சிறப்பு செய்திகள்

நிதித்துறை அலுவலக வளாக பெயர் மாற்றம் அராஜகத்தின் உச்சம்

தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர்கள் கடும் கண்டனம்

சென்னை,

கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

`எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்’ `இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்பதற்கேற்ப விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், மாணவ மாணவியருக்கு மிதிவண்டி வழங்கும் திட்டம், மடிகணினி வழங்கும் திட்டம், அம்மா உணவகங்கள் மூலம் குறைந்த விலையில் உணவு வழங்கும் திட்டம்,

வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், சட்ட போராட்டத்தின் மூலம் காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட செய்தது மற்றும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியது, 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு சட்ட பாதுகாப்பினை பெற்றுத்தந்தது என எண்ணற்ற திட்டங்களை தமிழக மக்களுக்கு தந்து, தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றதோடு, தன் வாழ்க்கையை தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

தமிழக அரசியல் வரலாற்றில், தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களை கவுரவிக்கும் விதத்தில் நந்தனத்தில் அமைந்துள்ள நிதித்துறை வளாகத்திற்கு `அம்மா வளாகம்’ என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சிக்காலத்தில் பெயர் சூட்டப்பட்டது.

ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக வளாகக் கட்டடத்தில் 10 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்ட இரண்டு தளங்களை திறந்து வைக்கும்போது `சென்னை நந்தனம்’ அம்மா வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக வளாகம்” என்று 16-06-2020 நாளிட்ட செய்தி வெளியீடு எண். 426-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு வெளியிடப்பட்ட தொலைபேசி கையேட்டில், கருவூல அலுவலகம், ஓய்வூதியம் வழங்கல் அலுவலகம், சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகம் (தெற்கு), மாநில அரசு தணிக்கைத்துறை, கூட்டுறவு தணிக்கை இயக்ககம், ஓய்வூதிய இயக்ககம் ஆகியவற்றின் முகவரியிலும் “Amma Complex” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

`அம்மா வளாகம்’ என்ற பெயரில் இயங்கி வரும் அந்த நிதித்துறை வளாகத்தில் தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழ்நாட்டின் அமைச்சராகவும் பணியாற்றிய பேராசிரியர் க.அன்பழகனின் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாகவும், அந்த வளாகத்திற்கு ஏற்கனவே உள்ள ‘அம்மா வளாகம்’ என்ற பெயரை நீக்கிவிட்டு `பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை’ என்று பெயர் சூட்டப்பட உள்ளதாகவும் இன்று அனைத்து பத்திரிகைகளிலும் செய்தி வந்துள்ளது.

பேராசிரியர் க.அன்பழகன் நிதித்துறை உட்பட பல்வேறு இலாக்காக்களின் அமைச்சராக இருந்தவர். அவருக்கு அங்கு சிலை வைப்பதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை. அதே சமயத்தில், ‘அம்மா வளாகம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த வளாகத்தின் பெயரை மாற்றி `பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை’ என்று வைப்பது நாகரிகமற்ற செயல். ஒரு பெயரை எடுத்துவிட்டு இன்னொரு பெயரை வைப்பது என்பது, ஒருவரை இழிவுபடுத்திவிட்டு இன்னொவருவரை புகழ்வது போல் ஆகும். இதுபோன்ற செயல் தமிழ் பண்பாட்டிற்கு, தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான செயல்.

அம்மா அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்லாமல் ஒரு தேசிய தலைவராக அனைவராலும் கருதப்பட்டார். இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் அம்மாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்து சென்றிருக்கிறார்கள். வட இந்திய மாநிலத்திற்கு சென்று தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட ஒரே தமிழின தலைவர் அம்மா அவர்கள்.

இப்படிப்பட்ட தலைவரின் பெயரில் அமைந்துள்ள வளாகத்தின் பெயரை மாற்றம் செய்யப்படுகிறது என்று வந்துள்ள செய்தியில் உண்மை இருப்பின் அது அநாகரிகத்தின் உச்சம். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம். இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

எனவே `அம்மா வளாகம்’ என்ற பெயரை மாற்றி `பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை’ என்று வைப்பதை தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக கைவிட வேண்டும் என்றும், புதியதாக வேறு மாளிகை தமிழ்நாடு அரசால் கட்டப்படும் போது அதற்கு அவர் பெயரை சூட்டலாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.