தற்போதைய செய்திகள்

மக்களுக்கு வேதனை மிகுந்த ஆட்சி ஸ்டாலின் ஆட்சி-திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆவேசம்

மதுரை,

எடப்பாடியார் ஆட்சியில் தமிழகம் முன்னோக்கி சென்றது இப்போது பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது மக்களுக்கு வேதனை மிகுந்த ஆட்சி ஸ்டாலின் ஆட்சி என்றும் கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் குற்றம்சாட்டி உள்ளார்.

கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கழக 50 ஆண்டு கால வரலாற்றில், 7 முறை தமிழகத்தில் கழகம் வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியை செய்தது. மக்களுக்காக தான் திட்டங்கள் என்பதை நிலை நிறுத்தி மக்களுக்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. குறிப்பாக கடந்த 2011 முதல் 2021 வரை அம்மா ஆட்சி காலத்தில் சரி, எடப்பாடியார் ஆட்சி காலத்திலும் சரி மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கி சாதனை படைத்துள்ளது.

குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் 53 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது, 12.50 லட்சம் தாய்மார்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. மூன்று லட்சம் உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களை எல்லாம் திமுக அரசு மூடு விழா கண்டு விட்டது.

எடப்பாடியார் கொண்டு வந்த குடிமராமத்து திட்டத்தின் மூலம் நீர் பரப்பளவு 4 சதவீத்திலிருந்து 6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதல் இடத்தில் இருந்தது. அதேபோல் சட்ட ஒழுங்கை எடுத்துக்கொண்டால் பெண்களுக்கான பாதுகாப்பான நகரமாக சென்னையும். கோவையும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்தியாவிலே சிறந்த காவல் நிலையங்களாக தமிழக காவல்துறை நிலையங்கள் முதலிடத்தை பிடித்தது, தொழில் முதலீட்டில் தமிழகம் முதலிடம். ஏற்றுமதியில் இந்திய அளவில் இரண்டாவது இடம். உணவு உற்பத்தியில் ஐந்து முறை மத்திய அரசு விருது. இந்தியா டுடே நிறுவனம் மூலம் தமிழகம் சிறந்த மாநிலமாக தொடர்ந்து மூன்று முறை தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக எடப்பாடியார் ஆட்சி காலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வண்ணம், தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு அதன் மூலம் வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டன. இப்படி எடப்பாடியார் ஆட்சி காலத்தில் தமிழகம் முன்னோக்கி இருந்ததை யாரும் மறுக்க முடியாது.

தற்போது விடியா திமுக அரசின் ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழகம் 15 வது இடத்தில் பின்னோக்கி சென்றுவிட்டது. அதேபோல் நீட் தேர்வு தேர்ச்சியில் தமிழகம் 15 வது இடத்தில் இருந்தது தற்போது 28வது இடத்தில் பின்நோக்கி சென்று விட்டது.

தூய்மையான நகரங்கள் பட்டியலில் தமிழகம் பின்னோக்கி சென்றுவிட்டது. சாலை போன்ற கட்டமைப்பு வசதி உருவாக்குவதில் தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. சட்டம், ஒழுங்கு தமிழகம் மோசமான நிலையில் உள்ளது கடந்த மாதம் 31 நாட்களில் 131 கொலைகள் தமிழகத்தில் நடைபெற்றது.

அதனால் தான் தமிழகத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் மும்பை போன்ற நகரங்களுக்கு செல்கின்றன. அது மட்டும் அல்ல தமிழகத்தில் கஞ்சா பழக்கங்கள் அதிகரித்து உள்ளன இதன் மூலம் 50 லட்சம் இளைஞர்கள் பாதிப்படைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது.

குறிப்பாக அம்மாவின் ஆட்சிக்காலத்திலும் சரி, எடப்பாடியார் ஆட்சிக்காலத்திலும் சரி மக்களுக்கு எந்த வரியும் உயர்த்தாமல் அந்த சுமையை தனதாக்கி கொண்டு, மக்களுக்கு வேண்டிய விலையில்லா திட்டங்களையும், பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களையும் வழங்கி மக்களுக்காக சாதனை மிகுந்த ஆட்சியை வழங்கினார்கள்.

ஆனால் இன்றைக்கு சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, கட்டுமான பொருள் விலை உயர்வு, பால் விலை உயர்வு இப்படி அடுக்கடுக்கான விலைவாசி உயர்வை தந்து மக்களுக்கு வேதனை மிகுந்த ஆட்சியை தான் ஸ்டாலின் தருகிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களுக்கு சேவகனாக இருக்க வேண்டும் அப்படித்தான் எடப்பாடியார் ஆட்சி செய்தார். ஆனால் இன்றைக்கு விடியா திமுக அரசு மக்களை மதிக்காமல், ஆணவத்துடன் மக்களை பார்த்து பேசி வருகின்றனர்.

இதற்கெல்லாம் முடிவு கட்டும் நாள் வரும் போது சரியான பாடத்தை திமுகவுக்கு புகட்டி, மீண்டும் எடப்பாடியாரை முதலமைச்சராக மக்கள் ஆக்குவார்கள்.

இவ்வாறு கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.