சிறப்பு செய்திகள்

காவேரியில் தமிழகத்தின் உரிமையை காக்க அரசின் தனி தீர்மானத்துக்கு கழகம் ஆதரவு – சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உறுதி

சென்னை, மார்ச் 22-

தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவேரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்ததனி தீர்மானத்தை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆதரித்து பேசியதாவது:- காவேரி நதிநீர் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாகவும், தமிழ்நாட்டில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவையைபூர்த்தி செய்யும் நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. 1986-ம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழ்நாடுஅரசு, 1956-ம் ஆண்டைய மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டத்தின்படி ஒரு நடுவர் மன்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மத்தியஅரசை கேட்டுக் கொண்டது.இப்பிரச்சினை தொடர்பாக, தமிழ்நாடு காவேரி நீர்ப் பாசன விளைபொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தனர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசும் தன்னை இவ்வழக்கில் இணைத்து கொண்டது. 25.6.1991 அன்று, மேட்டூர் அணைக்கு 205 டி.எம்.சி. அடி நீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் காவேரி நடுவர் மன்றம் ஒரு இடைக்கால ஆணையை பிறப்பித்தது. இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் வரையில் இந்த இடைக்கால ஆணை நடைமுறையில் இருக்கும் என்று இடைக்கால ஆணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உறுதியான நடவடிக்கையின் காரணமாக 10.12.1991 அன்று காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிடப்பட்டு காவேரியில் தமிழ்நாட்டின் உரிமை நிலை நாட்டப்பட்டது. மத்திய அரசிதழில் இந்த இடைக்கால ஆணை வெளியிடப்பட்டாலும்,அதனை செயல்படுத்துவதற்கான அமைப்பு ஏற்படுத்தப்படாத காரணத்தால், அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி 1992-ம் ஆண்டு ஒரு சிவில் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. 11.8.1998 அன்று மத்திய அரசு, காவேரி நதிநீர் ஆணையம் மற்றும் காவேரிகண்காணிப்பு குழு என்ற இரு அமைப்புகளை ஏற்படுத்தியது. இந்த அமைப்புகளால் தமிழ்நாட்டிற்கு பயன் ஏதும் கிடைக்கவில்லை.இதன் பிறகு, காவேரி நடுவர் மன்றம், தனது இறுதி ஆணையை 5.2.2007 அன்று பிறப்பித்தது. காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பினை மத்தியஅரசிதழில் வெளியிட வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையினை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. அம்மா அவர்கள் 2007-ம் ஆண்டு நடுவர் மன்ற இறுதிதீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டுமென்று உச்சநீதி மன்றத்தில வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றம், 2007-ன் நடுவர் மன்றஇறுதி தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டுமென்று தீர்ப்பு வழங்கியது.

அதன்படி மத்திய அரசு, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை19.2.2013 மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு, காவேரி பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமை நிலை நாட்டப்பட்டது.காவேரி படுகை ஒரு பற்றாக்குறை படுகை ஆகும். காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணைப்படி, நீர்த்தேக்கங்களில் நீரை தேக்கி வைக்கவும், அவற்றில் இருந்து நீரை விடுவிப்பதற்கும் தற்பொழுது இயங்கி வரும் அணைகளே போதுமானதாக உள்ளது என காவேரி நடுவர் மன்றம் அதன் இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், எந்த ஒரு திட்டத்தினையும் செயல்படுத்த கொள்கை அளவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் முன்னரே, கீழ் பாசன மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட போதிலும், காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர்முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு அமைக்கவில்லை.

எனவே, இந்த இரு அமைப்புகளையும் உடனடியாக அமைக்க மத்தியஅரசுக்கு ஆணையிடக்கோரி, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அறிவுறுத்தலின்படி, 18.3.2013 அன்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில்இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது.

கர்நாடக அரசு, நீர்மின் திட்டங்கள் பற்றி ஏதும் தெரிவிக்காமல், குடிநீர் திட்டம் என்ற போர்வையில் மேகதாது என்னுமிடத்தில் புதிதாக இரண்டுஅணைகள் கட்ட கோரியுள்ள தொழில்நுட்ப ஆய்விற்கான “விருப்பம் கோரும் அறிவிப்பை” திரும்ப பெற வேண்டுமெனவும், காவேரி படுகை

பகுதியில் காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ள திட்டங்களுக்கு மாறாக கர்நாடகம் இவ்விரு அணைகளை கட்டும் பணிகளையோ அல்லது வேறு எந்த புதிய திட்டங்களையோ மேற்கொள்ளக்கூடாது எனவும், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையிலும்

மற்றும் உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரையிலும் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் ஆணை வழங்குமாறு அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு 18.11.2014 அன்று உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது.

