விஞ்ஞான ரீதியில் கொள்ளையடிக்கும் கட்சி தி.மு.க -ஆளும் தி.மு.க.வினர் தொடந்து புலம்பல்

முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் கடும் தாக்கு
கன்னியாகுமரி
ஸ்டாலின் குடும்பம் மட்டுமே சந்தோசத்தை அனுபவிக்கிறது என்று தி.மு.க.வினர் தொடர்ந்து புலம்பி வருகின்றனர் என்று முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
கழகத்தின் பொன் விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஆரம்ப கால கழக தொண்டர்களை கவுரவிக்கும் வகையில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் தக்கலையில் நடைபெற்றது. கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.ஜாண் தங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு அவைத்தலைவர் சிவ குற்றாலம், இணைச்செயலாளர் மேரி கமலபாய், துணைச் செயலாளர் அல்போன்சாள், பொருளாளர் சில்வெஸ்டர், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் டாக்டர் தங்கமணி, போக்குவரத்து கழக மண்டல செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பத்மநாபபுரம் நகரக் கழக செயலாளர் மணிகண்டன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவிலும் மக்களுக்கு நன்மை செய்யும் ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான். எம்ஜிஆர் என்ற மாமனிதரின் மூன்றெழுத்து தாரக மந்திரம். அம்மா என்ற மூன்றெழுத்தும் மக்கள் மனதில் பதிந்து விட்டது. புரட்சித்தலைவரின் மறைவிற்கு பின்னர் அம்மாவின் உருவம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது. அம்மா அவர்களின் மறைவிற்கு தற்போது எடப்பாடியார் என்ற வரலாறு மக்கள் மனதில் வந்துவிட்டது.
இன்றைய தினம் விடியா திமுக அரசின் ஆட்சி ஒன்றரை ஆண்டு காலத்தில் நாட்டு மக்களின் மத்தியில் விலைவாசி ஏற்றம், சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, நியாய விலை கடையில் மக்கள் வாங்குகிற தரமற்ற அரிசி. இவை அனைத்தும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இருந்து வருகிறது.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பலவித இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு நல்ல திட்டங்களை விடியா தி.மு.க அரசு ஒவ்வொன்றாக முடக்கி வருகிறது. தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டி என புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தந்த பல்வேறு திட்டங்களை ரத்து செய்வது தான் விடியா திமுக அரசின் சாதனை.
திமுக ஆட்சியில் கலெக்சன், கமிஷன், கரப்ஷன் இதுதான் அவர்களது திராவிட மாடல். இந்த ஆட்சியில் புதிய திட்டம் ஏதும் இல்லை. இந்த ஆட்சியில் விவசாயிகள், வியாபாரிகள், அடித்தட்டு மக்கள் யாரும் நிம்மதியாக வாழ முடியாது. அவர்களுடைய தொழிலை நிம்மதியாக செய்ய முடியாத நிலையை திமுக அரசு உருவாக்கி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதி பெறாமல் 55 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இவற்றின் வருமானம் தனி நபர் ஒருவருக்கு சென்று வருகிறது. தக்கலையில் உள்ள அரசு மருத்துவமனை புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு கலை கல்லூரிகள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
தக்கலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள கட்டுமான பிரிவு தற்போது விடியா திமுக அரசில் ஆலங்குளத்திற்கு சென்று விட்டது. இத்தனைக்கும் இங்கு ஒரு அமைச்சர் இருக்கிறார். இதுகுறித்து எதுவும் பேசாமல் ஊமையாக இருக்கிறார்.
விடியா திமுக அரசின் நிலையை பாருங்கள். தமிழகத்தில் எங்கு சென்றாலும் வெடிகுண்டு கலாச்சாரம். ஆட்சி தொடங்கிய முதல் எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்து வருகிறது. திமுக ஆட்சியில் யாரும் அமைதியாக இருக்க முடியாது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள்.
திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கஞ்சா. அதை தடுக்க இந்த அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அது மட்டுமா ஆவின் பாலில் விஞ்ஞான ரீதியாக கொள்ளை. ஒரு லிட்டர் பாலில் 10 கிராம் அல்லது 20 கிராம் பாலை எடுத்து விடுவார்கள். விஞ்ஞான ரீதியில் கொள்ளையடிப்பதில் கைதேர்ந்த கட்சி எது என்றால் அது திமுக தான். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக ஏதாவது ஒரு நல்ல திட்டத்தை இதுவரைக்கும் கொண்டு வந்திருக்கிறதா?
தேங்காய்பட்டணம் துறைமுகம் அதிமுக ஆட்சியில் தான் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது திமுக ஆட்சியில் அந்த துறைமுகத்தின் நிலை என்ன? கன்னியாகுமரி மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக ஆக்குவோம் என்கிறார்கள். ஆனால் மக்களின் நிலையையும் கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் சாலைகள் எப்படி இருக்கிறது என்பதை அனைவரும் அறிவார்கள்.
