மக்களை பற்றி சிந்தித்து இருந்தால் மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பாரா?எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

சென்னை
மக்களை பற்றி சிந்தித்து இருந்தால் மின்கட்டணத்தை உயர்த்தியிருப்பாரா? தன் குடும்பத்திற்கு வருவாய் வந்தால் போதும் என்று ஆளுகின்ற ஒரே முதல்வர் ஸ்டாலின் தான் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார்.
கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூர் மாவட்டம் அவினாசியில் நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றியதாவது:-
விவசாயிகளின் கண் முன் உபரி நீர் கடலில் கலக்கிறது. இதனை எப்படி ஏற்றுக்கொள்வது. அற்புதமாக நாங்கள் ஏரி, குளங்களை தூர் வாரிய காரணத்தினால் மழை நீரை சேமித்து, நிலத்தடி நீர் உயரும் நிலையை உருவாக்கினோம்.
விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரத்தை வழங்கினோம். ஆனால் இப்போது எப்போது மின்சாரம் வரும், எப்போது போகும் என்று தெரியவில்லை. தற்போது கடுமையான மின் கட்டண உயர்வு. 12 சதவீதம் முதல் 52 சதவீதம் உயர்ந்துள்ளது.
சராசரியாக பார்த்தால் 34 சதவீதம் உயர்த்தியுள்ளார்கள். மூன்றில் ஒரு பாகத்தை உயர்த்தியுள்ளார்கள். இந்த மின் கட்டண உயர்வினால் வருடத்திற்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். பற்றாக்குறை 12,500 கோடி ரூபாய் தான் என்கிறார் அமைச்சர்.
வருடத்திற்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் மட்டுமல்ல. வருடா வருடம் 6 சதவீத கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்கள். இதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி அடுத்த ஆண்டு மேலும் 6 சதவீதம் கட்டண உயர்வு இருக்கும். இதன்படி 2026 ம் ஆண்டு 52 சதவீதம் மின் கட்டண உயர்வை செலுத்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இந்த விடியா திமுக ஆட்சியில் ஆளாகியிருக்கிறார்கள்
கொரோனா வைரஸ் தொற்று பரவி இரண்டு ஆண்டு காலம் ஆகிறது. இந்த இரண்டு ஆண்டு காலத்தில் மக்கள் வேலையில்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது.
மக்கள் வாழ்வதற்கே கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையிலே, கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் மின் கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் எப்படி தாக்குப்பிடிப்பார்கள். வீட்டு வரியை உயர்த்தி விட்டார்கள்.
இன்றைக்கு அவினாசி பகுதியில் முதலில் நீங்கள் ஆயிரம் ரூபாய் கட்டியிருந்தால் இப்போது இரண்டாயிரம் கட்ட வேண்டும். கடைகளுக்கு 150 சதவீதம் வரியை உயர்த்தி விட்டார்கள்.
இரண்டு வருடமாக கடைகளுக்கு வருவாய் கிடையாது. கொரோனா காலத்தில் மூடி விட்டார்கள். இப்போது தான் கடைகளை மெல்லத்திறந்து வியாபாரத்தை ஆரம்பித்துள்ளார்கள். வியாபாரத்தை ஆரம்பித்தவுடனே 150 சதவீத வரி உயர்வு. வீடுகளுக்கு 100 சதவீத வரி உயர்வு. எப்படி மக்கள் தாக்குபிடிப்பார்கள்.
வேலையில்லாத சூழ்நிலையில்,வருவாய் இல்லாத சூழ்நிலையிலே, இப்போது தான் வருவாய் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இதனைக்கூட கருத்தில் கொள்ளாமல், முதல்வர் ஸ்டாலின் மக்களை பற்றி கவலைப்படாமல் இதனச் செயல்படுத்தியுள்ளார்.
அவர் வீட்டு மக்களைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டுள்ளார். கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன். எதில் கமிஷன் வருகிறதே அதனைத்தான் பார்க்கிறார். நாட்டு மக்களை பற்றி அவருக்கு கவலையில்லை.
உண்மையிலே நாட்டு மக்களைப்பற்றி சிந்தித்திருந்தால் இதனை செய்திருப்பாரா. அம்மா இருக்கும் போது சரி, நான் முதலமைச்சராக இருக்கும் போதும் சரி இதனை செய்தோமா. ஏன் எங்களுக்கு வரியை உயர்த்த தெரியாதா.
ஆட்சியாளர்கள் மக்களின் நிலையை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு ஆட்சி செய்ய வேண்டும். இதுதான் உண்மையான ஆட்சிக்கு அடையாளம். அது தான் மக்களாட்சி. அது தான் ஜனநாயகம். மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கும் முதல்வர் நமக்கு கிடைத்துள்ளார். தன் குடும்பத்திற்கு வருவாய் வந்தால் போதும் என்று ஆளுகின்ற ஒரே முதல்வர் ஸ்டாலின் தான்.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.