சிறப்பு செய்திகள்

கோவை வெள்ளலூரில் தி.மு.க.வினர் வன்முறை

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக கவுன்சிலர்கள் புகார்

கோவை,

கோவை வெள்ளலூரில் தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டதால் பேரூராட்சி தலைவர் மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு நேற்று மறைமுக தேர்தல் நடைபெற்றது. அப்போது கழக கவுன்சிலர்கள் மீது தி.மு.க.வினர் கொலை வெறி தாக்குதல் நடத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் வெள்ளலூர் பேரூராட்சி மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ., கழக அமைப்பு செயலாளர் செ.தாமோதரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் வெள்ளலூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற கழக கவுன்சிலர்கள் வெள்ளலூர் மருதாசலம் கார்த்திகேயன், தமிழரசி, கருணாகரன், சந்திரகுமார், கணேசன், உமா மகேஸ்வரி, பார்வதி, ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாங்கள் 8 பேரும் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெள்ளலூர் பேரூராட்சியில் கழகம் சார்பில் போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளோம். கடந்த 2ந் தேதி நடைபெற்ற பதவி பிரமாணத்தின்போது எங்களை தி.மு.க.வினரும் அவர்களை சேர்ந்த வெளியூர் நபர்களும் எங்களை தி.மு..கவில் சேருமாறு மிரட்டினர்.

இதையடுத்து பாதுகாப்பு வேண்டி உயர்நீதிமன்த்தில் மனு தாக்கல் செய்ததையடுத்து நீதிமன்றம் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு பிறப்பித்தது. நாங்கள் பேரூராட்சி தேர்தலில் அதிக அளவில் வெற்றி பெற்றதால் தலைவர் பதவி கழகத்துக்கு உறுதியாக இருந்த நிலையில் வாக்களிக்க வெள்ளலூர் பேரூராட்சி நோக்கி வந்து கொண்டிருந்தோம்.

அப்போது தி.மு.க.வை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கத்தி, கம்பு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் எங்களை தாக்கினர்.

மேலும் திமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் தலைவர் தேர்தலை முறைப்படி நடக்கவிடாமல் வேண்டுமென்றே வன்முறையில் ஈடுபட்டு கழக கவுன்சிலர்களை தாக்கியும் அங்கிருந்த நாற்காலி மற்றும் பல பொருட்களை உடைத்தும் சேதப்படுத்தினார்கள்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரி மற்றும் அங்கிருந்த போலீசாரிடம் முறையிட்ட போது அவர்களும் திமு.க.வுக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக செயல்பட்டனர். அதுமட்டுமல்லாமல் எங்களையும் மிரட்டினர்.

இச்செயலானது தேர்தல் நடைமுறை விதிகளுக்கு எதிரானது. தலைவர் தேர்தலை சுமூகமான முறையில் நடத்தாமல் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கின்றனர்.
ஆகவே நல்ல முறையில் தலைவர் தேர்தலை நடத்திட வேண்டும்.
எங்கள் உடமைக்கும், உயிருக்கும் பாதுகாப்பு தர வேண்டும். தேர்தலில் வன்முறையில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.