கர்நாடக அரசு அதன் 18.11.2014 நாளிட்ட கடிதத்தில், ஏற்கனவே நிலுவையில் உள்ள இடைக்கால மனுவில் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் இந்த திட்டத்தை நிறைவேற்ற போவதில்லை என்று தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்தது. கர்நாடக அரசு, தன்னிச்சையாக மேற்கொள்ளும் மேற்கண்ட திட்டங்களை தடுத்து நிறுத்தும் பொருட்டு, அம்மா அவர்களால் 5.12.2014 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உரிய நடவடிக்கைக்காக பாரத பிரதமருக்குஅனுப்பப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி பாரத பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரத பிரதமரை 28.3.2015 அன்று நேரில் சந்தித்து வழங்கினர்.

அப்போது, சம்பந்தப்பட்ட துறையிடம் தற்போதைய நிலைகுறித்த அனைத்து விவரங்களையும் சேகரிக்க ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளதாகவும், இது குறித்து பரிசீலிப்பதாகவும் பாரத பிரதமர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதி அளித்தார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் 25.4.2015 அன்று பாரத பிரதமரை நேரில் சந்தித்து, மேகதாது திட்டத்தினை கர்நாடக அரசு செயல்படுத்தக் கூடாது என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தும்படி கோரி விளக்கமான கடிதத்தையும் அளித்தார். புரட்சித் தலைவி அம்மா அவர்கள், பாரத பிரதமரிடம் 7.8.2015 மற்றும் 14.6.2016 ஆகிய நாட்களில் நேரில் சந்தித்து மேகதாது திட்டத்தினை கர்நாடக அரசு செயல்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினார்.

புரட்சித் தலைவி அம்மா அவர்கள், மேகதாது அணை உட்பட காவேரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மீறும் வகையிலும், தமிழ்நாடு அரசின் இசைவு பெறாமலும்,எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த உத்தேசிக்குமானால், தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்ட சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும்தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என 18.8.2016 அன்று இம்மாமன்றத்தில் 110-வது விதியின் கீழ் உறுதிபட தெரிவித்தார்.

இதற்கிடையில், மாநில அரசுகள் தாக்கல் செய்த சிவில் வழக்குகள் விசாரணைக்கு உகந்ததா என்பது பற்றி உச்ச நீதிமன்றத்தில் எல்லா மாநிலங்களும், மத்திய அரசும் வாதிட்டன. 9.12.2016 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த ஆணையில், இம்மனுக்கள் உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு உகந்தவை என தீர்ப்பளித்தது. அதன் பின்னர், ஜூலை2017 முதல் செப்டம்பர் 2017 வரை இறுதி கட்ட வாதங்கள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றன.

இதில், கர்நாடக அரசு 9 நாட்களும், கேரள அரசு 2 நாட்களும், தமிழ்நாடு அரசு 13 நாட்களும், புதுச்சேரி மற்றும் மத்திய அரசு தலா ஒரு நாளும் தங்கள் வாதங்களை எடுத்துரைத்தன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், 16.2.2018 அன்று தனது தீர்ப்பினை வழங்கியது.

இத்தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* பன்மாநில நதிகள் தேசிய சொத்து. எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது என்ற நவம்பர், 1991-ம் ஆண்டைய உச்ச நீதிமன்றத்தின் கருத்து இத்தீர்ப்பில் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

* 1892 மற்றும் 1924-ம் ஆண்டைய ஒப்பந்தங்கள் செல்லத்தக்கதல்ல என்ற கர்நாடகாவின் வாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

* கர்நாடக அரசு, தமிழ்நாட்டின் பாசன பரப்பான 24.708 லட்சம் ஏக்கர் என்பதை 21 லட்சம் ஏக்கர் என குறைக்க வேண்டுமென நடுவர்மன்றத்தின் முன் வாதிட்டது. இதனை காவேரி நடுவர் மன்றம் ஏற்றுக் கொள்ளாமல் தமிழ்நாட்டின் பாசனப்பரப்பு 24.708 லட்சம் ஏக்கர் என அதன் இறுதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இதனை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

* உச்ச நீதிமன்றம் தற்போது பிறப்பித்த ஆணைக்கு பாதகம் ஏதும் இல்லாமல், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணைப்படி, மாதாந்திரஅடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு நீர் வழங்கப்பட வேண்டும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

* உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்களின் வாதங்களை முழுமையாக கேட்டறிந்த பின்னர், கீழ்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல்மேல்படுகை மாநிலங்கள் எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தெளிவான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

* மேகதாது திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்ற நமது நிலைப்பாட்டை, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னரும், பின்னரும், 25.2.2017, 27.2.2017,4.9.2018, 8.10.2018 மற்றும் 22.11.2018 ஆகிய நாட்களில் நான் பாரத பிரதமருக்கு கடிதங்கள் மூலமாகவும், நேரடியாக சந்தித்தும், அணை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளேன்.

* மேலும், 5.7.2017 மற்றும் 23.11.2017 ஆகிய நாட்களில் மத்திய நீர்வள ஆதாரத் துறை அமைச்சரையும் நேரில் சந்தித்தும், கடிதங்களின்வாயிலாகவும் கர்நாடக அரசுக்கு எவ்வித அனுமதியையும் மத்திய அரசு வழங்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளேன்.

