திண்டுக்கல்லில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உற்சாக வரவேற்பு

திண்டுக்கல்
திண்டுக்கல் வருகை தந்த கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலலமைச்சரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி. சீனிவாசன், நத்தம் இரா.விசுவநாதன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கழக ஒருங்கிணைப்பாளராக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் சமீபத்தில் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் திண்டுக்கலில் நேற்று நடைபெற்ற கழக நிர்வாகி இல்ல திருமண விழாவிற்கு ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். அப்போது அவருக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமையில் வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒருங்கிணைப்பாளருக்கு பொன்னாடை, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் தலைமையில் ரவுண்ட் ரோடு பகுதியில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுயர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின்னர் திருமண நிகழ்ச்சியில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதேபோல் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் இரா.விசுவநாதன், கே.ஏ.செங்கோட்டையன், ஆர்.பி. உதயகுமார் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமான கழக நிர்வாகிகள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.