தற்போதைய செய்திகள்

கழகத்தினர் எவரும் வேறு கட்சிக்கு போக மாட்டார்கள்-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம்

சென்னை,

ஸ்டாலின் வேண்டுமானால் எதையாவது சொல்லலாம். ஆனால் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் எவரும் வேறு எந்த மாற்றுக்கட்சிக்கும் போக மாட்டார்கள் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களின் திருக்கோவிலாக இருக்கின்ற ஒவ்வொரு தொண்டனும் பூஜித்து வணங்கக்கூடிய புரட்சித்தலைவர், இதயதெய்வம் அம்மா ஆகியோர் இருக்கக்கூடிய புரட்சித்தலைவர் மாளிகையை ஓ.பி.எஸ்., மற்றும் அவருடைய அடியாட்கள் அடித்து நொறுக்கினார்கள்.

அத்தகையவர்கள் தலைமைக்கழகத்திற்கு வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. மேலும் ஓ.பி.எஸ்.க்கும் தலைமைக் கழகத்திற்கும் எந்தவிதமான சம்மந்தமும் கிடையாது. தலைமைக்கழகத்தின் பாதுகாப்பு கருதி டி.ஜி.பி.யிடம் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. டி.ஜி.பி.யும் இது சம்பந்தமாக ஆவன செய்வதாக உறுதி அளித்திருக்கிறார்.

கேள்வி: ஒருங்கிணைப்பாளர் பதவியை மீண்டும் கொண்டுவர ஓ.பி.எஸ். முயற்சி மேற்கொள்கிறாரா?

பதில்: உயர்நீதிமன்றத்தில இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தெளிவான ஒரு தீர்ப்பினை வழங்கியது. அந்த தீர்ப்பின்படி பார்த்தால் அவர் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. எனவே அப்படி முயற்சி செய்தால் அவர் நீதிமன்ற உத்தரவை மீறுவதாக அர்த்தமாகும்.

கேள்வி: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சசிகலாவை சந்தித்திருப்பது குறித்து?

பதில்: விஷேங்களுக்கு வெற்றிலைப்பாக்கு கொடுத்து அழைப்பது வழக்கம். ஆனால் அவர்கள் இவருக்கு சாக்லெட் கொடுத்து அழைத்திருக்கிறார்கள். மேலும் நண்பர் வைத்தியலிங்கத்திற்கு அ.தி.மு.க.வில் எந்த வேலையும் இல்லை. அதனால் அ.ம.மு.க.விற்கு அவரை அழைத்திருக்கலாம்.

கேள்வி: ஓ.பி.எஸ். மேல்முறையீடு செய்திருக்கிறாரே?

பதில்: உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதன் அடிப்படையில் பார்த்தால் அவர்கள் அடிப்படை உறுப்பினர்கள் கூட கிடையாது.

கேள்பி: ஓ.பி.எஸ். தான் ஒருங்கிணைப்பாளர் என்று தொடர்ந்து அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறாரே?

பதில்: இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். அதேபோல் தேர்தலில் வாக்களிக்க வந்த பொதுமக்கள் மீதும், காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்திய ஒரு ஆளுங்கட்சி ரவுடியை பிடித்து கொடுத்த என் மீது அன்று இரவே நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் அ.தி.மு.க தலைமை கழகத்தின் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த பொருட்களையெல்லாம் சூறையாடிய ஓ.பி.எஸ். மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதிலிருந்து எங்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்று இருக்கிறார்கள்.

தலைமைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது சம்பந்தமாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் நீதிமன்றத்திற்கு சென்ற பிறகு தான் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள்.

ஆனால் அதற்கு முன்னாடி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது. எங்களுக்கு ஒரு சட்டம், ஓ.பி.எஸ்., மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி. பிரபாகர் ஆகியோருக்கு ஒரு சட்டம் என்ற அடிப்படையில் இருக்கிறார்கள்.

சட்டம் என்பது எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும். சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம் என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். மேலும் யாரெல்லாம் தலைமைக்கழகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினார்கள் என்பது கண்கூடாக சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. இவற்றையெல்லாம் பென்ட்டிரைவில் பதிவு செய்து கொடுத்து விட்டோம்.

ஆனால் இன்னும் அவர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? இதுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒவ்வொரு தொண்டனின் கேள்வியாக இருக்கிறது. ஓ.பி.எஸ்சுக்கு மட்டும் தி.மு.க. வெண்தாமரை வீசுகிறதா? அவருடைய இத்தகைய செயல்களை ஆளுங்கட்சி ஊக்கப்படுத்துவதாகத் தானே இருக்கிறது. தாக்குதல் நடத்தியவர்களை ஏன் இதுவரை கைது செய்யவில்லை?

கேள்வி: ஓ.பி.எஸ் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லி லெட்டர் பேடு மூலம் அறிக்கை விடுகிறாரே?

பதில்: ஓ.பி.எஸ்சை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து இப்படி செய்வது சட்டவிரோதமான செயலாகும். நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்.

கேள்வி: அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதாக ஸ்டாலின் சொல்கிறாரே?

பதில்: அ.தி.மு.க.வை சேர்ந்த எவரும் தி.மு.க.வுடன் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்வதில்லை. இதனை ஆணித்தரமாக சொல்கிறேன். எடப்பாடியார், தி.மு.க.வை சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் பேசிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார். உடனே ஆர்.எஸ்.பாரதி, எங்களுடன் 50 பேர் தொடர்பில் இருப்பதாக சொல்கிறார். இந்த பேச்சையெல்லாம் நீங்கள் யோசித்து பாருங்கள். அவர் ஆர்.எஸ்.பாரதி இல்லை.

ரீல் சுற்றும் பாரதி. ஸ்டாலின் வேண்டுமானால் எதையாவது சொல்லலாம். ஆனால் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் எவரும் வேறு எந்த மாற்றுக்கட்சிக்கும் போக மாட்டார்கள். தி.மு.க.வின் பி டீமாக ஓ.பி.எஸ்., சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் இருக்கிறார்கள். இது உள்ளங்கை நெல்லிக்கனியாக நன்றாகவே தெரிகிறது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.