* கர்நாடக அரசு காவேரி நதிநீர் பிரச்சினையில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை பலமுறை எடுத்துரைத்தும் அதை கருத்தில் கொள்ளாமல் ஒருதலைபட்சமாகசெயல்படுவது வேதனை அளிப்பதாக உள்ளது. இது காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறும் செயலாகும்.

* ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் பெங்களூரு நகரின் குடிநீர் தேவை உள்ளிட்ட பிற பயன்பாடுகளுக்காக 14.75 டி.எம்.சி. அடி நீரை கர்நாடகாவிற்குகூடுதலாக அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் பெங்களூருவின் குடிநீர் தேவைக்கென 67 டி.எம்.சி. அடி நீர் கொள்ளவு கொண்ட மேகதாது அணையை கட்ட கர்நாடகா முயற்சிப்பது, தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் உள்நோக்கம் கொண்ட ஒரு செயலாகும்.

* எனவே, இவ்வணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரமும், உரிமையும் கடுமையாக பாதிக்கப்படும். மேலும், நீர்ப் பற்றாக்குறை ஏற்படும்ஆண்டுகளில், கடந்த காலங்களை போலவே காவேரி நீரை முழுமையாக தனது உபயோகத்திற்காகவே கர்நாடகா பயன்படுத்தும் நிலை உருவாகும்.

* மேலும், சட்ட வல்லுநர்களின் ஆலோசனையின்படி, கர்நாடகாவிற்கு வழங்கியுள்ள அனுமதியை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்என தமிழ்நாடு அரசின் சார்பில் 30.11.2018 அன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

* இதைத் தவிர, காவேரி படுகையில் மேற்படுகை மாநிலமான, கர்நாடகா புதிய அணை கட்டுவதற்கான எந்த ஒரு அனுமதியும் மத்திய அரசு வழங்கக்கூடாது என்றும் உறுதிபட எடுத்துரைக்கப்பட்டது.

* மேலும், உச்ச நீதிமன்ற ஆணைக்கு எதிராக, கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்கிய மத்தியநீர்வள குழுமத்தின் தலைவர், கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் மற்றும் கர்நாடக உயர் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எனது உத்தரவின் பேரில் 5.12.2018 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

* நிலத்தில் பாயும் நீரானது பொதுவானது, மற்றும் அனைவருக்கும் சமமமானது, அதை யாரும் தடுக்கவோ, அல்லது நீரை திருப்பவோ முடியாது.ஆற்று நீர் என்பது இயற்கையின் பரிசாகும் என்று உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(இறுதி தீர்ப்பு பத்தி 363, பக்கம் 403)ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளை தடுக்கும் வகையில் இரண்டுமுறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை குறிப்பிடவிரும்புகிறேன்.

* 2014-ல் கர்நாடக அரசு குடிநீர் திட்டம் என்ற போர்வையில் மேகதாது என்னுமிடத்தில் புதிதாக இரண்டு அணைகள் கட்ட உள்ளதாகவும்,இதற்கென தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்வதற்காக “விருப்பம் கோரும் அறிவிப்பை” கோரியுள்ளது என்று செய்திகள் வந்ததை அடுத்து, கர்நாடக அரசு தன்னிச்சையாக மேற்கொள்ளும் மேற்கண்ட திட்டங்களை தடுத்து நிறுத்தும் பொருட்டு 5.12.2014 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தீர்மானம் ஒருமனதாகநிறைவேற்றப்பட்டது.

* மீண்டும் மேகதாதுவில் புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள குழுமம் கர்நாடக அரசுக்கு அளித்துள்ள அனுமதியை திரும்ப பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 6.12.2018 அன்று அப்போதைய முதல்வராக இருந்த நான் கொண்டு வந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரை, 1986-ம் ஆண்டில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் மீண்டும் துவக்கப்பட்ட சட்டப் போராட்டத்தை தொடர்ந்து, காவேரி நடுவர் மன்றம் அமைத்தது, அதை மத்திய அரசிதழில் வெளியிட செய்தது, நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையின்படி காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர்முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க உச்ச நீதிமன்றத்தை நாடியது, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை பெற்றது,அதன் பின்னர் காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்க முனைப்புடன் பாடுபட்டது.

நீண்ட, நெடுங்கால சட்ட போராட்டத்திற்கு பின்னர் நிலைநிறுத்தப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமையையும், டெல்டா விவசாயிகளின்வாழ்வாதாரத்தையும், 20 மாவட்டங்களுக்கும் மேலாக குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவேரி ஆற்றில் நமக்குள்ள உரிமையை பேணி காக்கவேண்டியது நம் எல்லோரின் கடமையாகும். கர்நாடக அரசு காவேரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பை மதிக்காமலும், 16.2.2018 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த இறுதிதீர்ப்பையும் மதிக்காமல், தன்னிச்சையாக மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்கியது கண்டிக்கத்தக்கது. அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அரசின் தனி தீர்மானத்தை ஒருமானதாக ஆதரிக்கிறோம்.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.