தமிழகம்

வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாததை மறைக்க கழகத்தினர் மீது பொய் வழக்கு- எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சேலம்,
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாததை மறகை்கவே கழகத்தினர் மீது விடியா தி.மு.க. அரசு பொய் வழக்கு போடுகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைய தினம் தி.மு.க. அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு, மற்றும் அவரின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக சோதனை நடைபெற்று வருகிறது. இது ழுழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடக்கிறது.

கழகத்தை நேரடியாக எதிர்க்க முடியாத தி.மு.க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மூலமாக முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அவரின் நண்பர்களின் வீடுகளில் ரெய்டு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இன்றைக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் நடைபெறும் ரெய்டு வன்மையாக கண்டிக்கத்தக்கது. கழக அமைப்பு தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் சுமார் 35 மாவட்டங்களில் சிறப்பான முறைகளில் கழக அமைப்பு தேர்தல் நடைபெற்றுள்ளன.

எழுச்சியோடு நடைபெற்று கொண்டிருக்கிறது.
கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், ஏராளமமான பேர் கழக அமைப்பு தேர்தலில் கலந்து கொண்டு கிளைக்கழகம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வரும் இந்த வேளையில் தி.மு.க அரசு திட்டமிட்டு முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ரெய்டு நடத்துவது கண்டிக்கத்தக்கது. இன்றைக்கு கழகத்தின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருப்பதை பொறுத்துக்கொள்ள அவர்களால் முடியவில்லை.

தி.மு.க தேர்தல் அறிக்கையில் நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளை வெளியிட்டார்கள். சுமார் 525 அறிவிப்புகளை வெளியிட்டார்கள். ஒரு சில அறிவிப்புகள் மற்றும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு மூன்று, நான்கு அறிவிப்புகள் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மற்ற எந்த அறிவிப்புகளும் நிறைவேற்றப்படவில்லை. நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி கொல்லைப்புறத்தின் வழியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட தி.மு.க அரசு அவற்றை நிறைவேற்ற முடியாத இந்த சூழ்நிலையை மறைப்பதற்காக இன்றைக்கு முன்னாள் அமைச்சர்கள், கழகத்தினர் மீது பொய் வழக்கு போட்டு கொண்டிருக்கிறது.இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.