எடப்பாடியார் தலைமையில் கழகம் மீண்டும் ஆட்சியமைப்பதை யாராலும் தடுக்க முடியாது

எதிர்க்ட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு
கோவை
அதிமுக வை உடைக்க கருணாநிதியாலேயே முடியவில்லை, ஸ்டாலினால் முடியுமா? என்றும்,
எடப்பாடியார் தலைமையில் கழகம் மீண்டும் ஆட்சியமைக்கும். இதை யாராலும் தடுக்க முடியாது என்றும் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறி உள்ளார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆசியுடன், கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியின் அறிவுறுத்தலின் பேரில் கழகம் அரை நூற்றாண்டை கடந்து வீறுநடை போடும் இத்தருணத்தில் நமது
புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் சார்பில், கழகம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க காரணம் ‘‘கழகம் வென்று வந்த சோதனைகளே’’… ‘‘கழகம் நிகழ்த்திக்காட்டிய சாதனைகளே’’ என்னும் தலைப்பில் கோயம்புத்தூர், மருதமலை
ஸ்ரீவள்ளியம்மன் திருமண மண்டபத்தில்நடைபெற்றது.
இந்த சிறப்பு பட்டிமன்றத்தை கழக தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மாவட்ட கழகச் செயலாளர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்எல்ஏ, அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.
பட்டிமன்றத்தை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடவுமான எஸ்பி.வேலுமணி தொடங்கி வைத்து பேசியதாவது:-
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அ.தி.மு.க எனும் இயக்கத்தை உருவாக்கி 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த இயக்கத்திற்காக எத்தனையோ பேர் ரத்தம் சிந்தியுள்ளனர். கருணாநிதி பற்றி உங்களுக்கு தெரியும். அ.தி.மு.க.வை புரட்சித்தலைவர் உருவாக்கிய போது இந்த இயக்கத்திற்கு பல்வேறு இடையூறுகளையும் சோதனைகளையும் ஏற்படுத்தினார்கள். அந்த சோதனைகளை எல்லாம் வென்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் பொற்கால ஆட்சியை புரட்சித்தலைவர் நடத்தினார்.
அவரது மறைவிற்குப்பிறகு கழகத்திற்கு ஏற்பட்ட பல்வேறு சோதனைகளை வென்று ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை தந்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சாதனை படைத்தார். இரு முறை முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற்ற ஒரே கட்சி அதிமுக மட்டுமே. இப்படி சோதனைகளுக்கிடையே சாதனை படைத்த இயக்கம் தான் அதிமுக.
கழகம் ஆரம்பிக்கப்பட்டு 31 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்து அதிமுக சாதனை படைத்துள்ளது. இலங்கை தமிழருக்காக பல்வேறு உதவிகளை செய்த ஒப்பற்ற தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். புரட்சித்தலைவரின் மறைவிற்குப்பிறகு கழகத்திற்கு ஏற்பட்ட பல்வேறு சோதனைகளை வென்ற புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழகத்தை ஒன்று சேர்த்து இரட்டை இலையை மீட்டு 1991ல் ஆட்சி கட்டிலில் அமர்ந்தார்.
அப்போது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல்வேறு சாதனை திட்டங்களை தந்து ஒவ்வொரு குடும்பத்திலும் அம்மா தந்த சாதனை திட்டங்கள் இருக்கின்றது. அதற்குப் பின்னால் 2011 இல் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தந்து தொடர் ஆட்சி தந்தார்.
கழக ஆட்சி காலத்தில் சத்துணவு திட்டம், 100 யூனிட் இலவச மின்சாரம், தாலிக்கு தங்கம், காலணி முதல் மடிக்கணினி திட்டம், அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கழக ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அம்மா அவர்களின் வழியில் எடப்பாடியார் அவர்கள் அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தினார்.
பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள், பசுமை வீடுகள் திட்டம், மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா மற்றும் எடப்பாடியார் ஆகியோர் கொண்டு வந்த திட்டங்கள் தான் மக்களிடம் இருக்கிறது.
பேரறிஞர் அண்ணாவால் ஏழை எளியோருக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான் திமுக. அந்த கட்சி இன்று ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கிக் கொண்டு உள்ளது.
திமுக ஆரம்பிப்பதற்கு முன் மிட்டா மிராசுதார்கள், ஜமீன்தார் மட்டுமே உயர் பதவியில் அமர முடியும் என்ற நிலை இருந்தது. அதனை மாற்றி ஏழை எளியோரும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் வர முடியும் என்ற நிலையை உருவாக்கினார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்த போது அது தொடர்ந்தது. அம்மா பதவிக்கு வந்த பிறகு யார் வேண்டுமானாலும் பொறுப்புக்கு வர முடியும் என்ற நிலையை உருவாக்கினார்.
பேரறிஞர் மறைவிற்கு பிறகு தி.மு.க.வை குடும்ப சொத்தாக கருணாநிதி மாற்றி விட்டார். ஆனால் ஸ்டாலின் அதிமுக சுக்கு நூறாக உடைந்து விட்டது என்கிறார். அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை உடைக்க கருணாநிதியாலேயே முடியவில்லை. ஸ்டாலினால் முடியுமா? உதயநிதியால் முடியுமா? இல்லை சபரீசன் குடும்பத்தால் தான் முடியுமா?
இன்று தமிழகத்தில் என்ன நடக்கிறது. திமுக ஆட்சியை பற்றி மக்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். அனைத்து தரப்பு மக்களும் வெறுக்க கூடிய கட்சியாக திமுக இருக்கிறது. மக்களை பற்றி கவலைப்படாமல் ஒன்றுமே தெரியாத விளம்பர முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார். யாருமே இந்த ஆட்சியில் நன்றாக இல்லை.
எந்த திட்டங்களையும் தராத முதல்வராக ஸ்டாலின் உள்ளார். கழக ஆட்சி காலத்தில் 50 ஆண்டுகள் காணாத சாதனை திட்டங்களை கோவை மாவட்டத்தில் நிறைவேற்றி கோவை மாவட்டத்தையே மாற்றி அமைத்துள்ளோம். திமுக ஆட்சியில் பழிவாங்குவது தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து என்ன திட்டங்களை தந்தது? ஏதாவது செய்தார்களா? தமிழகத்தில் ஏதாவது திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதா?
விளம்பரத்தால் மட்டுமே இந்த ஆட்சி நடக்கிறது. ஸ்டாலின் காலையில் ஒரு சூட்டிங் மாலையில் ஒரு சூட்டிங் என நடித்துக் கொண்டிருக்கிறார். இன்று தேர்தல் நடந்தாலும் கூட அதிமுக ஆட்சி அமைக்கும். எடப்பாடியார் தலைமையில்
மீண்டும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி அமையும். ஆகவே வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40-ம் வெல்வோம். சட்டமன்றத் தேர்தலில் இருநூறு தொகுதிக்கு மேல் வெற்றி பெற்று எடப்பாடியார் மீண்டும் முதல்வர் ஆவார். எடப்பாடியார் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கின்றனர். எடப்பாடியார் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.