வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, டிச.16-
தென் மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும், வங்க கடலில் நாளை 17-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக இன்று 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடமாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்) வருமாறு:-
அகரம் சீகூர் (பெரம்பலூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு) தலா 3, தென்பரநாடு (திருச்சி), மரக்காணம் (விழுப்புரம்), புவனகிரி (கடலூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), அமராவதி அணை (திருப்பூர்), பர்லியார் (நீலகிரி) தலா 2, குன்னூர் பி.டி.ஓ (நீலகிரி), செட்டிக்குளம் (பெரம்பலூர்), திருப்பத்தூர் (சிவகங்கை), சேத்தியாத்தோப்பு (கடலூர்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), வேப்பூர் (கடலூர்), பாம்பன் (ராமநாதபுரம்), வானூர் (விழுப்புரம்), குன்னூர் (நீலகிரி),
வீரகனூர் (சேலம்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), கடல்குடி (தூத்துக்குடி), விளாத்திக்குளம் (தூத்துக்குடி), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), ஏற்காடு (சேலம்), கெட்டி (நீலகிரி), தொழுதூர் (கடலூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்), வல்லம் (விழுப்புரம்), கடவனூர் (கள்ளக்குறிச்சி) தலா 1. 19-ந்தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 16-ந்தேதி இலங்கைக்கு தெற்கே பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நாளை (17-ந்தேதி) தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக நாளை (17-ந்தேதி) முதல் 19-ந்தேதி வரை தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.