தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு
சென்னை
தமிழகத்தில் வெட்டு, குத்து, கொலை தான் நடக்கிறது. தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.
சென்னை மாங்காடு பகுதியில் கழக உட்கட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை வழங்கிய பிறகு முன்னாள் அமைச்சரும், வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி: வேளாண் சட்டம் வாபஸ் பெற்றது பா.ஜ.க.வின் தோல்வி என்று சமூக வலைதலங்களில் குறிப்பிட்டு வருகிறார்களே.
பதில்: இன்றைக்கு தமிழகத்தின் விவசாயிகளின் நிலை என்ன. வேளாண் சட்டத்தை பற்றி வாய்கிழிய பேசுகிறார்களே. பொட்டாஷ் உரம் ரூ.1200க்கு விற்பனை ஆகிறது.
இன்றைக்கு கட்டுமான பொருட்களின் விலை என்ன. அத்தியாவசிய பொருட்களின் விலை என்ன. மளிகை சாமான்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் சந்தி சிரிக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு இருக்கிறது. யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இன்றைக்கு தமிழகத்தில் இருக்கிறது.
விசாரணைக்கு அழைத்து சென்ற மணிகண்டன் என்ற மாணவர் இறக்கிறார். அந்த அளவுக்கு தமிழகத்தில் அராஜகத்தின் உச்சகட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. வெட்டு, குத்து, கொலை, பலாத்காரம். இதுதான் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
கேள்வி: அண்ணா பிறந்தநாளில் பல கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதே.
பதில்: எங்களை பொறுத்தவரையில் குற்றங்களின் தன்மையை ஆராய்ந்து அந்த வகையில் தான் விடுதலை செய்ய வேண்டும். நாங்கள் கடந்த காலங்களில் அதுபோன்று தான் ஒரு அளவுகோலை வைத்து செய்தோம். சமூக நலன், மாநிலத்தின் நலன், பொதுமக்களின் நலன் என்ற அடிப்படையில் கண்ணும் கருத்துமாக இருந்து அரசு செயல்பட வேண்டும்.
இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து.அரசியல் அமைப்பு அடிப்படையில் ஆளுநர் செயல்படுகிறார். இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் ஆளுநரை சந்தித்து விட்டு நீட்டுக்கு விதிவிலக்கு கேட்டோம் என்று தமிழக அரசு தெரிவித்தது.
ஆனால் ஆளுநர் தரப்பிலிருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பாக சந்தித்தார் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் எவ்வளவு முரண்பாடு உள்ளது. இது மக்களை ஏமாற்றும் செயல்.
இன்றைக்கு நீட் குறித்து யாராவது பேசுகிறார்களா. இந்த கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தில் நீட் தொடர்பாக ஏதாவது குரல் எழுப்பினார்களா. நீட்வேண்டாம் என்று யாராவது குரல் கொடுத்தார்களா.
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான உரிமைக்கு குரல் கொடுத்தார்களா? மேகதாது குறித்து குரல்கொடுத்தார்களா.? எந்த விஷயத்திற்கு குரல் கொடுத்தார்கள்.
இவர்களுக்கு தமிழக நலன் குறித்து கவலையில்லை. இதுமட்டும் தெளிவாக தெரிகிறது. 37 எம்பிக்கள் இருந்தும் தமிழகத்தின் உரிமை குறித்து ஒரு வார்த்தை பேசினார்களா. எதிர்க்கட்சியாக இருக்கும் போது 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் வாய்கிழிய பேசினார்கள். இப்போது விடுதலை செய்ய வேண்டியது தானே. தி.மு.க 2006-ல் ஆட்சியில் இருக்கும் போது நளினிக்கு குழந்தை இருப்பதால் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்று அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அமைச்சரவையில் முடிவு செய்தார். மற்றவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று சொன்னார்.
நாங்கள் ஆளும் கட்சியாக இருக்கும் போது 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டார்கள்.இப்போது ஏன் 7 பேர் விடுதலை ஏன் பேசவில்லை. எடுத்த முடிவிலிருந்து நாங்கள் பின்வாங்கவில்லை. பேக் அடிக்கும் பழக்கம் எங்களுக்கு கிடையாது. யூட்டன் அடிக்கும் பழக்கம் எங்களுக்கு கிடையாது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.