நாம் பெற்ற பிள்ளைக்கு ஸ்டாலின் பெயர் வைக்கிறாரே

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனை
சென்னை,
ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்து சாதனை படைத்தோம்.ஆனால் நாம் பெற்ற பிள்ளைக்கு ஸ்டாலின் பெயர் வைக்கிறாரே என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனையுடன் குறிப்பிட்டு உள்ளார்.
விடியா தி.மு.க. அரசை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதி அண்ணாமலை நகரில் உள்ள அம்மா திடலில் நேற்று காலை நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி எழுச்சி உரையாற்றியதாவது:-
எனக்கு முன்னால் பேசிய ராஜேந்திரபாலாஜி சுருக்கமாக சொன்னாலும் அற்புதமான சொன்னார். தமிழகத்தில் கழகம் 32 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. ஓராண்டு, இரண்டாண்டு அல்ல, புரட்சித்தலைவரிடமிருந்து தொடங்கி, அம்மா மற்றும் நான் முதலமைச்சராக இருந்தவரை 32 ஆண்டுகள். தமிழகத்தில் அதிகமாக ஆட்சி செய்த கட்சி நமது கட்சி.
இந்த 32 ஆண்டு கால ஆட்சியில் தான் தமிழகம் ஏற்றம் பெற்றுள்ளது.
இந்தியாவிலே தமிழகம் முதன்மை மாநிலம் என்று சொல்வதற்கு அடித்தளம் இட்ட கட்சி நமது கட்சி. கழக ஆட்சி. இன்றைக்கு ஸ்டாலின் திராவிட மாடல், திராவிட மாடல் என்கிறார். இந்த திராவிட மாடலை உருவாக்கியதே கழகம் தான். கழக அரசு தான்.
ஸ்டாலின் அரசு பொறுப்பேற்று 16 மாதகாலம் ஆகிறது. எப்போது பார்த்தாலும் திராவிட மாடல், திராவிட மாடல் என்று மூச்சுக்கு முன்னூறு முறை பேசுகிறார். அப்படி என்ன திராவிட மாடலில் நீங்கள் செய்து விட்டீர்கள். ஒன்றுமே செய்யவில்லை. ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரியை கொண்டுவந்து சாதனை படைத்தோம்.
முதல் முதலாக விருதுநகரில் கொண்டு வந்தோம். இங்கே பிள்ளையார் சுழி போட்டதன் விளைவு தான், இதனுடைய ராசிதான் 11 மருத்துவக்கல்லூரியை தமிழகத்திற்கு கொண்டு வந்தோம். என்னிடம் ராஜேந்திரபாலாஜி சந்திக்கும் போது நீங்கள் எங்கே மருத்துவக்கல்லூரி அளிக்கிறீர்களே இல்லையோ.
விருதுநகர் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம். விவசாயிகள் நிறைந்த மாவட்டம். ஏழைகள் நிறைந்த மாவட்டம். இன்றைக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் மருத்துவக்கல்லூரியோடு சேர்ந்து மருத்துவ மனையும் இருக்க வேண்டும். அது உங்களால்தான் முடியும்.
கழக ஆட்சியில் தான் முடியும் என்று கோரிக்கை வைத்தார். அப்போது நான் கொடுக்க முடியுமா என்று எண்ணினேன். சரி முயற்சி செய்யலாம். அவர் அடிக்கடி என்னை வந்து பார்ப்பார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரையும் சென்று பார்ப்பார்.
எப்படியாவது இந்த மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார். அதனுடைய விளைவு இங்கே தேசிய நெடுங்சாலையிலே பிரமாண்டமான மருத்துவக்கல்லூரி மருத்துவமனை.
இன்றைக்கு தனியார் மருத்துவமனைக்கு இணையாக, சென்னை அப்போலே மருத்துவமனையில் என்ன சிகிச்சை அளிக்க முடியுமோ. அதே சிகிச்சையை விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொடுக்க முடியும். இதனை உருவாக்கி தந்த அரசு அம்மாவின் அரசு.
இந்த பகுதி அடிக்கடி விபத்து ஏற்படுகின்ற பகுதி.தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. இந்த பகுதி மக்களுக்கு தரமான, முறையான சிகிச்சை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் கிட்டதட்ட சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடித்துள்ளோம். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அவர் ( ஸ்டாலின்) திறக்கின்ற நிலைமை ஆகி விட்டது. நாம் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைப்பது போல ஆகிவிட்டது. இதுதான் வேதனையாக இருக்கிறது
நாம் கஷ்டப்பட்டு மருத்துவக்கல்லூரியை கொண்டுவந்து பிரமாண்டமான கட்டிடத்தை எழுப்பி மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கக்கூடிய ஒரு அற்புதமான திட்டத்தை கொண்டுவந்து திறக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
அதோடு அம்மா மற்றும் நான் முதலமைச்சராக இருக்கும் போது 7 சட்டக்கல்லூரியை கொண்டு வந்தோம். கிட்டதட்ட 76 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கழக ஆட்சியில் கொண்டுவந்துள்ளோம். பல்நோக்கு கல்லூரிகளை கொண்டு வந்துள்ளோம். ஐடி கல்லூரி, வேளாண்மை கல்லூரியை அளித்துள்ளோம்.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்