மதுரை மாநகராட்சியை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பங்கேற்பு

மதுரை
கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஆணைக்கிணங்க கடந்த 8 மாதங்களாக 100 வார்டுகளில் எந்த அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றாத மதுரை மாநகராட்சியை கண்டித்தும், திட்டங்களை நிறைவேற்ற நிதி ஒதுக்காத விடியா தி.மு.க. அரசை கண்டித்தும் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகங்கள் சார்பில் டி.எம். கோர்ட் அருகே நேற்று காலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ தலைமை தாங்கினார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேசியதாவது:-
மதுரை மாநகராட்சியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தி.மு.க. அரசு பார்க்கிறது. அம்மாவின் அரசு செயல்படுத்திய திட்டங்களை பார்வையிட்டு திறந்து வருகிறது. எந்த ஒரு திட்டத்தையும் தி.மு.க. அரசு கொண்டு வரவில்லை. மதுரையில் எந்த பணியும் நடைபெறவில்லை. சாக்கடை ஆறாக ஓடுகிறது.
இதுகுறித்து புகார் கொடுத்தால் சரி செய்ய நிதி இல்லை என்று கூறுகிறார்கள். 2 அமைச்சர்கள் இருந்தும் மதுரைக்கு சிறப்பு நிதி ஒதுக்க வாய் திறக்க மறுக்கிறார்கள்.
அம்மா ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட சாலைகளின் ஒப்பந்தங்களை எல்லாம் ரத்து செய்து விட்டனர். ஆனால் மீண்டும் புதிய ஒப்பந்தங்கள் கோரி சாலை பணிகளை செய்யவில்லை. ஆனால் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க ரூ.114 கோடி நிதி ஒதுக்கி உள்ளனர்.
புரட்சித்தலைவி அம்மா காலத்தில் மதுரை மாநகராட்சிக்கு ரூ.250 கோடி சிறப்பு நிதியாக வழங்கினார். அதுமட்டுமல்லாது 250 ரவுடிகளை ஒழித்து மதுரையை அமைதிப்பூங்காவாக மாற்றினார். இதனால் கடந்த 10 ஆண்டுகளில் மதுரை வியாபாரிகள் நிம்மதியாக வாழ்ந்தனர்.
முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக அம்மா உயர்த்தியதால் இன்றைக்கு நமக்கு தண்ணீர் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாது மதுரையில் உள்ள 100 வார்டுகளில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.1,296 கோடி மதிப்பீட்டில் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
இத்திட்டம் 2022-ம் ஆண்டில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர செயல்படுத்தபட்டது. ஆனால் அமைச்சர் கே.என்.நேரு பலமுறை மதுரைக்கு வந்தார். இந்த திட்டத்திற்கு நிதி பெற்று தருவதில் மெத்தனப் போக்கை காட்டி வருகிறார்கள்.
ஆனால் பத்தாண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று நம்மை பார்த்து கேள்வி கேட்கிறார்கள். இதே மதுரையில் ரூ.30 கோடியில் புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவகம் கட்டப்பட்டது. வைகை கரையோரங்களில் ரூ.304 கோடி மதிப்பில் பூங்காக்களுடன் கூடிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாது உயர்மட்ட மேம்பாலங்கள், தடுப்பணைகள், உலக தமிழ் சங்க கட்டடம் கட்டப்பட்டுள்ளன. மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு 40 ஆண்டு கால மக்களின் கோரிக்கையான நிரந்தரமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது பொதுமக்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார். தற்போது மூன்றாவது அலை வர இருக்கிறது. அதனால் ஸ்டாலின் ரூ.10 ஆயிரம் கூட கொடுக்கலாம். ஆனால் கொடுக்க மனமில்லை. அதேபோல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதியோர் உதவித்தொகையை 1,500 ரூபாயாக உயர்த்தி தருவோம் என்று கூறினார்கள்.
ஆனால் அம்மா அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளை குறைத்து வருகிறார்கள். அதேபோல் நகைக்கடன் ரத்து திட்டத்திலும் தி.மு.க. சாயம் வெளுத்து விட்டது. ஆட்சியில் இல்லாதபோது கோ பேக் மோடி என்று கூறியவர்கள் தற்போது வரவேற்கிறார்கள். ஆட்சியில் இருக்கும் போது ஒரு முகம், ஆட்சியில் இல்லாத போது இன்னொரு முகம் என்று தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது.
இனிவரும் காலங்களில் தி.மு.க.வுக்கு விடியலை தர வேண்டும். அது எப்படிப்பட்ட விடியல் என்றால் வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். இத்தேர்தலில் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் நாம் வெற்றி பெறுவோம். அப்போது திட்டங்களுக்கான நிதியை
போராடி பெற்று மக்கள் பிரச்சினைகளை தீர்ப்போம்.
இவ்வாறு மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ பேசினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 8 மாதங்களாகியும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. கடந்த 8 மாதங்களாக இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் வழங்க வேண்டிய 1,000 ரூபாய் வழங்கவில்லை. அதனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 8,000 ரூபாய் தி.மு.க. கடன்பட்டிருக்கிறது. இதை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும்போது மக்கள் கேட்க வேண்டும்.
இதுவரை ஒரு சாலை பணிக்கு கூட நிதி ஒதுக்கவில்லை. அம்மாவின் ஆட்சிக் காலத்தில் நான் 5 வருடம் மதுரைக்கு மேயராக இருந்தேன். அப்பொழுது புரட்சித்தலைவி அம்மா மழைநீர் வடிகாலுக்கு ரூ.250 கோடி நிதி வழங்கினார்.
மதுரை மாநகராட்சி நஷ்டத்தில் இயங்கி வந்தது. ரூ.36 கோடியில் வசூல் செய்து லாபகரமாக இயங்கினோம். அந்த 36 கோடியையும் சாலைப் பணிகளுக்காக அம்மா வழங்கினார்.
மதுரை மாநகராட்சி ஆணையாளர் வார்டு, வார்டாக சென்று மக்களிடம் குறை கேட்க வேண்டும். ஆனால் கடந்த 6 மாதங்களாக 148 சதுர கிலோ மீட்டர் கொண்ட மாநகராட்சியில் எந்த குறையும் கேட்கவில்லை.
அதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரத்தில ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர வாடிவாசல் அமைக்க எனது சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் அனுமதி கேட்டபோது அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் மாநகராட்சி சார்பில் பூமி பூஜை போட்டார்கள். அந்த பணியை அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்கள்.
மதுரை மாநகராட்சியில் வீடு கட்ட அனுமதி கேட்டு மக்கள் மனு கொடுத்துள்ளார்கள். ஆனால் இதுவரை யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. இதுகுறித்து வெள்ளை அறிக்கையை மாநகராட்சி வெளியிட வேண்டும். கருணாநிதி பெயரில் ரூ.114 கோடியில் நூலகம் அமைக்கப்படுவதை தடுக்கவில்லை.
ஆனால் தற்போது அந்த நூலகத்திற்கு சரியான சாலை வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் கிடையாது. அந்த நிதியை கூட தற்போது மதுரை மாநகராட்சியில் சாலை பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யலாம்.
தற்போது விடியா அரசு ஒரே நாளில் 2000 அம்மா மினி கிளினிக்குகளை மூடுவிழா நடத்தி விட்டது. வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். மீண்டும் மதுரை மாநகராட்சியை கழகம் கைப்பற்றும்.
இவ்வாறு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
மாவட்ட மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அரவிந்தன் நன்றி கூறினார்.