திமுக தலைவராகவும், முதலமைச்சராகவும் இருக்கக்கூடிய ஸ்டாலினால் அவரது அமைச்சர்களை கூட கட்டுப்படுத்த முடியவில்லை. இதைத்தான் அவர் அவருடைய பொதுக்குழுவில் மனம் திறந்தபடி பேசினார். நாளும் பொழுது முடிந்தால் என்ன பிரச்சனை வருமோ என்று நிம்மதியாக தூங்க முடியவில்லை என்னுடைய உடம்பை பார்த்தால் உங்களுக்கே தெரியும் என பொது வெளியில் பேசி இருக்கிறார். மக்கள் எப்படி ஒரு முதலமைச்சராக ஸ்டாலினை ஏற்பார்கள். இதுதான் ஒரு முதலமைச்சர் பேசக்கூடிய பேச்சா?
திமுக அமைச்சர்கள் பொது வெளியில் நாகரிகம் இல்லாமல் பேசி வருகின்றனர். பெண்கள் பேருந்தில் பயணம் செய்ய இலவசம் என அறிவித்து விட்டு ஒரு மூத்த அமைச்சர் பெண்களை பார்த்து ஓசியில் தானே போறீங்க என கேட்கிறார். இதற்கு பெண்கள் ஒன்று சேர்ந்து சரியான பதிலடி கொடுத்தனர். நாங்கள் ஓசி இல்லை. அமைச்சரான நீங்கள் தான் எங்கள் வரிப்பணத்தில் ஓசியில் போகிறீர்கள் என சரியான பதிலடி கொடுத்தார்கள்.
புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் இதுபோன்ற அமைச்சர் யாராவது பேசி இருப்பார்களா? அப்படி யாராவது பேசியிருந்தால் புரட்சித்தலைவி அம்மா, அவர்களை என்ன செய்திருப்பார் என தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். தமிழக மக்கள் அனைவருக்கும் நன்மை செய்யும் ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என மக்கள் நன்றாக புரிந்து விட்டனர். இன்று முன்னாள் முதலமைச்சர், கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியாரை காண்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு பிறகு இன்று எடப்பாடியாரை பார்ப்பதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆவலோடு வருகின்றனர். திமுக ஆட்சியில் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே சந்தோஷத்தை அனுபவித்து கொண்டிருக்கிறது என திமுகவினரே தொடர்ந்து புலம்பி வருகின்றனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு கட்டப்பஞ்சாயத்து கொலை கொள்ளை என சொல்ல முடியாத நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. அதேபோன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் தாறுமாறாக ஏறி விட்டது.
இப்படி ஒவ்வொரு பொருட்களின் விலைகளும் ஏறினால் பொதுமக்கள் என்ன செய்வார்கள். விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு பிரச்சனை இப்படி அனைத்தையும் கட்டுப்படுத்த முடியாத ஒரு ஆட்சி நமக்கு தேவையா? அதிமுக என்பது ஒரு அருமையான இயக்கம். இந்த இயக்கத்தில் நாம் இணைந்தது முதல் தொடர்ந்து அயராது பணியாற்றினால் நமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த இயக்கத்தில் மட்டும் தான் சாதாரண தொண்டனும் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் ஏன் முதலமைச்சராகவும் ஆக முடியும். மற்ற கட்சிகளில் இதுபோன்று சாதாரண மனிதர்கள் முதலமைச்சராக ஆக முடியுமா? அதிமுக என்ற மாபெரும் ரயிலில் நாம் ஏறி பயணித்து விட்டால் இடையில் எங்கும் இறங்கக்கூடாது. அப்படி ஒருவேளை நீங்கள் இறங்கி விட்டால் மீண்டும் அந்த ரயிலில் ஏறுவது மிகவும் கடினம்.
தற்போது இந்த ரயில் சேலத்தில் துவங்கி ஜோலார்பேட்டைக்கு வந்து விட்டது. 2026ம் ஆண்டில் சென்னை கோட்டையை சென்றடைந்து விடும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கியது முதல் இன்று வரை சோதனைகள் தான் அதிகம். புரட்சித்தலைவர் ஆனாலும் புரட்சித்தலைவி அம்மா ஆனாலும் பல்வேறு சோதனைகளை தாண்டி தான் இந்த இயக்கத்தை, தொண்டர்களை கொண்டு வந்தனர். இப்போது சோதனைகள் வருவது புதிதல்ல. இந்த சோதனைகளை எல்லாம் எடப்பாடியார் சரித்திர சாதனை படைப்பார்.
தமிழக மக்களின் ஆதரவோடும், இரட்டை இலை மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி. அப்போது முதலமைச்சராக எடப்பாடியார் வருவதும் உறுதி. அதனால் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் மக்களுக்காக செய்த பல நல்ல திட்டங்களை எடுத்துச்சொல்லி வருகிற தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றிபெற்று ஆட்சி அமைப்போம் என அனைவரும் சபதம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் சுதா கே.பரமசிவன், ஒன்றிய கழக செயலாளர்கள் ஜீன்ஸ், வழக்கறிஞர் மார்ட்டின் ஜோஸ், மெர்லியன்று தாஸ், நிமால், ஜெயசுதர்சன், கடையால் மணி, ஜார்ஜ், ஆல்பர்ட் சிங், அழகராஜ் ஆன்றோ, அணி செயலாளர்கள் யூஜின் அருட்பிரகாஷ் சிங், மகாஜி செல்வகுமார், ராஜபீட்டர், ஜோஸ்பில் பின், ஆல்பர்ட், ரஞ்சித் குமார், ஜான், ஷைன் ஜோஸ், மனோ, காசிராஜன், விஜயகுமார், வினோஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.