தந்தையார் கரத்தை பிடித்து பதவிக்கு வந்தவர் ஸ்டாலின்-ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

மதுரை
தந்தையார் கரத்தை பிடித்து வந்தவர் ஸ்டாலின் என்றும், 48 ஆண்டு கால பொதுவாழ்வில் நெருப்பாற்றில் நீந்தி மக்கள் பணியாற்றி வருகிறார் எடப்பாடியார் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.
மதுரையில் காந்தி மியூசியம் அருகே சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரையில் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களான வாகன காப்பகம், தமுக்கம் கலையரங்கம் உள்ளிட்ட திட்டங்களை தான் முதல்வர் திறந்து வைத்து உள்ளார்.
இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் அவரது தந்தையார் பெயரில் நூலகத்தை தவிர, மதுரைக்கு எந்த திட்டங்களுக்கும் முதலமைச்சர் நிதி ஒதுக்கவில்லை. அப்படி ஒதுக்கி இருந்தால் பட்டியலிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் சொல்ல முடியுமா?
மதுரையில் அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், அ.தி.மு.க.வை வசைபாடி சென்று உள்ளார். எடப்பாடியார் அ.தி.மு.க.வில் தற்காலிக பதவியில் உள்ளார் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
இன்றைக்கு அ.தி.மு.க விதியின்படி, நீதியரசர்கள் தீர்ப்பு கொடுத்து, ஒன்றரை கோடி தொண்டர்களின் நம்பிக்கையை பெற்று கழக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடியார் தலைமை கழகத்தில் பொறுப்பேற்றுள்ளார். முன்பை விட மிகவும் வேகமாக தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தோலுரித்து வருகிறார்.
ஸ்டாலின் இந்த பதவிக்கு வரும் முன்பு எந்த பதவியில் இருந்தார். அவர் தனது தந்தையார் கையை பிடித்து தான் பதவிக்கு வந்தார். கருணாநிதி உயிரோடு இருக்கும்போது தலைவர் பதவிக்கு ஸ்டாலினால் வர முடியவில்லை. அதுமட்டுமல்ல இவரை முன்னிலைப்படுத்த முதன்முதலாக செயல்தலைவர் பதவி, துணை முதல்வர் பதவி உருவாக்கப்பட்டது.
48 ஆண்டு கால பொதுவாழ்வில் நெருப்பாற்றில் நீந்தி மக்கள் பணியாற்றி வருகிறார் எடப்பாடியார். ஸ்டாலினை போல் தந்தையார் கரத்தை பிடித்து பதவிக்கு வரவில்லை. இன்றைக்கு விமர்சனம் என்ற பெயரில் முதலமைச்சர் புழுதி வாரி தூற்றக்கூடாது.
இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கூறினார்.