பாண்டவர்களுக்கு தான் இறுதி வெற்றி கிடைக்கும்- முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம்

சென்னை
கவுரவர்கள் வெற்றி தற்காலிகமானது. பாண்டவர்களுக்கு தான் இறுதி வெற்றி கிடைக்கும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
தி.மு.க. அரசால் பொய் வழக்கு புனைப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் தங்கியுள்ள அவர் நேற்று காலை கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.
இதன் பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மக்களுக்காக எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றினார். அதுபோல அம்மா அவர்களும் மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. இன்றைக்கு அப்படியா தமிழகம் உள்ளது. அமளி பூங்காவாக இருக்கிறது.
ஆட்சியில் உள்ளவர்கள் மக்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். மக்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல் ஒரே கருத்து, கழக முன்னோடிகள் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும் வழக்கு தொடுப்பது.
எத்தனை வழக்குகள் போட்டாலும் சரி, எதற்கும் அஞ்சாதவர்கள் கழகத்தினர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் ஒரு சல்லி காசுக்கூட லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றாத நிலையில் ஒரு விஷமத்தமான பிரச்சாரத்தை செய்கிறார்கள்.
ஹிட்லர் ஆட்சியில் நடைபெற்ற கொடுமைகளை மறைப்பதற்காக கோயபல்ஸ் என்ற பிரச்சார பீரங்கி ஹிட்லருக்கு இருந்தது. அதுபோலத்தான் இன்று ஒரு தவறான, விஷமத்தனமான பிரச்சாரம் செய்கிறார்கள்.
திரும்ப, திரும்ப அதனை சொல்வதின் மூலம் மக்கள் மனதில் கழகத்தின் பெயரை களங்கப்படுத்துகின்ற அந்த பணியை இன்று கோயபல்ஸ் பாணியில் செய்கிறார்கள். இது நிச்சயமாக எடுபட போவதில்லை. நீதிமன்றத்தை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். நீதி நிச்சயம் வெல்லும்.
கேள்வி:- வழக்குகள் மூலம் அ.தி.மு.க மிரட்டப்படுகிறது என்று நினைக்கிறீர்களா?
பதில்:- வழக்குகள் மூலம் கழகத்தை அழித்து விடலாம் என்ற அந்த ஒரு ஆயுதத்தை மட்டும் எடுத்துள்ளார்கள். இன்றைக்கு நடப்பது கவுரவர்கள் ஆட்சி. கவுரவர்கள் தற்காலிகமாக வெற்றி பெற்றிருக்கலாம்.
ஆனால் இறுதி வெற்றி பாண்டவர்களுக்கு தான். பாண்டவர்கள் நாங்கள். நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் ஒரு மகத்தான வெற்றியை பெறுவோம். எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சப்போவதில்லை. இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் எங்கள் கட்சியினர் யாரும் பயப்பட மாட்டார்கள்.
கேள்வி:- சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துவிட்டு தொடர்ந்து பேட்டி அளிக்கிறார் என்று கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார் ஆர்.எஸ்.பாரதி.
பதில்:- அவரால் தாங்க முடியவில்லை. நான் எதார்த்த நிலையை பிரதிபலிக்கிறேன். நீதிமன்ற தீர்ப்பை நான் விமர்சனம்
செய்யவில்லை. திருச்சியில் தங்கியிருந்து மூன்று நாட்கள் கையெழுத்து போட வேண்டும் என்பது தான் உத்தரவு. நான் பேசக்கூடாது என்று உத்தரவு ஏதாவது உள்ளது. அவர்கள் எப்படியாவது என் வாயை மூட வேண்டும் என்று நினைக்கிறார்கள். என் வாயை மட்டுமல்ல ஒன்றரை கோடி தொண்டர்களின் வாயை மூட முடியாது. தமிழக
மக்களின் வாயை மூட முடியாது.
கேள்வி:- இந்தியாவின் தலை சிறந்த முதல்வர் ஸ்டாலின் என்று சொல்கிறார்களே. மேலும் அடுத்த பிரதமர் ஆகக்கூடிய வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்களே.
பதில்:- யார் இதனை சொன்னது. ஜ.நா. சபை சொன்னதா. அல்லது பிற நாடுகள் ஏதாவது சொன்னதா. தனக்கு தானே மகுடம் சூட்டிக்கொள்வது. தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொள்வது. பிரதமர் ஆகக்கூடிய வாய்ப்பு உள்ளதாக
நீங்கள் சொல்வது இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக் இது தான்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.