கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கிற்கு கழகம் கடும் கண்டனம் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை,
கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேகதாது திட்டத்திற்கு இடையூறு செய்ய தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்று கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான கே. சித்தராமையா ஒரு வாரத்திற்கு முன்பு கூறிய நிலையில், இன்னும் ஒருபடி மேலே சென்று, மேகதாது அணை மற்றும் பெங்களூரு குடிநீர் திட்டற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது நீதிமன்ற அவமதிப்பாகும்.
2022-2023-ம் ஆண்டிற்கான கர்நாடக மாநில நிதிநிலை அறிக்கை நேற்றுமுன்தினம் கர்நாடக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிதிநிலை அறிக்கையில், பக்கம் 23, பத்தி 75-ல், மத்திய அரசிடமிருந்து உரிய அனுமதியை பெற்று மேகதாது அணை மற்றும் பெங்களூரு குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. காவேரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் வகையில் அறிவிப்பினை வெளியிட்டுள்ள கர்நாடக அரசிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
காவேரி நதிநீர் பங்கீடு என்பது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கு இடையேயான ஒன்று. இதற்காக அமைக்கப்பட்ட காவேரி நடுவர் மன்றம், நான்கு மாநிலங்களின் குடிநீர் தேவை, பாசனத் தேவை ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்குமான நீரின் அளவை நிர்ணயித்தது. காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி 192 டி.எம்.சி. அளவு நீரை கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டும். ஆனால், உரிய நீர் தரப்படவில்லை. உபரி நீர் தான் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து, காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீர் பங்கீட்டின் அளவை 177.25 டி.எம்.சி. அடியாக குறைத்தது. இவ்வாறு குறைக்கப்பட்டதற்கு பெங்களூர் குடிநீர் தேவையும் ஒரு காரணமாகும்.
மீண்டும் அதே காரணத்தை காட்டி, மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வது என்பது நியாயமற்ற செயல். இந்த பிரச்சினை தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றத்தின் முன் உள்ள இந்த விவகாரத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குவது என்பது சட்ட விரோதமான செயலும்கூட. கர்நாடக அரசின் இதுபோன்ற நடவடிக்கை வருகின்ற உபரி நீரையும் தடுத்து நிறுத்தும் முயற்சி.
அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென்று 25-04-2015 நாளிட்ட கடிதம் வாயிலாக மாண்புமிகு பாரதப் பிரதமரிடம் நான் வேண்டுகோள் வைத்தேன்.
அந்த சமயத்தில், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. அதில் பெங்களூரு குடிநீர் திட்டம் குறித்தும் கர்நாடகாவால் எடுத்துரைக்கப்பட்டது.
தற்போது அந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பும் வெளிவந்து, கர்நாடகாவிற்கு கூடுதல் நீரும் கிடைத்து விட்டது. இப்போது மறுபடியும் அதே கோரிக்கையை வலியுறுத்துவது ஏற்கக்கூடியதல்ல. இது தமிழ்நாட்டின் உரிமையை பாதிக்கக்கூடிய செயல். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முற்றிலும் முரணான வகையில், கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் எந்த அணையையும் கர்நாடக அரசு கட்ட முடியாது என்ற நிலையில், கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கை தடுத்து நிறுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசின் மூலமாகவும், உச்ச நீதிமன்றத்தின் மூலமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.