சேலம் புறநகர் மாவட்டத்தில் கழக அமைப்பு தேர்தல்-இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஆலோசனை

சேலம்
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில், கழக அமைப்பு தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் இரண்டு கட்டங்களாக கழக அமைப்பு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதற்கட்டமாக 13, மற்றும் 14-ந்தேதி சேலம், கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, உள்ளிட்ட 15 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள், பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள், நகராட்சிக்குட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட வட்ட கழக நிர்வாகிகள் ஆகியவற்றில் தேர்தல் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
சேலம் புறநகர் மாவட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன், மாநகர் மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கழக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., கழக அமைப்பு செயலாளர் திருப்பூர் சிவசாமி ஆகியோர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 37 ஒன்றியங்கள், 4 நகரங்கள், 33 பேரூராட்சி, 8 பகுதி ஆகியவற்றிற்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் ஆணையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் ஆகியவற்றுக்கான கிளை மற்றும் வார்டு கழக செயலாளர்கள் பங்கேற்றனர்.
இதில் கழக உட்கட்சித் தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய விண்ணப்ப படிவம், வாக்கு சீட்டுகள் ஆகியவைகளை மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் அந்தந்த தேர்தல் நடத்தும் ஆணையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் தேர்தல் நடத்த எந்த வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளரும், சேலம் புறநகர் மாவட்ட கழக அமைப்பு தேர்தல் பொறுப்பாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான சி.செம்மலை, சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், ஓமலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணி, வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜமுத்து, ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன், சங்ககிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன், ஏற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், திருப்பூர் மாவட்ட கழக அமைப்பு தேர்தல் ஆணையாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.