தி.மு.க.வினர் அராஜகத்தால் தேர்தல் ஒத்திவைப்பு – திருமழிசை பேரூராட்சி கழக வேட்பாளர் கைது

திருவள்ளூர்
திருமழைிசை பேரூராட்சி கழக வேட்பாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூரை அடுத்த திருமழிசை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் கழகம் 6 இடங்களிலும், தி.மு.க. 6 இடங்களிலும், பா.ம.க., சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. இதனால் திருமழிசை பேரூராட்சி தலைவர் பதவியில் வெற்றி பெறப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. பா.ம.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஆதரவளித்ததால் கழகம் வெற்றி பெறும் நிலை இருந்தது.
இந்நிலையில் நேற்று பேரூராட்சி தலைவர் பதவிக்கு பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான ரவி தலைமையில் நடைபெற்றது. 15 உறுப்பினர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து வாக்களித்தனர்.
அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்த செயல் அலுவலர் ரவி தி.மு.க. வேட்பாளர் 7 வாக்குகளும், கழக வேட்பாளர் 6 வாக்குகளும் பெற்றுள்ளனர். 2 வாக்குகள் செல்லாது என்பதால் தி.மு.க. வேட்பாளர் வடிவேல் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
கழக வேட்பாளர் ரமேஷ் செயல் அலுவலர் ஒருதலைபட்சமாக திமுகவுக்கு சாதகமாக செயல்படுகிறார் என்றும், முறையாக செலுத்திய வாக்குகளை செல்லாது என அறிவித்ததை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவருக்கு ஆதரவாக 5 கழக வேட்பாளர்களும், பா.ம.க. மற்றும் சுயேச்சை வேட்பாளரும் கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் செயல் அலுவலரை முற்றுகையிட்டு செல்லாத ஓட்டுகள் என்பதற்கு முறையான காரணத்தை தெரிவிக்குமாறு கோஷம் எழுப்பினர். இதன் காரணமாக பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேரூராட்சி கழக வேட்பாளர் ரமேசை கைது செய்து வேனில் ஏற்றி கொண்டு செல்ல முயன்றனர். இதைக்கண்ட அங்கிருந்த சக கழக உறுப்பினர்கள் வேனை பேரூராட்சி அலுவலகத்தின் வெளியே செல்ல விடாமல் தடுத்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின், முன்னாள் எம்.எல்.ஏ. ரா.மணிமாறன் மாவட்ட அவைத்தலைவர் தி.பா. கண்ணன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அந்தமான் முருகன் மாவட்ட துணை செயலாளர் தென்றல் மற்றும் கழக நிர்வாகிகள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவர்கள் கழக வேட்பாளர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது நல்ல மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் மற்றும் கட்சி நிர்வாகிகள் செயல் அலுவலர் ஒருதலைபட்சமாக செய்யப்பட்டதை கண்டித்தும், மறுவாக்குப்பதிவு நடத்த வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கழக வேட்பாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருமழிசையில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.