பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழகம் சார்பில் உதவிகள் – ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்

சென்னை,
சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 24 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு போதாது, ரூ.5 லட்சம் வழங்க வேண்டுமென்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை புறநகர் பகுதியான திருவெற்றியூரில் 4 மாடிகள் கொண்ட 336 குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ளன. 1998 -ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த வீடுகள், தேனாம்பேட்டை திருவொற்றியூர் உள்பட சென்னை மாநகரின் பல்வேறு பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் இந்த வீடுகளில் கடுமையான விரிசல் ஏற்பட்டதாக இங்குள்ள பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் டி பிளாக் அடுக்குமாடி குடியிருப்பில் லேசாக விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை அந்த பிளாக்கில் இருந்த 24 வீடுகளும் திடீரென இடிந்து தரைமட்டமாயின. இதை பார்த்து அங்கு வசித்த மக்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இதுபற்றி தகவலறிந்த கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் அப்பகுதிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் அவர்களுக்கு கழகம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இதன் பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வீடுகளில் பழுது ஏற்பட்டுள்ளது என்று 3 மாதத்திற்கு முன்பே மக்கள் புகார் அளித்துள்ளார்கள். மூன்று மாதமாக இந்த அரசு என்ன செய்தது? 25 வருடத்திற்கு மேலே ஆகிவிட்டது. எனவே உங்களுக்கு மாற்று இடம் அளிக்கிறேன் என்று தெரிவித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
நல்லவேளையாக எந்தவிதமான உயிர்சேதமும் இல்லை. ஆனால் உடமைகள் அனைத்தும் போய்விட்டது. பணம், நகைகள் உள்ளிட்ட பல பொருட்கள் உள்ளே புதைந்துள்ளதாக மக்கள் அழுது கண்ணீர் வடிக்கிறார்கள்.
இடிந்து விழுந்த எதையும் இதுவரை அகற்றவில்லை. முதலமைச்சர் தனி பிரிவுக்கு அளித்த புகாருக்கு பதில் இல்லை. குடிசை மாற்று வாரியத்திற்கு அனுப்பிய புகாருக்கும் பதில் இல்லை. அதன் விளைவுகள் இதுபோன்று இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு மக்கள் தெரிவித்த புகார் மீது விழிப்பாக இருந்திருந்தால் அப்பொழுதே வேறு
மாற்று இடத்தை அளித்திருக்க வேண்டும். இப்போது கூட அவர்களுக்கு ஒரு மாற்று இடம் பக்கத்தில் கார்கில் நகரில் இருக்கிறது. அங்கு அவர்களுக்கு குடியிருப்பு ஒதுக்க வேண்டும். ரூ.1 லட்சம் போதாது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 லட்சம் ரூபாய் தர வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
பேட்டியின் போது திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி.மூர்த்தி, முன்னாள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன், பகுதி கழக செயலாளர் அஜாக்ஸ் எஸ்.பரமசிவம் உள்பட பலர் உடனிருந்தனர்.