அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை,
அவசர சிகிச்சைக்கு வந்தவரை டாக்டர் புறக்கணித்ததாக வந்த புகாரின் பேரில் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு தினமும், 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். அன்னவாசல் சுற்று வட்டார பகுதியில் அதிக அளவில் கிராமங்கள் உள்ளதால், கிராம பகுதியில் உள்ள வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறவும், அவசர சிகிச்சைக்காகவும் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.
இந்த மருத்துவமனைக்கு வரும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் மணி கணக்கில் காத்திருத்து சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அவசர சிகிச்சைக்கு வந்தால் முதலுதவி சிகிச்சை அளிக்க கூட போதிய மருத்துவர்கள் இல்லாததால் மிகவும் சிரமம் அடைகின்றனர். இந்த மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவிகள் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை-மணப்பாறை நெடுஞ்சாலையில் இந்த மருத்துவமனை உள்ளதால், தினமும் விபத்தில் சிக்கி படுகாயத்துடன் வருவோர் முதலுதவி சிகிச்சை கூட பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
சாலை விபத்துகள், விஷக்கடி உள்ளிட்ட அவசர சிகிச்சைக்கு அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற வேண்டியவர்கள் தற்போது டாக்டர்கள் பற்றாக்குறையால் சிகிச்சை பெற முடியாமல் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
சில நேரங்களில் அங்கு செல்வதற்குள் உயிர் பிரியும் நிலைமையும் ஏற்படுகிறது. சில நேரங்களில் அன்னவாசல் மருத்துவமனை ஆம்புலன்ஸ் கூட செயல்படாமல் அடிக்கடி பழுதாகி நிற்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவசர சிகிச்சைக்கு சென்ற நோயாளியை இரவு பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அன்னவாசல் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த தகவலை அறிந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியரிடம் மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் உயர் அதிகாரிகளை அழைத்து போதிய மருத்துவர்கள், ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும் மருத்துவமனைக்கு தேவையான உதவிகளையும் நிறைவேற்றி தர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
ஆய்விற்கு முன்னதாக மருத்துவனை பணியில் இருந்த ஒரே மருத்துவர் ஓய்வறையில் இருந்ததும் நோயாளிகள் காத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. கழக ஆட்சி காலத்தில் அன்னவாசல் மருத்துவமனைக்கு தனி ஆம்புலன்ஸ், எக்ஸ்ரே கருவிகள், மருத்துவ உபகரணங்கள், கூடுதல் மருத்துவர் ஊழியர்கள், புதிய கட்டிடங்கள் என பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.