சிறப்பு செய்திகள்

மிகப்பெரிய வெறியாட்டதை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தி.மு.க. அரசு – கழக ஒருங்கிணைப்பாளர்கள் எச்சரிக்கை

சென்னை

கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை, தற்சமயம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் உட்கட்சி தேர்தல் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும், உற்சாகத்தோடும் பெருந்திரளான தொண்டர்கள் ஆர்வத்தோடும் கலந்து கொண்டு 35 கழக மாவட்டங்களில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த தேர்தலையொட்டி, உளவுத்துறையின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் முன்பை காட்டிலும் கூடுதலாக மெருகேற்றிக்கொண்டு, பலமூட்டிக்கொண்டு வீறுகொண்டு எழுகிறது என்ற செய்தியை தாங்கிக்கொள்ள முடியாத, பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க. அரசு, அரசியல் வன்மத்தையும், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும், லஞ்ச ஒழிப்புத்துறையை தன்னுடைய ஏவல் துறையாக மாற்றி, அன்பு சகோதரர் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எம்.எல்.ஏ.வின் இல்லத்திலும், அவருடைய நண்பர்கள், உறவினர்கள் இல்லங்களிலும் சோதனை என்கின்ற பெயரில் மிகப்பெரிய வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இதை நாங்கள் அடிப்படையிலேயே வன்மையாக கண்டிக்கின்றோம்.

அன்பு சகோதரர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர் போன்ற முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களிலும், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் இல்லங்களிலும், அதேபோல், சேலம் புறநகர் மாவட்ட புரட்சித்தலைவி பேரவை செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவருமான ஆர்.இளங்கோவன் இல்லத்திலும் நடைபெற்ற சோதனைகளை தொடர்ந்து, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தற்போது தங்கமணியின் இல்லத்தில் நடைபெற்று கொண்டிருக்கக்கூடிய சோதனையானது அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது தி.மு.க. அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை.

அண்ணா காலத்தில் இருந்து அரசியல் களமாடி கொண்டிருக்கக்கூடிய எத்தனையோ முதுபெரும் தலைவர்கள் தி.மு.க.வில் உள்ளபோது, தன்னுடைய குடும்பம் மட்டும் தான் ஆள வேண்டும், வாழ வேண்டும் என்று அரசியல் செய்து கொண்டிருக்கக்கூடிய தி.மு.க.வில் தற்போது ஒரு மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதி தான் அடுத்த தலைவர் என்பதை முன்னிலைப்படுத்தும் விதமாக, அடுத்தக்கட்ட தலைவர்கள் பேச ஆரம்பித்துள்ள இந்த சூழ்நிலையில், அரசியல் விமர்சகர்களும், பத்திரிகை ஊடக செய் திகளும், தற்போதைய அரசை ஸ்டாலினுடைய மருமகன் சபரீசன் தான் வழிநடத்தி கொண்டிருக்கிறார் என்ற செய்தியும் பரவலாக பேசப்பட்டு கொண்டிருக்கக்கூடிய இந்த நேரத்தில், இதையெல்லாம் மடைமாற்ற வேண்டும் என்பதற்காக பழைய தந்திரமாம் தி.மு.க.வின் ஒரே தந்திரமாம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற ஆயுதத்தை தற்போதைய தி.மு.க. முதலமைச்சரும் கையில் எடுத்திருக்கிறார்.

கடந்த நான்கரை ஆண்டுகால அம்மாவின் ஆட்சியில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் சந்தித்து, மக்கள் நலன் சார்ந்த அரசாக அம்மாவின் அரசு தன்னுடைய நல்லாட்சியை முடித்திருக்கிறது. ஆனால், பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கக்கூடிய தி.மு.க. அரசு, எதிர் வருகின்ற 17-ம் தேதி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக போர்ப்படை தளபதிகளை பார்த்து அஞ்சுவதன் வெளிப்பாடு தான் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை.

பேசினால் குண்டர் சட்டம், கருத்து தெரிவித்தால் குண்டர் சட்டம், தீவிரமாக களமாடினால் வழக்கு, தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்து, கொள்கை பிடிப்போடு இருந்தால் லஞ்ச ஒழிப்பு சோதனை என்று புறவாசல் வழியாகவே பயணம் செய்த தி.மு.க. இந்த நிகழ்வையும் புறவாசல் வழியாகவே கையாண்டு கொண்டிருக்கிறது.

50 ஆண்டுகால அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வரலாற்றில் ஆசி வழங்கி கொண்டிருக்கக்கூடிய இருபெரும் தலைவர்களும் சந்திக்காத சோதனைகள் அல்ல, சந்திக்காத துரோகங்கள் அல்ல, சந்திக்காத வழக்குகள் அல்ல. அந்த வழியில், அவர்கள் பாசறையில் பயின்ற நாங்களும், எங்களின் கழக உடன்பிறப்புகளும், உங்களுடைய இந்த சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சிவிட மாட்டாம். முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடராத வழக்குகளா? எங்களுடைய அம்மா வெற்றிபெறாத வழக்குகளா?

அந்த வழியில், தாய்வழி வந்த சொந்தங்களெல்லாம் ஓர்வழி நின்று, நேர்வழி சென்றால், நாளை நமதே என்ற புரட்சித்தலைவரின் வைர வரிகளுக்கு ஒப்பாக, இந்த வழக்குகளை சட்டப்படி சந்தித்து வெற்றிவாகை சூடி, புடம்போட்ட தங்கங்களாக, நெருப்பில் பூத்த மலர்களாக, உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவையாக, நீரில் மிதக்கும் மேகங்களாக மீண்டு வருவோம்.

அதற்குண்டான மனோ பலத்தை எங்களுடைய இருபெரும் தலைவர்களும், உடல் திண்மையை, மன வலிமையை கழக உடன்பிறப்புகளும் தருவார்கள் என்று சொல்லி, இந்த இயக்கமும், நாங்களும் யாரையும் எந்த நேரத்திலும் கைவிட மாட்டோம். சோதனையில் தோளோடு தோள் நிற்போம் என்று சொல்லி, மீண்டும் ஒருமுறை தி.மு.க.வின் இந்த பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எங்களுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் தி.மு.க. அரசு ஈடுபடாமல், நேர்மறை அரசியலை முன்னெடுத்து, தேர்தலில் உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்காவது நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முன்னெடுப்பை முனையுங்கள் என்று வலியுறுத்தவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.