மக்களின் அரவணைப்பு, ஆதரவோடு மீண்டும் கழக அரசை அமைப்போம்

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டம்
சென்னை,
இந்த இயக்கத்தை பிளவுபடுத்த எண்ணுபவர்களின் கனவு கானல் நீராகி விடும் என்றும், மக்களின் அரவணைப்பு, ஆதரவோடு மீண்டும் கழக அரசை அமைப்போம் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைக்கழகத்தில் கழக நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய போது உரையாற்றியதாவது:-
எவ்வளவோ சோதனைக்கு இடையிலே வெற்றி பெற்றுள்ளோம். முதன்முதலாக இடைக்கால பொதுச்செயலாளராகவும், அவைத்தலைவராக, துணைப்பொதுச்செயலாளராக, பொருளாளராக, தலைமைக்கழக நிர்வாகிகளாக கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று இன்றைய தினம் முதன்முதலாக பொறுப்பை ஏற்க வந்துள்ளோம். புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கழகத்தை சில பேர் ஒடுக்க வேண்டும், சிதைக்க வேண்டும் அழிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தவர்களுக்கு ஒரு பாடமாக இது அமைந்துள்ளது. கழகம் துவங்கப்பட்டு சுமார் 50 ஆண்டு காலம் ஆகிறது. இந்த 50 ஆண்டு காலத்தில் எவ்வளவே சோதனைகளை புரட்சித்தலைவர் காலத்திலிருந்து இன்று வரை நாம் சந்தித்து இருக்கின்றோம். சோதனை வருகின்ற போது அதனை சாதனையாக்கி வெற்றிபெற்ற இயக்கம் நமது கழகம்.
பல பேர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆளும் திமுக எண்ணிக்கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்திலிருந்து சில பேர் இந்த இயக்கத்தை பிளவுபடுத்த எண்ணி கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கனவுகள் எல்லாம் கானல் நீராகத்தான்
இருக்குமே தவிர நிச்சயமாக அவர்களின் எண்ணம் நிறைவேறாது.
ஏன் என்றால் இது புரட்சித்தலைவர் உருவாக்கிய இயக்கம். இதயதெய்வம் அம்மா அவர்கள் எவ்வளவே
சோதனைகளை தாங்கி கண்ணை இமை காப்பது போல இந்த இயக்கத்தை காத்து இன்றைக்கு
நம்மிடையே ஒப்படைத்து சென்றுள்ளார்.
இந்தியாவில் எத்தனையோ அரசியல் கட்சி தலைவர்களை பார்க்கிறோம். ஆனால் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மாவும் தான் இயக்கத்திற்காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர்கள். எனவே இருபெரும் தலைவர்கள் நமக்கு துணையாக இருக்கிறார்கள். அவர்கள் விட்டுச்சென்ற பணியை நாம் தொடர்வோம். எவ்வளவு சோதனை வந்தாலும் அத்தனை சோதனைகளையும் தவிடுபொடியாக்கி ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு, தொண்டர்களின், நிர்வாகிகளின், மக்களின் அரவணைப்போடு, மக்களின் ஆதரவோடு மீண்டும் கழகத்தின் அரசை அமைப்போம்.
திமுக வேண்டுமென்றே திட்டமிட்டு, பழி தீர்க்க பார்க்கின்றது. கழகத்தை பிளவுப்படுத்தி, உடைத்து, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மீது பொய் வழக்குப்போட்டு கட்சியை முடக்க எண்ணுகிறார்கள். அவர்களால் ஒரு போதும் இது முடியாது. புரட்சித்தலைவர் காலத்திலும் இதனை செய்தார்கள். அம்மா இருந்த காலத்திலும் இதனை செய்தார்கள். அம்மாவின் மறைவுக்கு பிறகும் இப்போது செய்ய தொடங்கி விட்டார்கள். நாம் எச்சரிக்கையோடு இருந்து கழகத்தை
கட்டிக்காப்போம்.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.