தற்போதைய செய்திகள்

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

மதுரை

இடைத்தரகர்கள் இடையூறு இன்றி விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

கழக அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கடந்த அம்மா ஆட்சிக் காலத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் இடையூறு இன்றி விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. தற்போது நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் இருப்பதால் விவசாயிகள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். சோழவந்தான் தொகுதி தென்கரை, ஊத்துக்குளி, மட்டையான், மலைப்பட்டி, தென்கரை புதூர் ஆகிய பகுதிகளில் ஏறத்தாழ சுமார் 2,000 ஏக்கரில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது.

தற்போது 1,000 ஏக்கருக்கு மேல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தென்கரையில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் 40 கிலோ கொண்ட ஒரு மூட்டை 60 ரூபாய்க்கு கேட்பதாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது 60 ரூபாய் கொடுத்தாலும் கூட நெல் ஈரப்பதமாக இருப்பதாக கூறி திருப்பி அனுப்பி விடுவதால் விவசாயிகள் மனம் வேதனை அடைந்துள்ளனர். ஆனால் இடைத்தரகர்கள் மூலம் வியாபாரியிடம் ஒரு மூட்டைக்கு 100 ரூபாய் பெற்றுக்கொண்டு நெல் மூட்டைகளை பெற்றுக் கொள்வதாக விவசாயிகள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. இதனால் சோழவந்தானில் விவசாயிகள் நடுரோட்டில் நெல்லை கொட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். எனவே விவசாயிகளிடம் இடைத்தரகர் இல்லாமல் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 28.11.2020 அன்று மதுரை மாவட்டத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை கிடைப்பதற்கு தாமதமாகியுள்ளது. எனவே கூட்டுறவு சங்கங்களே நெல்லுக்கான தொகையை நேரடியாக பட்டுவாடா செய்ய வேண்டும். நெல் கொள்முதல் செய்வதற்கு தேவையான உபகரணங்களை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் நெல்லுக்கான தொகையை குறைத்து வழங்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு அரசை மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.