முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய துடிப்பதா? விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கடும் கண்டனம்

சென்னை
புனையப்பட்ட வழக்குகளின் மூலம் முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய துடிக்கும் விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கழகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தி பொய் வழக்குகள் போடுவது தொடர்கதையாகி உள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி அமைச்சராக இருந்தபொழுது, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, பணம் பெற்றதாக புகார்கள் வந்துள்ளதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில், அந்த புகாருக்கு எந்தவிதமான நேரடி முகாந்திரமும் இல்லாத நிலையில், முன்னாள் அமைச்சரை இவ்வழக்கில் இணைத்து அவரை கைது செய்ய துடிக்கிறது இந்த விடியா அரசு.
உச்சநீதிமன்றத்தில் அவர் பிணை கோரும் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், ஆளும் தி.மு.க. அரசு தன்வசமுள்ள காவல் துறையின் மூலம், ராஜேந்திரபாலாஜியின் குடும்ப உறுப்பினர்களான வசந்தகுமார், ரமணா மற்றும் வாகன ஓட்டுநர் ராஜ்குமார் ஆகிய மூவரையும், எந்தவித புகாரும் இல்லாத நிலையில், அமைச்சரின் உறவினர்கள், தெரிந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, காவல்துறையினரின் இந்த சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இந்த வழக்கிற்காக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் உறவினர்கள் யாரையும் சட்டத்திற்கு முரணாக தொந்தரவு செய்யக்கூடாது என்றும், உடனடியாக மூவரையும் விடுவிக்க வேண்டும் என்றும், மேலும் மதுரை மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தனக்குள்ள சட்ட உரிமையின்படி புனையப்பட்ட இந்த வழக்கில், தனக்கு பிணை வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், இந்த விடியா அரசின் காவல்துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய துடிப்பதையும், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் கடும் கண்டனத்திற்கு பிறகும், அவரது உறவினர்களை தொந்தரவு செய்வதையும் கடுமையாக கண்டிக்கின்றேன்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.