தி.மு.க. இரட்டை வேடம் போடாமல் இருப்பது நல்லது

கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் பதிலடி
புதுச்சேரி
புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குதல் பிரச்சினையில் தி.மு.க. இரட்டை வேடம் போடாமல் இருப்பது நல்லது என்று கிழக்கு மாநில கழக செயலானர் அன்பழகன் பதிலடி கொடுத்துள்ளார்
இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் மின்துறையை தனியார்மயமாக்குவதில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என கேள்வி கேட்கும் உரிமை தி.மு.க.வுக்கு துளியும் இல்லை. கடந்த காலத்தில் மத்திய அரசு மின்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்ய கொள்கை முடிவெடுத்து சில அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் வெளியிட்டார்.
அதில் யூனியன் பிரதேசங்களில் மின் துறையை தனியார் மயமாக்கப்படும் என்றும் அறிவித்தது. மற்ற மாநிலங்களில் மின்துறை ஒழுங்குமுறை சட்டத்தில் ஒருசில மாற்றங்களை தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியின் முதலமைச்சராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமி, அவர்களும், அப்போதைய துணை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
முந்தைய அரசின் இந்த அறிவிப்பு மாநில அரசின் உரிமைகளை தடுப்பதாக உள்ளது என்றும், விவசாயிகள், ஏழை எளிய மக்களுக்கு இலவச மின்சாரம் மற்றும் மின் கட்டண சலுகைகளை தடுப்பதாக உள்ளது என்றும் அதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் தமிழகத்தில் மத்திய அரசின் மின் விநியோக சீர்திருத்த அறிவிப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டது.
அதேபோன்று புதுச்சேரி மாநிலத்தில் மின்துறையை படிப்படியாக தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியில் வந்தவுடன் முதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்திற்கு உள்ளேயும், சட்டமன்றத்திற்கு வெளியிலும் பல போராட்டங்களை நாங்கள் நடத்தினோம். மின்துறை ஊழியர்களுடன் இணைந்து பல கட்ட போராட்டங்களை வீதியில் இறங்கி அ.தி.மு.க போராடியது.
மின்துறை அலுவலகத்தின் வாயிலில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மறியல் போராட்டம் செய்ததை தெரிந்து கொண்டு, எங்களுக்குப்பின் தி.மு.க மாநில அமைப்பாளருடன் ஒரு சிலர் கலந்து கொண்டு மறியலில் ஈடுபட்டதை மறந்து விட்டு அ.தி.மு.க.வை குறை கூறுகிறார்.
சட்டமன்ற கூட்டத்தொடரில் எனது சார்பில் மின்துறை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டுவந்த தனிநபர் தீர்மானத்தை அரசின் தீர்மானமாக வேறு வழியில்லாமல் நிறைவேற்றப்பட்டது. மின்துறை தனியார் மயமாக்குதலில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என கேள்வி கேட்கும் தகுதி தி.மு.க.வுக்கு இல்லை. இவையெல்லாம் தெரிந்தும் மறுபடியும் இப்பிரச்சினையில் குழப்பம் ஏற்படுத்த தி.மு.க முயற்சி செய்கிறது.
அ.தி.மு.க.வை பொறுத்தமட்டில் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத மின்துறை ஊழியர்களின் அத்தனை போராட்டத்திற்கும் துணை நிற்கும். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்ற விதத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு அ.தி.மு.க துணை நிற்காது. தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.க சார்பில் தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ள நிலையில், யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்கக்கூடாது என ஏன் மத்திய அரசின் கவனத்திற்கு இதுவரையில் கொண்டு வரவில்லை.
கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து 2016 வரையில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படாத தி.மு.க.வின் மாநில அமைப்பாளர் அ.தி.மு.க.வின் மேற்கு மாநில செயலாளர் 2016-ம் ஆண்டு காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இல்லாததை கேலியாக சுட்டிக்காட்டுகிறார். அ.தி.மு.க.வை பொறுத்தமட்டில் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுடைய நலனுக்காக பிரச்சினைகளை முன்னெடுத்து செல்லும் ஒரு இயக்கமாகும்.
மின்துறை ஊழியர்களின் நலனுக்கு எதிராக தனியார் மயமாக்கப்படும் இப்பிரச்சனையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.
இதில், ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேவையற்ற விமர்சனங்களை செய்வதின் மூலம் மின்துறை ஊழியர்களின் இப்பிரச்சினை வேறு வழியில் திசை திருப்பப்படும். எனவே, தி.மு.க எதையாவது பேசி இப்பிரச்சினையை நீர்த்துப்போக வழி வகுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்
புதுச்சேரியை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதலமைச்சர் ரங்கசாமி மின்துறையை தொடர்ந்து அரசுத் துறையாக செயல்பட எடுத்து வரும் நடவடிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் துணை நிற்க வேண்டும். மின் துறை ஊழியர்களின் வாழ்வாதார உரிமை பிரச்சனையில் தி.மு.க மலிவு விளம்பர அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
மத்தியில் கடந்த தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி அரசில் உங்கள் பணம் உங்கள் கையில், நீட் தேர்வு, போன்ற பல்வேறு விஷயங்களில் தி.மு.க.வின் இரட்டை வேடம் போன்று புதுச்சேரி மாநில மின்துறை தனியார் மயமாக்குதலிலும் தி.மு.க. இரட்டை வேடம் போடாமல் இருப்பது நல்லது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.