கோவை வெள்ளலூரில் ஜனநாயக படுகொலை – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோவை
கோவை வெள்ளலூரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார்.
ேகாவை மாவட்டம் வெள்ளலூரில் வன்முறையில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவரை எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக கவுன்சிலர்கள் சந்தித்து மனு அளித்தனர். இதன் பின்னர் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவித்ததில் இருந்தே தி.மு.க. பல வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தாக்குதல் நடத்தினார்கள். சிலருக்கு கத்திக்குத்தும் விழுந்தது. தேர்தலில் கள்ள ஓட்டு போட்டு முறைகேடுகளிலும் ஈடுபட்டனர்.
அமைதியான கோவை மாவட்டத்தில் வன்முறையை நடத்தி முறைகேடாக வெற்றி பெற்றனர். ஓட்டு இயந்திரம் மூலமும், கள்ள ஓட்டுகள் மூலமும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை முறைகேடுகள் செய்தும் வெற்றி பெற்றனர். இதையும் மீறி வெள்ளலூரில் கழகத்தை சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து மறைமுக தேர்தலுக்கு சென்ற உறுப்பினர்களின் கார்களை வெளி மாவட்டகாரர்கள் கத்தி காம்புடன் வந்து தாக்கியுள்ளனர். மேலும், உறுப்பினர்கள் மீது படு பயங்கர தாக்குதல் நடத்தினர். கோவையில் எந்த காலத்திலும் இப்படி நடந்ததில்லை. முறைகேடுகளை மீறி கழகம் வெற்றி பெறவுள்ள நிலையில் திமுக. வினர் பிரச்சினை செய்தனர். இப்போது காரணம் இல்லாமல் தேர்தலை தள்ளி வைத்துள்ளனர்.
இத்தேர்தல் தொடர்பாக நீதிமன்றமே கழக கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியும், பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஆனால் நாங்கள் தி.மு.க.வினரை அடித்ததாக போத்தனூர் போலீசில் பொய் புகார் அளித்துள்ளனர். இது ஜனநாயக படுகொலை.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரிடமும் மனு அளித்துள்ளோம். கூடுதல் அதிகாரிகள் மற்றும் போலீசாரை வைத்து தேர்தல் நடத்துவதாக கூறியுள்ளனர். முறையாக தேர்தலை நடத்தவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்.
இவ்வாறு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார்.