பச்சோந்தியை விட அதிகமாக கலர் மாறியவர் ஓபிஎஸ் -கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசம்

சென்னை
கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி
கே.பழனிசாமி நேற்று தலைமைக்கழகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-
கேள்வி : இதே சூழல் நீடித்தால் கட்சியின் பெயரும், சின்னமும் முடக்கப்படுவதற்காக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறதே.
பதில் : எப்படி முடக்க முடியும். தேர்தல் ஆணையத்தில் யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். அதற்கு ஆதாரம் இருக்க வேண்டுமல்லவா.
கழகத்தை பொறுத்தவரையில் 2663 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் 96 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் எங்கள் தரப்பிலே இருக்கிறார்கள். மூன்று, நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை தவிர்த்து பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒரு கட்சிக்கு தேவை அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எங்களிடத்தில்
உள்ளார்கள். சட்ட ரீதியாக யாரும் எதுவும் செய்ய முடியாது.
கேள்வி : கட்சி நலன் சார்ந்து அவர்களும் ( சசிகலா) உள்ளே வர வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறாரே
பதில் : அவர் நினைத்து, நினைத்து பேசுகிறார். அவர் (ஓ.பன்னீர்செல்வம்) அவருக்கு சாதகமாக உள்ளதை பற்றி பேசுவார். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாற்றிக்கொள்வார். பச்சோந்தியை விட அதிகமாக கலர் மாறியவர்
அவர். தர்மயுத்தம் எதற்காக செய்தார். அதனால் தானே கட்சி அன்றைய தினம் பிரிந்தது. சட்டமன்றத்தில் இதயதெய்வம் அம்மாவினுடைய ரத்தத்தை வியர்வையாக சிந்தி கடைமடை பகுதி வரை வாக்காளர்களை சந்தித்து ஆட்சியை உருவாக்கினார். அந்த ஆட்சி என் தலைமையிலிருந்து கொண்டிருந்த போது, இவர் எதிர்த்து வாக்களித்தார்.
சட்டமன்றத்திலே நம்பிக்கை வாக்கெடுப்பு வரும்போது எதிர்த்து வாக்களித்தவர் ஓ.பன்னீர்செல்வம். இவர் எப்படி கழக
ஆட்சிக்கு துணை நின்றார். கட்சிக்கு விசுவாசம் இல்லாதவர். அம்மாவிற்கு விசுவாசம், விசுவாசம் என்கிறார். எங்கு விசுவாசம். அம்மா முதன்முதலாக 1989ல் சட்டமன்ற தேர்தலை சந்தித்தார். கழகத்தின் சார்பாக போடிநாயக்கனுர்
தொகுதியில் வேட்பாளராக நின்றார். அப்போது ஜானகி அணி சார்பாக வெண்ணிற ஆடை நிர்மலா வேட்பாளராக நின்றார். அப்போது இவர் ( ஓ.பன்னீர்செல்வம் ) யாருக்கு வேலை செய்தார். வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு தான் வேலை செய்தார். அதுவும் தலைமை ஏஜென்டாக இருந்துள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.
எனவே இப்படி பணியாற்றிவர் எப்படி அம்மாவுக்கு விசுவாசமாக இருக்க முடியும். நான் சேவல் சின்னத்தில் நின்றிருந்தேன். அம்மாவுடன் சேர்ந்து நானும் வெற்றி பெற்றேன். அன்றிலிருந்து இன்று வரை அணி மாறாமல் இருக்கிறேன். கட்சியில் கட்டுப்பாட்டோடு நாங்கள் நடந்து வருகிறோம். கட்சியை உயிராக நினைக்கிறோம்.
இப்படிப்பட்ட தொண்டர்கள் இருக்கின்ற கட்சிக்கு, இப்படிப்பட்ட தலைவர் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.