சிறப்பு செய்திகள்

கழகத்தில் நான் சாதாரண தொண்டன் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உருக்கமான பேச்சு

தேனி

என்றைக்கும் கழகத்தில் நான் சாதாரண தொண்டன் தான் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

கழக அமைப்பு தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக 15 மாவட்டங்களுக்கு கடந்த 13, 14-ந் தேதிகளில் நடைபெற்று முடிந்தது. மீதமுள்ள மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்டமாக தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்ட கழகம் சார்பில் தேனியில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், எஸ்.டி.கே.ஜக்கையன், இசக்கி சுப்பையா, சீனிவாசன், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் தச்சை என்.கணேசராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் தனது தத்துவ பாடல்கள், வசனங்களால் தி.மு.கவின் கொள்கைகள் மற்றும் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார். தி.மு.க.வின் வளர்ச்சிக்கு புரட்சித்தவைர் உறுதுணையாக இருந்தார். 1967-ல் தி.மு.க. வெற்றி பெற்றபோது தலைவர்கள் அண்ணாவுக்கு வாழ்த்து கூற சென்றபோது அவர் இந்த மாபெரும் வெற்றிக்கு முழு காரணகர்த்தா புரட்சித்தலைவர் தான், அவரிடம் வாழ்த்துக்களை, பாராட்டுக்களை முதலில் தெரிவித்து விட்டு வாருங்கள் என்றார்.

பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பின் தி.மு.க. தலைவரான கருணாநிதி புரட்சித்தலைவரை கட்சியிலிருந்து நீக்கினார். 1972-ல் தொண்டர்களுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்த புரட்சித்தலைவர் கழகத்தின் உச்சபட்ச பதவியை கழக அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்ய வேண்டும், இதை எப்பொழுதும் யாராலும் நீக்கவோ, மாற்றவோ முடியாது என்றும் சட்ட விதியை இயற்றினார்.

அதன் அடிப்படையில் கழக அடிப்படை உறுப்பினர்கள் கழக பொதுச்செயலாளராக புரட்சித்தலைவரை தேர்ந்தெடுத்தனர். அதன்பின் கழக அமைப்பு தேர்தல்கள் நடைபெற்றது. புரட்சித்தலைவி அம்மா அவர்களும் 5 முறை அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமாகிய என்னையும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியையும் நீங்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்தீர்கள். அதற்கு உங்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாமெல்லாம் சாதாரண தொண்டர்களாக தான் கழகத்தில் இருந்தோம். பல இன்னல்களை தாங்கி ஒரு சாதாரண தொண்டனும் கழகத்தில் தலைமை பொறுப்புக்கு வரமுடியும். முதலமைச்சராக முடியும் என்றால் அது கழகத்தில் மட்டுமே சாத்தியமாகும். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி கே.பழனிசாமியும் வரமுடியும் என்றால் அதற்கு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோர் கழக சட்ட விதிகளை உருவாக்கி தந்திருக்கிறார்கள் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

1996 சட்டமன்ற தேர்தலில் கழகம் தோல்வியடைந்தது. அதற்கு பின் திருநெல்வேலியில் நடைபெற்ற மிகப் பிரமாண்ட மாநாடு தான் 1998-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கழகத்தின் மாபெரும் வெற்றிக்கு வித்திட்டது. கழக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மாவட்ட கழக செயலாளராக இருந்தபோது நான் வார்டு செயலாளராக இருந்தேன்.

நான் பல நிலைகளை கடந்து கழக ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் என்றைக்கும் கழகத்தில் சாதாரண தொண்டன் தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை போல் நீங்களும் கழகத்தில் உயர்ந்த நிலைக்கு வரலாம். அதற்கு ஒரே இயக்கம் கழகம் மட்டுமே. தொண்டர்களால் உருவாக்கப்பட்ட நமது கட்சியில் உச்சபட்ச பதவியை அடிப்படை உறுப்பினர்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற புரட்சித்தலைவர் கண்ட கனவை நனவாக்கிய பெருமை நாம் அனைவருக்கும் உண்டு.

கழக அமைப்பின் முதல் கட்ட தேர்தல் 15 மாவட்டங்களில் முடிந்துள்ளது. இந்த முதல் கட்ட தேர்தலில் யாருக்கும் எந்தவித மனவருத்தமில்லாத வகையில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. அதே போல் இரண்டாம் கட்ட தேர்தலும் அமைதியாக, கடமை, கண்ணியம், கட்டுப்பாடோடு யாருக்கும் எந்தவித மனவருத்தமும் இல்லாமல் நடைபெறும்.

அதற்கு பின்னால் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் தேர்தல், பின்னர் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் அதனை தொடர்ந்து கழக நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும். இந்த வரலாற்றை உருவாக்குவதில் மிகப்பெரிய சக்தியாக கழகத்தில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள்.

கழகத்தில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமை. புரட்சித்தலைவர் நமது இயக்கத்தை ஆரம்பித்தபோது 18 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அதனைத்தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல்வேறு சோதனைகள், வேதனைகளை தாங்கி 30 ஆண்டுகாலம் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்து ஒன்றரை கோடி தூய தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கமாக உருவாக்கினார்.

நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பின்னால் ஆரம்பிக்கப்பட்ட கழகத்தில் புரட்சித்தலைவர் 10 ஆண்டுகள், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 16 ஆண்டுகள், எடப்பாடி கே.பழனிசாமி நான்கரை ஆண்டுகள் என 30 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்ட ஒரே கட்சி கழகம் மட்டுமே. இவ்வளவு பெருமைகள் கொண்ட இயக்கத்தில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமை தான்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

முடிவில் பழனிசெட்டிபட்டி பேரூர் செயலாளர் தீபன்சக்கரவர்த்தி நன்றி கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.பி. ஆர்.பார்த்திபன், முன்னாள் மாவட்ட செயலாளர் டி.டி.சிவக்குமார், மாவட்ட பொருளாளர் சோலைராஜ், மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடைராமர், தேனி ஆவின் தலைவர் ஓ.ராஜா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரிதா நடேஷ், நகர செயலாளர்கள் பெரியகுளம் என்.வி.ராதா, தேனி கிருஷ்ணகுமார், போடி பழனிராஜ், சின்னமனூர் கண்ணம்மாள் கார்டன் ராஜேந்திரன், கம்பம் ஜெகதீஷ், ஒன்றிய செயலாளர்கள் பெரியகுளம் செல்லமுத்து, தேனி ஆர்.டி.கணேசன், போடி சற்குணம், ஆண்டிபட்டி லோகிராஜன், வரதராஜன், கடமலை-மயிலை கொத்தாளமுத்து, தர்மராஜ், கம்பம் இளையநம்பி, உத்தமபாளையம் அழகுராஜா, கதிரேசன், சின்னமனூர் விமலேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.