தி.மு.க.வின் அராஜகத்தை முறியடித்து கழக வேட்பாளர் கலா மீனா வெற்றி – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வாழ்த்து

மதுரை,
மதுரை பரவை பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க.வின் அராஜகத்தை முறியடித்து கழக வேட்பாளர் கலா மீனா வெற்றி பெற்றார். அவருக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வாழ்த்து தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் கழகம் 8 இடங்களிலும், தி.மு.க. 6 இடங்களிலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தன. தலைவரை தேரந்்தெடுக்க நேற்று மறைமுக தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்தலை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். ஓட்டுப்பதிவு நடைபெறுவதற்கு முன்பு தேர்தலை ரத்து செய்யக்கோரி பேரூராட்சி அலுவலகம் முன்பு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
மேலும் தேர்தலை நிறுத்த தி.மு.க.வினர் பல்வேறு தில்லு முல்லுவில் ஈடுபட்டனர். இருப்பினும் கழகத்தினர் அமையாக இருந்தனர். இறுதியில் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாததால் தி.மு.க. தேர்தலை புறக்கணித்தது. இதனைத் தொடர்ந்து பரவை பேரூராட்சி தலைவர் பதவிக்கு கழகம் சார்பில் போட்டியிட்ட கலாமீனா ராஜா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கலா மீனா மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதன் பின்னர் முனான்ள அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பரவை பேரூராட்சி தலைவர் பதவிக்கு கழகத்துக்கு மெஜாரிட்டி இருந்தும் தி.மு.க.வினர் தேர்தலை நிறுத்த பல்வேறு அராஜக செயலில் ஈடுபட்டனர். இறுதியில் கழகம் வென்றது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆசி பெற்ற ஒப்பற்ற இயக்கம் கழகம் மீண்டும் அரியணையில் அமரும் என்பதற்கு இதுவே சாட்சி. அதுமட்டுமல்லாமல் மறைமுக தேர்தலில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் தி.மு.க.வினர் செய்த அராஜகத்தை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள். இதற்கெல்லாம் சரியான பதிலடியை வரும் காலங்களில் மக்கள் வழங்குவார்கள்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.