தற்போதைய செய்திகள்

கருணாநிதி வழியில் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை பழிவாங்குகிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு

மதுரை

கருணாநிதி வழியில் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை பழிவாங்குகிறார் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

மதுரை மாநகராட்சி 30-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா அண்ணா பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. கழக மாமன்ற உறுப்பினர் வசந்தாதேவி தலைமை தாங்கினார்.

மாவட்ட மாணவரணி செயலாளர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். அலுவலகத்தை மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்து பேசியதாவது:-

முல்லை பெரியாற்றின் குறுக்கே கேரளா அரசு புதிய அணை கட்ட நிதி ஒதுக்கியுள்ளது. அணை கட்டினால் 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோய் விடும். விளை நிலங்கள் எல்லாம் பாலைவனம் போல் ஆகிவிடும். தற்போது மதுரை மக்களின் வாக்குகளை பெற்ற கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் இதுகுறித்து வாய் திறக்கவில்லை.

குறிப்பாக விவசாய மக்கள் போராடி வரும் வேளையில் தமிழகத்தின் முதலமைச்சர் இதுகுறித்து வாய் திறக்காமல் இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஆகவே முதலமைச்சர் இதுகுறித்து விரிவான அறிக்கை வெளியிட வேண்டும்.
ஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழாவில் கேரளா முதலமைச்சர் பங்கேற்றார்.

அவ்வளவு இணக்கமாக உள்ளார். ஆகவே கேரளா முதலமைச்சருடன் பேசி தமிழகத்தின் ஜீவாதார உரிமையை காக்க செயல்பட வேண்டும். இல்லை என்றால் வருகின்ற தேர்தல் காலங்களில் ஐந்து மாவட்ட மக்கள் சரியான பாடத்தை தி.மு.க கூட்டணிக்கு புகட்டுவார்கள்.

தற்போது முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தை மிரட்டி பார்க்கலாம் என்ற நோக்கத்துடன் கருணாநிதி வழியில் அவரது மகன் ஸ்டாலின் சோதனை என்ற பெயரில் பழிவாங்கி வருகிறார். இதுபோன்று எத்தனையோ சோதனைகளை கழகம் சந்தித்து வெற்றி வாகை சூடி இருக்கிறது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் அண்ணாதுரை, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், கழக மாணவர் அணி இணை செயலாளர் குமார், கழக இளைஞர் அணி இணை செயலாளர் ரபீக், மாவட்ட இளைஞரணி செயலாளர் சோலை ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மாணிக்கம், பகுதி கழக செயலாளர் செந்தில்குமார், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சக்தி வினாயகர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.