தமிழகம்

2 நாட்கள் வறண்ட வானிலையே நிலவும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 நாட்கள் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வடகிழக்கு காற்றலை காரணமாக இன்றும் (4-ந்தேதி), நாளையும் (5-ந்தேதி) தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

6 மற்றும் 7-ந்தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

நாளை 5-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) 10, பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் (ராமநாதபுரம்) தலா 5, மணிமுத்தாறு, பாபநாசம் (திருநெல்வேலி) தலா 3, கடம்பூர் (தூத்துக்குடி), கயத்தாறு (தூத்துக்குடி), நாங்குநேரி (திருநெல்வேலி) தலா 2, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), குன்னூர் (நீலகிரி), ஸ்ரீவைகுண்டம் , எட்டயபுரம் (தூத்துக்குடி) தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.