திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு – நகராட்சி துணைத்தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருவாரூர்,
திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத்தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய 4 நகராட்சிகளுக்கும், 7 பேரூராட்சிகளுக்கும் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு தலைவர் பதவி தி.மு.க. ஒதுக்கப்பட்டிருந்தது. துணைத் தலைவருக்கான பதவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கீடு செய்து தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டது.
இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் வேட்பாளராக ராமலோகஈஸ்வரி என்பவரை அறிவித்திருந்தது. இவர் திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் ரகுராமன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் உள்ள வேட்பாளர் ராமலோகஈஸ்வரி வீட்டில் நேற்று அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த ரகுராமன், ராமலோக ஈஸ்வரி வீட்டின் முன்பு தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதுபற்றி திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் டி.எஸ்.பி. சோமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதுபற்றி ராம லோகஈஸ்வரியின் கணவர் ரகுராமன் கூறுகையில், எனது மனைவியை நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கு அறிவித்ததில் இருந்து எதிர்ப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் எனது மனைவியை கொலை செய்யும் நோக்கில் நடந்ததாகவே தெரிகிறது. எனவே போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றார்.
நகராட்சி துணைத்தலைவர் வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் திருத்துறைப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.