பள்ளிக்கு செல்ல நடை மேம்பாலம் கேட்டு மாணவ- மாணவிகள் மறியல்

கிருஷ்ணகிரி
சாலை விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் இருப்பதால் பள்ளி செல்ல நடை மேம்பாலம் அமைத்து தரக்கோரி மாணவ, மாணவிகள் மறியல் போராட்டம் நடத்தியதால் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சாமல்பள்ளம் அருகே இம்மிடிநாயக்கனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் தினமும் தேசிய நெடுஞ்சாலையை கடந்து தான் பள்ளிக்கு செல்ல வேண்டும். இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த வாரம், பிரேம்குமார் என்ற மாணவர் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இச்சமப்வம் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து சாலையை கடந்து பள்ளிக்கு சென்று வர வசதியாக நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று பள்ளியின் அருகே சாலையோரத்தில் அமர்ந்து மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்களுக்கு ஆதரவாக அவர்களது பெற்றோர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி, ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி, சூளகிரி வட்டாட்சியர் நீலமேகம், ஓசூர் ஏஎஸ்பி அரவிந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாவட்ட ஆட்சியர், ஒருமாதத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை போராட்டத்தை கைவிட்டு மாணவர்களும், பெற்றோர்களும் கலைந்து சென்றனர்.