தற்போதைய செய்திகள்

உன்னதமான தாலிக்குத்தங்கம் திட்டத்தை ஏன் முடக்கினீர்கள்- டி.ஜெயக்குமார் கேள்வி

சென்னை

யானை பசிக்கு சோளப்பொறி போடுவது போல தாலிக்குத்தங்கம் திட்டத்தை மூடிவிட்டு மாணவிகளுக்கு ஏதோ ஆயிரம் ரூபாய் அளிக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். ஆயிரம் ரூபாய் அளிக்கும் திட்டத்தை கொண்டு வாருங்கள். ஆனால் உன்னதமான தாலிக்குத்தங்கம் திட்டத்தை ஏன் முடக்கினீர்கள் என்று தி.மு.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: தாலிக்குத்தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். பேருந்து பயணத்தை ஓசி பயணம் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளாரே.

பதில்: கிட்டதட்ட 14 லட்சம் பேருக்கு அளித்தோம். கிராமப்புறங்களில், நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு திருமணம் நடைபெறும் போது தாலிக்குத்தங்கம் என்பது அவர்களுக்கு ஒரு கேள்விக்குறி.

பணமும் அவர்களுக்கு பெரிய பிரச்சினை. அந்த நேரத்தில் தான் அம்மா அவர்கள் நான் இருக்கிறேன். கவலைபடாதீர்கள் என்று இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு உன்னதமான திட்டம் தாலிக்குத்தங்கம் திட்டத்தை கொண்டு வந்தார்.

இந்த திட்டத்தை நிறைவேற்றி எல்லோருக்கு ஒரு சவரன் தங்கத்தை அளித்தார். இந்த திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடியை செலவு செய்தார். அம்மா அவர்களால் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் மக்களால் அமோக ஆதரவை பெற்றது. இந்த திட்டத்தை மூடி விட்டார்கள்.

இந்த திட்டத்தில் பயனாளிகள் என்றால் அரசு பள்ளியில் படித்தவர்கள் மட்டுமல்ல, சுயநிதி பள்ளியில் படித்திருந்தாலும் சரி, எந்த கல்லூரியில் படித்திருந்தாலும் சரி அவர்களுக்கு இந்த பயன் கிடைத்தது. ஆனால் இந்த விடியா திமுக அரசு இதனை சின்னாபின்னப்படுத்தி இந்த திட்டத்தை முடக்கி விட்டார்கள்.

இந்த திட்டம் இப்போது இல்லை. திட்டத்தை நிறத்தி விட்டு தமிழகத்தில் உள்ள பெண்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறது இந்த அரசு. தற்போது கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் அளிக்கிறார்கள்.

சுயநிதிக்கு இது கிடையாது. ஆனால் நாங்கள் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்த சூழ்நிலையில் யானை பசிக்கு சோளப்பொறி போடுவது போல தாலிக்குத்தங்கம் திட்டத்தை மூடிவிட்டு மாணவிகளுக்கு ஏதோ ஆயிரம் ரூபாய் அளிக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். ஆயிரம் ரூபாய் அளிக்கும் திட்டத்தை கொண்டு வாருங்கள். ஆனால் உன்னதமான தாலிக்குத்தங்கம் திட்டத்தை ஏன் முடக்கினீர்கள்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.