அமைச்சர்களை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்-தவறினால் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்

ஸ்டாலினுக்கு, எடப்பாடியார் அறிவுரை
சென்னை,
அதிகார போதையில் மக்களை இழிவாக பேசி வரும் அமைச்சர்களை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.தவறினால் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்று ஸ்டாலினுக்கு,கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுரை கூறி உள்ளார்.
விடியா தி.மு.க. அரசை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதி
அண்ணாமலை நகரில் உள்ள அம்மா திடலில் நேற்று நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி எழுச்சி உரையாற்றியதாவது:-
இன்றைக்கு திமுக அமைச்சர்கள் ஏதேதோ பேசி வருகிறார்கள். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூட்டத்தில் பேசும் போது ஓசியில் பேருந்து பயணம் செய்கிறார்கள் என்று பேசுகிறார். உங்கள் அப்பன் வீட்டு சொத்திலிருந்த நீங்கள் தருகிறீர்களா. மக்களின் வரிப் பணம்.
மக்களின் பணத்தை எடுத்து மக்களுக்கு நன்மை செய்கிறோம். அது எந்த ஆட்சியாக இருந்தால் இதுபோன்று தான் இருக்கும். அமைச்சரின் பேச்சுக்கு பெண்கள் பல பேர் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தார்கள். எங்களை அவமானப்படுத்தாதீர்கள். கொச்சைப்படுத்தாதீர்கள். எங்களுடைய வரிப்பணத்திலிருந்து தானே நீங்கள் அறிவித்தீர்கள் என்று கேட்டார்கள். அதுதான் உண்மை.
இன்னும் ஒருபடி மேலே சென்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒரு கருத்தை தெரிவிக்கிறார். இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் தருவோம் என்று சொன்னீர்களே என்று கேட்டபோது நாங்கள் சில்லறை மாற்றி வருகிறோம் என்று சொல்கிறார். இப்போது தான் சில்லறைக்கு ஆரம்பித்துள்ளார்கள். எவ்வளவு நக்கலாகப் பேசுகிறார்கள். ஓட்டு போட்ட மக்களுக்கு எப்படிப்பட்ட வார்த்தை கிடைக்கிறது என்று எண்ணிப் பாருங்கள்.
கவர்ச்சிகரமான அறிவிப்புகளை கொடுத்து, மக்களை ஏமாற்றி, கொல்லைப்புறத்து வழியாக ஆட்சியை பிடித்துவிட்டு ஆட்சிக்கு வந்ததும் இருமாப்போடு அமைச்சர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு எல்லாம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். மக்கள் தான் எஜமானர்கள்.
மக்கள் தான் நீதிபதிகள். எந்த அரசு, இருக்க வேண்டும், இருக்கக்கூடாது என்பதற்கு அதிகாரம் மக்களிடத்தில் இருக்கிறது. உங்களுடைய அமைச்சர்களை கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். தவறான வார்த்தைகளை பேச வேண்டாம். மக்களின் மனதை புண்படுத்த வேண்டாம். ஆட்சி அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது.
இன்னும் ஒரு படி மேல் சென்று முன்னாள் அமைச்சர், இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். அவர் ஒரு மதத்தை குறிப்பிட்டு அவர்கள் எல்லாம் விபச்சாரி என்று பேசுகிறார். எவ்வளவு கேவலமான வார்த்தை. இன்றைக்கு தமிழகத்தை பொறுத்தவரையில், கழகத்தை பொறுத்தவரையில் ஜாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி.
கழகத்தில் ஜாதியும் கிடையாது, மதமும் கிடையாது. எந்த மதத்தை இழிவுப்படுத்தி யார் பேசினாலும் அதனை எதிர்த்து குரல் கொடுக்கின்ற ஒரே கட்சி கழகமாகத் தான் இருக்கும். மக்களை புண்படுத்தும் நோக்கத்தோடு, அதிகார போதையிலே அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேசிவருகிறார்கள். சென்னையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஒரு நிர்வாகத்தில் புகுந்து கை, கால்களை உடைப்பேன் என்கிறார்.
இவருக்கு வாக்களித்து கை கால்களை உடைப்பது தான் மிச்சம். அந்த நபர் நான் திமுகக்காரன். நான் ஒட்டுபோட்டதற்கு கை கால்களைத் தான் முறிப்பீர்களா என்று கேட்கிறார். இன்னொரு அமைச்சர் பேசுகிறார். மாற்றுக்கட்சியிலிருந்து திமுகவுக்கு வந்தவர்கள் எல்லாம் விபச்சாரிகள் என்று .
உங்களுக்கு எல்லாம் இது தேவைதான்.ஏன் கழகத்திலிருந்து ஏன் சென்றீர்கள். எப்படி உங்களுக்குச் சான்றிதழ் வழங்குகிறார்கள் பாருங்கள். கழகம் மட்டும்தான் மக்களை மதிக்கக்கூடிய கட்சி. கட்சியினரை மதிக்கக்கூடிய கட்சி. நம்மிடையே இருந்து சென்றவர்களுக்குப் பட்ட பெயரைச் சூட்டி விட்டார்கள்.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.