தி.மு.க.வுக்கு ஓட்டு போட வில்லை என்பதால் கோவை மக்களை கொச்சைப்படுத்தி பேசுவதா? அம்மன் அர்ச்சுணன் கண்டனம்

கோவை
தி.மு.க.வுக்கு ஓட்டு போடவில்லை என்பதால் கோவை மக்களை கொச்சப்படுத்துவதா? என்று உதயநிதி ஸ்டாலினுக்கு கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்ட மக்கள் என்றும் அன்பானவர்கள், பாசமானவர்கள், உழைப்பாளர்கள். இவர்கள் என்றைக்கும் அனைத்திந்திய அண்ணா முன்னேற்றக் கழகம் உருவான காலம் முதல் ஆதரித்து வருபவர்கள்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு கோவை மாவட்ட மக்கள் ஓட்டு போடவில்லை என்பதால் அவர்களை குசும்புக்காரர் என்று பேசி கோவை மக்களை கொச்சைப்படுத்தி பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு கோவை மக்கள் வாக்களித்தனர். ஆனால் வெற்றி பெறவில்லை. கோவை மாவட்ட மக்களுக்கு தி.மு.க. தொடர்ந்து செய்து வந்துள்ள துரோகத்தை சாகும் வரை இந்த மாவட்ட மக்கள் மறக்க மாட்டார்கள்.
ஒரு பைசா மின் கட்டணத்தை குறைக்க போராடிய விவசாயிகளை சிட்டுக்குருவி போல சுட்டுக் கொன்ற கொடுங்கோல் ஆட்சியை கோவை மாவட்ட மக்கள் மறக்கவில்லை. திமுக ஆட்சியில் இந்து, முஸ்லிம் கலவரத்தில் இறந்துபோன இன்னுயிர்கள் எத்தனை? எத்தனை?
கோவையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள். அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பொருளாதார சேதங்கள் எத்தனை? எத்தனை? என்பதை கோவை மாவட்ட மக்கள் மறக்க மாட்டார்கள்.
தி.மு.க. ஆட்சியில் மின் வெட்டால் பாதித்த சிறுதொழில்கள் முதல் பெரிய தொழில்கள் வரை பாதித்தது. அதனால் எத்தனை தொழிற் கூடங்கள் முடங்கியதும் கோவை மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதித்ததும் மறக்க முடியுமா?.
கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அனைத்திந்திய அண்ணா தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட வளர்ச்சி பணிகளை தி.மு.க. அரசு தடுத்து நிறுத்துகிறது. 50 ஆண்டு கால சாதனைகளை ஐந்தாண்டுகளில் கோவை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தி வரலாறு படைத்த முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணியை எங்கள் மாவட்ட மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். நன்றியோடு இருப்பார்கள்.
இதற்காக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது பொய் வழக்கு போடுவது, பழிவாங்குவது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் விடியா தி.மு.க. அரசு தன் குசும்புத் தனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கொரோனா காலம் என்று எங்கள் மீது வழக்கு போடுகிறீர்கள். நாங்கள் அமைதியாக 100 மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்றது வழக்கு. ஆனால் ஆளும் கட்சி சார்பாக பல்லாயிரக்கணக்கான மக்களை ஓரிடத்தில் அமர வைத்தால் கொரோனா வராதா? அது என்ன எதிர்க்கட்சியை பார்த்தால் தொற்று வரும்.
ஆளும் கட்சிக்காரனை பார்த்தால் தொற்று வராது என்று உலக சுகாதார மையம் அறிவித்ததா? இது எதை காட்டுகிறது என்றால் “மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா? காலம் வெகுவிரைவில் பதில் சொல்லும்.
கரூரில் இருந்து வந்தாலும் சரி, சென்னையில் இருந்து வந்தாலும் சரி, ஏன் அமெரிக்காவில் இருந்து வந்தாலும் சரி கோவை மாவட்டம் அண்ணா தி.மு.க.வின் எஃகு கோட்டை என்பதை மனதில் வைத்து பேச வேண்டும்.
இவ்வாறு கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.