ரூ.2.70 லட்சம் கோடி கடன் வாங்கிய விடியா தி.மு.க அரசு என்ன செய்தது?முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கேள்வி

திருப்பத்தூர்
ஆட்சிக்கு வந்து 15 மாதங்களாகியும் மக்கள் நலன் பெறும் வகையில் எந்த ஒரு புதிய திட்டங்களையும் ஸ்டாலின் கொண்டு வரவில்லை. ரூ.2.70 லட்சம் கோடி கடன் வாங்கிய விடியா தி.மு.க அரசு என்ன செய்தது என்றே தெரியவில்லை என்று முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளருமான கே.சி.வீரமணி கூறி உள்ளார்.
வேலூர் புறநகர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில், குடியாத்தம் நகரில், பேருந்து நிலையம் அருகே, நகர கழக செயலாளர் ஜெ.கே.என்.பழனி தலைமையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி, வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த.வேலழகன், நடிகர் எம்.எஸ்.அருள்மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி பேசியதாவது:-
விடியா திமுக அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 2.70 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மீது விலை உயர்த்தி மக்கள் மீது பாரம் சுமத்த கூடாது என்பதற்காக இந்த கடனை வாங்கினர். ஆனால் கடனை வாங்கிவிட்டு சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம், பால் விலை உயர்த்தி உள்ளனர்.
இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகால கழக ஆட்சியில் கழக அரசு வாங்கிய கடனை, கையாலாகாத, நிர்வாக திறமையற்ற விடியா திமுக அரசு ஒன்றரை ஆண்டுகளில் வாங்கியுள்ளது. அம்மாவின் ஆட்சியில் எண்ணற்ற மகத்தான மக்கள் நலன் பயக்கும் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டன. இதனால் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
பெண் கல்வியை ஊக்குவிக்க திருமண நிதி உதவி தலா ரூ.50,000, ரூ.25,000, 8 கிராம் தாலிக்கு தங்கம், உலகத்தரம் வாய்ந்த கல்வியை தமிழ்நாட்டு மாணவர்களும் பயில வேண்டும் என்பதற்காக மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, பொருளாதாரத்தில் கிராம பெண்கள் மேம்பட ஆடு, மாடு, கோழிகள்,
மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.
எடப்பாடியார் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மருத்துவக்கனவை நனவாக்கினார். அம்மா அவர்கள் தேர்தல் நேரத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் எடப்பாடியார் நிறைவேற்றினார்.
ஆனால் நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை அறிவித்து இன்று வரை ஸ்டாலின் அதை நிறைவேற்ற முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றார். ஆட்சிக்கு வந்து 15 மாதங்களாகியும் மக்கள் நலன் பெறும் வகையில் எந்த ஒரு புதிய திட்டங்களையும் ஸ்டாலின் கொண்டு வரவில்லை.
ரூ.2.70 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கிய விடியா திமுக அரசு என்ன செய்தது என்றே தெரியவில்லை. எப்பொழுது திமுக ஆட்சி முடியும் என மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு திமுக அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
முதியோர் உதவித்தொகை ரூ.1500, நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கெடுப்பு, சிலிண்டருக்கு கேஸ் மானியம் ரூ.100, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் அறிக்கைகளை ஸ்டாலின் அறிவித்து இன்று வரை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்.
அரசு ஊழியர்கள் தேர்தல் நேரத்தில் தங்கள் கோரிக்கைகள் அனைத்தும் ஸ்டாலின் நிறைவேற்றுவார் என நினைத்து திமுகவுக்கு வாக்களித்தனர். ஆனால் இன்று அரசு ஊழியர்கள் விடியா திமுக ஆட்சியில் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளருமான கே.சி.வீரமணி பேசினார்.