தற்போதைய செய்திகள்

சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்-அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் அறிவிப்பு

சேலம்,

போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.

சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் நேற்று காலை அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கண்டன வாயிற் கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வினை உடனே நடத்தி முடிக்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் மற்றும் டி.ஏ. அரியருடன் வழங்க வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக முடித்து வழங்க வேண்டும்,

அதுவரை இடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், நகர்ப்புற பேருந்துகளில் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு ரூ.100 இன்சென்டிவ் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துனர் பற்றாக்குறை காரணமாக டபுள் டூட்டி என்ற பெயரில் தொழிலாளர்களை பழிவாங்குவது, தொழிலாளர்களுக்கு வார ஓய்வு வழங்காதது, அண்ணா தொழிற்சங்க தொழிலாளிகளையும், நிர்வாகிகளையும் பழிவாங்கும் போக்கு ஆகியவற்றை கண்டித்தும் இந்த வாயிற்கூட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன வாயிற் கூட்டத்திற்கு சேலம் மண்டல செயலாளர் கே.சென்னகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செ.செம்மலை, சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அண்ணா தொழிற்சங்க மாநில பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
அரசு கஜானாவிலிருந்து, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை போல், போக்குவரத்து ஊழியர்களுக்கும் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், அதை வலியுறுத்திதான் அரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளிலிருந்து ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், அரசு போக்குவரத்து ஊழியர்கள் மீது பழிவாங்கும் போக்கை கைவிட்டு அவர்கள் நலனை பாதுகாக்க வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்த போது 2021 பொதுத்தேர்தல் சமயத்தில் கிராமசபை கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டம்நடைமுறைப்படுத்தபடும் என்று வாக்குறுதி அளித்தார் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஓட்டுனர்கள் விபத்து நடத்தினால், விபத்து நடந்தது குறித்து ஆய்வு செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும், ஆனால் அதற்கு முன்பாகவே அரசு ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களுடைய பணப்பலன்களை நிறுத்தி வைப்பது போன்ற ஓட்டுநர்கள் மீதான பழி வாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். போக்குவரத்து பணியாளர்களுக்கு தரமான உணவு, சீருடை மற்றும் சுகாதாரமான கழிவறை ஆகியவற்றை வழங்க வேண்டும். இது கோடைகாலம் என்பதால் ஓட்டுநர்களுக்கு 2 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். இப்படி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் அரசிடம் மனுக்கள் கொடுத்துள்ளோம்.

இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அனுமதி பெற்று சென்னையில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும்.

போக்குவரத்து தொழிலாளர்களின் நலனுக்காக அண்ணா தொழிற்சங்கம் என்றென்றும் பாடுபடும்.

கழகம் ஆட்சியில் இருந்தபோது பள்ளி மாணவர்கள் கூட்டமாக செல்லும் இடங்களில் பாதுகாப்பிற்கு ஒவ்வொரு பேருந்து நிறுத்தங்களில் ஒரு காவலரை நிறுத்தி கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் அதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மாணவர்கள் கூட்ட நெரிசலில் படியில் தொங்கியபடி பயணிக்கிறார்கள், அவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு உரிய பாதுகாப்பில்லை, அவர்கள் மிரட்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இது குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் பேசினார்.

இக்கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ம.ராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் இ.பாலசுப்பிரமணியன், கு.சித்ரா, மாநகர மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஆர்.சுந்தரபாண்டியன், சேலம் புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டி.சித்துராஜ், மண்டல தலைவர் எம்.நல்லப்பன், மண்டல பொருளாளர் எஸ்.ராஜ்குமார், இணை செயலாளர்கள் கந்தசாமி, சரவணன், பழனிசாமி, துணைத்தலைவர்கள் கண்ணன், மகாலிங்கம், ரமேஷ், அன்புக்கரசு, வேணு உள்ளிட்ட போக்குவரத்து கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.