம் ஸ்டிராங்கா இருக்கிறது.

நல்லாட்சி நடத்திய அதிமுக அமைச்சர்கள் வீட்டில் வேர்க்கடலை 10 ரூபாய் வாங்கியதற்கு ரெய்டு நடத்தி இருக்கிறார்கள். திமுக அமைச்சர் மூர்த்தி 120 கோடி செலவில் பிரம்மாண்ட கல்யாணம் பண்ணினார். இந்த கல்யாணத்துக்கு எல்லா கூட்டணி கட்சியினரும் பந்திக்கு முந்தி போய் சாப்பிட்டுட்டு இருக்கிறார்கள். மக்கள் இதெல்லாம் கவனிக்க வேண்டும்.

அந்த அமைச்சர் தேர்தலின் போது தனது சொத்து கணக்காக வெறும் 10 கோடி கொடுத்து இருக்கிறார். ஆனால் கல்யாணத்துக்கு மட்டும் 120 கோடி செலவு செய்து இருக்கிறார். இந்த பணமெல்லாம் எங்கு இருந்து வந்தது.

இதற்கு முன்னாடி எல்லாம் திருடர்கள் ஜாக்கிரதை என்று போர்டு வைப்பார்கள். இனி திமுகவினர் ஜாக்கிரதை என்று போர்டு வைக்கும் நிலை வந்து விட்டது. மின்சாரத்தை பிடுங்குவார்கள். மின் கட்டணத்தை உயர்த்துவார்கள். கஞ்சா, சாராயத்தை ஊக்குவிப்பார்கள். இது எல்லாம் என்ன நியாயம்.

கேட்டால் திராவிட மாடல் என்கிறார்கள். எது திராவிட மாடல்? சமூக வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் சேர்ந்து தான் வளர வேண்டும். அது தான் திராவிட மாடல். பிள்ளையார் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல மாட்டாரு. பக்ரீத்துக்கு வாழ்த்து சொல்வாரு. இது என்ன நியாயம். தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்கள் உரிமை பற்றி பேசிய ஸ்டாலின், இப்போ எதாவது உரிமை பற்று பேசுகிறாரா?

அம்மா அவர்கள் நடத்திய ஆட்சி தான் சமூக நீதி ஆட்சி. திமுகவின் ஆட்சி போலி திராவிட மாடல் ஆட்சி. அதிமுகவுக்கு ஓட்டுப்போட்டால் பி.ஜே.பி., உள்ள வந்துடும் என்று பிரசாரம் செய்தார்கள் திமுகவினர். இன்றைக்கு ஊருக்குள் திருடன், கஞ்சா விற்பவன் எல்லாம் வருகிறார்கள். இது எல்லாம் போதாது என்று எல்லாத்தையும் சுருட்டிச்செல்லக்கூடிய திமுககாரனும் வருகிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.

அதிமுக ஆட்சியில் போலீஸ் சிங்கம் மாதிரி இருந்தார்கள். தலை நிமிர்ந்து வேலை பார்த்தார்கள். இன்றைக்கு போலீஸ் ஸ்டேஷன்ல் திமுகவினர் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்கள். போன மாசம் மட்டும் தமிழ்நாட்டில் 135 கொலைகள் நடந்திருக்கிறது.

போக்சோ சட்டத்தில் கைதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் நாங்கள் நம்பர் ஒன் ஆட்சி என்று சொல்லிக்கொள்கிறார்கள். சாமி கும்பிடுவதை தடுப்பது பகுத்தறிவில்லை. கும்பிடுறோம் சாமி என்று நம்மிடம் வந்து நிற்பவர்களை காப்பாற்றுவது தான் பகுத்தறிவு. கலெக்சன், கமிஷன் என்றால் பால் காவடி கூட தூக்குவார் ஸ்டாலின்.

ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும் போது பிரதமரை எதிர்த்தார். இப்போது பட்டு வேஷ்டி கட்டிக் கொண்டு வந்து கும்பிடு போடுகிறார். ஸ்டாலின் குடும்பத்தில் சாமி கும்பிட்டால் அது அவர்கள் விருப்பம் என்கிறார். ஆனால் ஊராரிடம் கடவுள் எதிர்ப்பு பற்றி பேசுகிறார்.

காலையில் எழுந்ததுமே கடவுளே திமுக கவுன்சிலர் எங்க வீட்டுக்கு வந்துவிடக் கூடாது என்றும், ஸ்டாலின் இன்று எந்த விளம்பரமும் வெளியிடக் கூடாது என்றும் தான் வேண்டுகிறார்கள். மக்கள் அதிமுகவின் ஆட்சி வர வேண்டும் என்று தான் வேண்டிக்கொள்ள வேண்டும். அப்போது தான் மகக்ளுக்கு நல்லது நடக்கும்.

ஸ்டாலின் தான் வர்றாரு விடியல் தரப்போறாரு என்று பாட்டு போட்டார்கள். ஆனால் இன்றைய நிலை எப்படி இருக்கிறது. ஸ்டாலின் தான் வந்தாரு… அல்வா தான் தந்தாரு.. என்று இருக்கிறது. ஆளத்தெரியாத திமுக அரசுக்கு டிசைன், டிசைனா பேர் வைக்கிறார்கள்.

பெண்களுக்கு மட்டும் இல்லை. குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை இதுக்து பேர் விடியல் அரசா? சின்ன வியாபாரம் முதல் சினிமா வரை எல்லாம் திமுக வசம் போய் விட்டது. இதற்கு பேர் விடியல் அரசா? கொலை கொள்ளை என்று தமிழகமே சீர்குலைந்துள்ளது.

சொந்தக் கட்சிக்காரர்கள் என்றாலுமே தண்டிக்கக்கூடிய தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். ஆனால் தற்பொழுது அவர் சொந்தங்களை மட்டும் பார்த்துக் கொண்டு மக்கள் எக்கேடு கேட்டு போனாலும் என்று செயல்படுவது தான் ஸ்டாலின்.

உங்கள் வீட்டில் திருடன் திருடனை கூட நம்பி விடுங்கள் ஆனால் திமுகவினை ஒருபோதும் நம்பி விட வேண்டாம், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை தேடி வரும் திமுகவினர் தேர்தல் முடிந்த பின்பு மக்களை துளி கூட கண்டு கொள்வதில்லை மக்களுக்காக தன் ரத்தத்தை உறைய வைத்து தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தவர் தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அவர் வழியில் நடப்பவர் தான் எடப்பாடியார். நாம் அனைவரும் ஒன்றிணைந்து துரோகிகளை களை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் செல்வி விந்தியா பேசினார்.