தற்போதைய செய்திகள்

முதலமைச்சரின் மெத்தனப் போக்கால் வீடுகளை இழந்து தெருவில் நிற்கிறோம் – பாதிக்கப்பட்ட திருவொற்றியூர் மக்கள் கண்ணீர்

அம்பத்தூர், டிச. 29-

முதலமைச்சரின் மெத்தனப் போக்கால் நாங்கள் வீடுகளை இழந்து நடுத்தெருவில் நிற்கிறோம் என்று திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க கூறினர்.

சென்னை திருவொற்றியூரில் நேற்று முன்தினம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு திடீரென்று சரிந்து விழுந்தது. இதில் 24 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இதுபற்றி தகவலறிந்த கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான
டி.ஜெயக்குமார், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி.மூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன், பகுதி கழக செயலாளர் அஜாக்ஸ் எஸ்.பரமசிவம் ஆகியோர் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

இதேபோல் அரசு சார்பில் பார்வையிட வந்த அமைச்சர் தா.மோ.அன்பரசனை பொதுமக்கள் முற்றுகையிட்டு நாங்கள் கொடுத்த மனுக்கள் மீது அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று நாங்கள் இந்த நிலைமைக்கு ஆளாகி இருப்போமா? பிச்சை எடுப்பதற்கு தட்டு கூட எங்களிடம் இல்லை. அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நிற்கிறோம். இப்போது வந்து பார்க்கிறீர்களே என்று கேள்வி கேட்டு கண்ணீர் விட்டு அழுதனர். அப்போது அங்கிருந்து தி.மு.க. நிர்வாகிகள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையிலேயே பொதுமக்களை அடிக்க பாய்ந்தனர். எல்லாத்தையும் இழந்து விட்டு நிற்கும் நாங்கள் அமைச்சரிடம் குறை கூட சொல்லக்கூடாது என்றால் எப்படி? என்று பொதுமக்கள் அதிருப்தியுடன் கிளம்பி சென்றனர்.

இதுகுறித்து வீடுகளை இழந்த பொதுமக்கள் சிலர் கூறியதாவது:-

இந்த கட்டிடம் கட்டி சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலான காரணத்தினால் பல்வேறு இடங்களில் பழுதடைந்து விரிசல் உள்ளது என்றும், எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் அல்லது இந்த கட்டிடத்தை பழுது பார்த்து தருமாறும் முதலமைச்சரின் தனி பிரிவில் நாங்கள் 3 மாதத்திற்கு முன்பு கோரிக்கை மனு வழங்கினோம். எங்கள் மனுவை வாங்கி படிக்க கூட நேரமில்லாத முதலமைச்சரும், முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் இன்று மொத்த கட்டிடமும் இடிந்து விழுந்துள்ளது. இதற்கு காரணம் ஒட்டுமொத்த அரசு அதிகாரிகள் தான். நாங்கள் மனு வழங்கும் போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று மிகப்பெரிய சேதத்தை தடுத்திருக்கலாம்.

வீடுகள் இடிந்து விழுந்ததும் உடனடியாக வந்த முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், மாதவரம் வி.மூர்த்தி முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் ஆகியோர் எங்களுக்கு ஆறுதல் கூறியதோடு நாங்கள் தங்குவதற்கு தற்காலிக இடங்களை ஏற்படுத்தித் தருவதாக கூறினார்கள். ஆனால் தமிழக அரசின் சார்பில் வந்த அமைச்சர் தா.மோ.அன்பரசனுடன் வந்திருந்த தி.மு.க.வினர் அமைச்சரிடம் எங்கள் குறையை கூற விடாமல் மிரட்டுகின்றனர். அவர் முன்னிலையிலேயே கையை ஓங்கி அடிக்க பாய்ந்தனர். இது எந்த வகையில் நியாயம்? அனைத்தையும் இழந்து விட்டு நிர்க்கதியாய் நிற்கும் எங்களை அமைச்சரின் முன்னிலையிலேயே அடிக்க பாய்ந்தால் நாங்கள் எங்கள் குறைகளை யாரிடம் சொல்ல முடியும்?

இவ்வாறு அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்நிலையில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று இரண்டாவது நாளாக கழகம் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் உணவு வழங்கினார்.