சிறப்பு செய்திகள்

சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழகத்துக்கு 2-வது இடம் – கழக ஆட்சிக்கு மேலும் ஒரு மணிமகுடம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி மகிழ்ச்சி

சென்னை

கழக ஆட்சிக்கு மேலும் ஒரு மணி மகுடமாக சுகாதாரத்துறை தர வரிசை பட்டியலில் தமிழகம் 2-வது இடம் பிடித்துள்ளதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை செயல் திறனுக்கான தர வரிசை பட்டியலை நிதி ஆயோக் நேற்று முன்தினம் வெளியிட்டது. 2019-2020-ம் ஆண்டு கால கட்டத்தை கணக்கில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த தரவரிசை பட்டியலில் தமிழகம் 2-வது இடம் பிடித்துளு்ளது. முதல் இடத்தை கேரளா பிடித்துள்ளது. தெலுங்கானா 3-வது இடத்தில் உள்ளது. உத்தர பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது.

சிறிய மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல் திறனிலும், அதிகரிக்கும் செயல் திறனிலும் மிசோராம் சிறந்த மாநிலமாக தேர்வாகியுள்ளது. அதே சமயம் யூனியன் பிரதேசங்களில் டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவை ஒட்டுமொத்த செயல் திறனின் அடிப்படையில் கடைசி இடங்களில் உள்ளன. அதேவேளையில் அதிகரிக்கும் செயல்திறனில் இந்த மாநிலங்களில் முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளன.

கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டுதலோடு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கடந்த கால கழக ஆட்சி சிறப்பாக செயல்பட்டதற்காக பல்வேறு தேசிய விருதுகளை அள்ளி குவித்தன. குறிப்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையேற்று நடத்திய நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை 100-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று சாதனை படைத்தது.

தற்போது கழக ஆட்சிக்கு மேலும் ஒரு மணி மகுடமாக சுகாதாரத்துறை தர வரிசை பட்டியலில் தமிழகம் 2-வது இடம் பிடித்துள்ளது. இதற்கு கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:-

2018-2019, 2019-2020-ம் ஆண்டுகளில் சுகாதாரத்துறையில், மாநிலங்களின் சிறப்பான செயல்பாடுகள் தொடர்பாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், இந்திய அளவில் தமிழகம் 2-வது இடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

புரட்சித்தலைவி அம்மாவின் ஆசி பெற்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான கழகத்தின் கடந்த ஆட்சியில், நோய்த்தொற்றுகளை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையிலும், தொலைநோக்கு பார்வையுடனும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான நடவடிக்கைகள்,

உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியது, நவீன தொழில்நுட்பங்கள் மூலம் விரைந்து சிகிச்சை அளிக்கும் திட்டங்களை செயல்படுத்தியது மற்றும் மக்களின் உயிர்க்காக்கும் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை அதிகாரிகள், ஊழியர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்பால் இவ்வாறான ஒரு சிறந்த இடத்தை தமிழகம் பெற்றிருக்கின்றது.

அஇஅதிமுக ஆட்சி எப்பொழுதுமே மக்கள்நலனில் அதீத அக்கறை கொண்ட அரசாக இருந்தது என்பதற்கு இது மேலும் ஒரு நற்சான்றாகும்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.