கிறிஸ்தவ மக்களுக்கு கழகம் உறுதுணையாக இருக்கும் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

சென்னை
கிறிஸ்தவ மக்களுக்கு கழகம் உறுதுணையாக இருக்கும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்தார்.
சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள ஏழைகளின் சிறிய சகோதரிகளின் முதியோர் இல்லத்தில் கழகம் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
அனைவருக்கும் கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கழகத்தின் சார்பாக பல்வேறு நிலைகளில் பணியாற்றி கொண்டிருக்கின்ற பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
இங்கு பேசிய சகோதரர்கள் பொதுவாக கட்சியில் உள்ளவர்களை பணியாளர்கள் என்று சொன்னார்கள். கழகத்தை பொறுத்தவரை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காலம் முதல் இன்று வரை கீழ் நிலையில் இருந்து கிளை கழகத்திலிருந்து, பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்ற அத்தனை பேரும் மக்கள் பணியாளர்கள் தான்.
எங்களுடைய கட்சியை பொறுத்தவரை ஜாதி, மதம் பார்ப்பதில்லை. அனைத்து நிலையில் உள்ள மக்களுக்கும் உதவும் ஒரே எண்ணத்தோடு, இந்த இயக்கத்தை உருவாக்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் இந்த இயக்கம் தொண்டு உள்ளத்தோடு மகோன்னத கட்சியாக நடைபெற வேண்டும் என்றுதான் 50 ஆண்டு காலம் தங்களுடைய வாழ்க்கையில் நிலை நிறுத்தினார்கள்.
அந்த வகையில், நாங்களும் எங்களால் முடிந்த அளவிற்கு உதவி செய்கின்ற நிலையை எங்களுக்கு வழிகாட்டியாக இருந்த, தலைவர்களாக இருந்திருக்கின்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் அந்த பணியை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
புரட்சித் தலைவர் இருந்த காலத்தில் தான், மதம் மாறிய நம்முடைய கிறிஸ்தவ மக்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கினார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் புனித பயணமாக ஜெருசேலம் செல்வதற்கான திட்டத்தை துவக்கி
வைத்தார்.
சென்ற வருடத்திற்கு முன் வருடம், இதே கிறிஸ்துமஸ் விழாவில், எங்களுடைய கவனத்திற்கு, முதல்வர் கவனத்திற்கு, புனித பயணம் செல்வதற்கான கட்டணம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வந்தபோது உடனடியாக கட்டணத்தை ரூ,37 ஆயிரத்து 500 என அரசாணை தந்த இயக்கம் நம்முடைய இயக்கம். இதனை நம்முடைய முதலமைச்சர் தான் அறிவித்தார் என்பதை இந்த நேரத்தில் சொல்வதில் கடமைப்பட்டு இருக்கிறேன்.
இந்த விழா சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது, இங்கு பேசிய ஆயர் தன்னுடைய உரையில் மக்களை காக்க இயேசு பிரான் வந்தார் என்ற செய்தியை சொன்னார். இன்று காலை தினமலர் பத்திரிகையை படிக்கும் போது ஒரு செய்தி என் கவனத்திற்கு வந்தது.
கிறிஸ்துமஸ் சிந்தனைகள் என்ற செய்தி, மனம் திருந்துங்கள் என்ற செய்தி என் கண்ணில் பட்டது. அதை நான் அப்படியே சொல்வதற்கு கடமைப்பட்டு இருக்கிறேன். ஒரு சின்ன கதை தான், பொறுமையாய் கேளுங்கள்.
ஒரு பணக்காரனுக்கு இரண்டு மகன்கள். ஒருவன் உழைப்பாளி. தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டவன், நல் வாழ்வு வாழ்ந்தான். மற்றொருவன் ஊதாரி. அவனின் தொல்லை தாங்காமல் அவனுக்குரிய பங்கை தந்தை பிரித்து கொடுத்தார். அவன் ஆடம்பரமாக செலவு செய்தான்.
ஒரு முறை அவ்வூரில் பஞ்சம் ஏற்பட, எல்லாவற்றையும் இழந்த ஊதாரி மகன், பக்கத்து ஊருக்கு பிழைப்புக்கு சென்றான். அங்குள்ள விவசாயியிடம் பன்றி மேய்க்கும் வேலை பெற்றான். ஆனால், விவசாயி அவனுக்கு சாப்பிடுவதற்கு தவிடு கூட கொடுக்கவில்லை. பசி தாங்காத அவன் தன் தந்தையின் சொல் கேட்காமல் அவஸ்தைப்படுவதை நினைத்து வருத்தப்பட்டான்.
கண்ணீர் விட்டும் அழுதான். தந்தையிடம் வேலை செய்தாவது பிழைப்போம் என ஊர் திரும்பினான். அவன் மனம் திருந்தி வந்தது தந்தைக்கு மகிழ்ச்சிக்கு உண்டாக்கியது. ஏனென்றால் பெற்ற மனம் அல்லவா? இதற்காக, அவரின் ஊழியர்களுக்கு விருந்தே கொடுத்தார்.
இது அவனோடு பிறந்த மூத்தவனுக்கு பிடிக்கவில்லை. தந்தையை கடிந்து கொண்டான். இந்த கதையை சொன்ன இயேசு சொல்கிறார். நான் நல்லவர்களை காக்க பூமிக்கு வரவில்லை. பாவத்தை சுமந்து கொண்டிருப்பவர்களை மனம் திருந்தச் செய்யவே வந்து இருக்கிறேன் என்று. நல்லவர்கள் என்றும் நல்லவர்களாகவே இருப்பார்கள்.
ஆனால் தவறு செய்பவர்கள் திருந்தி வந்தால், அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு ஏற்புடையது என இயேசு பிரான் சொன்னதாக தினமலர் பத்திரிகையில் வந்திருக்கிறது. அது என் கண்ணிலே பட்டது. கிறிஸ்தவ விழாவில் இந்த கதையை சொல்லுகின்ற ஓர் வாய்ப்பை நான் ஏற்படுத்திக் கொண்டேன்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை இயக்கத்தை உருவாக்கிய புரட்சித் தலைவர், வளர்த்த புரட்சித் தலைவி அம்மா, நாங்களும், கிறிஸ்துவ மக்களுக்கு உறுதுணையாக இருந்தோம். இன்றைக்கும் இருக்கிறோம். என்றைக்கும் நாங்கள்
இருப்போம் என்ற என்ற உறுதிமொழியை தருகிறேன்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.