மக்களுக்காக கழக கவுன்சிலர்கள் உரிமைக் குரல் கொடுப்பார்கள் – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி

மதுரை
மக்களுக்காக கழக கவுன்சிலர்கள் உரிமைக் குரல் கொடுப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.
மதுரை மாநகராட்சி 85-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா தவுட்டு சந்தையில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் 85-வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துமாரி ஜெயக்குமார், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட கழக பொருளாளர் அண்ணாதுரை, பகுதி கழக செயலாளர் ஜோசப் தனுஷ்லால், வட்ட கழக செயலாளர்கள் முருகன், ஜெயக்குமார், பார்த்தசாரதி, முனியாண்டி, மற்றும் செல்வகுமார், பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ேக.ராஜூ எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் தி.மு.க .செய்த முறைகேடுகளை மக்கள் நன்கு அறிவார்கள். தி.மு.க.வின் அதிகார பலம், ஆள் பலம், பண பலம் ஆகியவற்றை எதிர்த்து ஜனநாயக முறையில் நாங்கள் போட்டியிட்டோம்.
கடந்த 10 மாத தி.மு.க. ஆட்சியில் மதுரையில் உள்ள 100 வார்டுகளில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இதை கண்டித்து கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஆணைக்கிணங்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
அடிப்படை தேவைகளான சாலை பணிகள், குடிநீர் பிரச்சினைகள், பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக மாமன்ற கூட்டத்தில் கழக கவுன்சிலர்கள் உரிமைக்குரல் எழுப்பி மக்களுக்கான திட்டங்களை போராடி பெற்று தருவார்கள்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. கூறினார்.