முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அணி திரண்டு வாரீர் – மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி அழைப்பு

ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் 2-ந்தேதி பிரச்சாரம் செய்ய வருகை தரும் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அணி திரண்டு வாரீர் என்று மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சரும், தேர்தல் பொறுப்பாளருமான ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை வழங்கி பேசினார்.
ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன், பரமக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன்பிரபாகர், கழக மகளிரணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி, கழக சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அன்வர்ராஜா உட்பட கழக நிர்வாகிகள் பலர் சிறப்புரை ஆற்றினர்.
இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசியதாவது:-
நலத்திட்ட நாயகனாக திகழும் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி தொடர கழக நிர்வாகிகளின் உழைப்பு இருக்க வேண்டும். ஒன்றிய கழக செயலாளர்கள் அனைவரும் தங்களுக்குட்பட்ட பகுதியில் இன்று முதல் களப்பணியை தொடங்க வேண்டும். நமக்குள் இருக்கும் வேற்றுமைகளை புறந்தள்ளிவிட்டு தேர்தலில் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். நமது இலக்கு 2021ல் கழகத்தை வெற்றிபெற செய்து எடப்பாடியாரை மீண்டும் முதல்வராக்க வேண்டும். அதேபோல வருகின்ற 2ம்தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வருக்கு கழக நிர்வாகிகள் பொதுமக்களுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் கழகத்தின் கோட்டை என நிரூபிக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.
இக்கூட்டத்தில் சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.