தற்போதைய செய்திகள்

முன்னாள் முதலமைச்சரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதா?

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூடும் கண்டனம்

சென்னை

யார் போலி விவசாயி என்று நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அதை விடுத்து முன்னாள் முதலமைச்சரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதா? என்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.எ. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்து அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கான தொகையை, மத்திய அரசின் நிதி வரவில்லை என்று விவசாயிகளுக்கு நெல்லுக்கான தொகையை வழங்காமல் காலதாமதம் செய்து வருவது, இன்றைக்கு நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

இதைத்தான் சட்டமன்றத்தின் எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் எடுத்து சொன்னார். விவசாயிகள் இன்றைக்கு அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்கிற உண்மை நிலையை எடுத்து சொன்னார்.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் வேளாண்மைத்துறை அமைச்சர் மிகவும் தரக்குறைவாக அறிக்கை வெளியிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ஆகவே இதனை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம். இன்றைக்கு விவசாயிகளின் முதலமைச்சர் என்று எல்லோராலும் போற்றப்படுகின்றவர் எடப்பாடியார்.

இன்றைக்கு வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்கள். நிதிநிலை அறிக்கையின் இலக்கணமே இல்லாமல், கொள்கை விளக்க குறிப்பை, நிதிநிலை அறிக்கை என்று தாக்கல் செய்துள்ளார். இதனை நாங்கள் சொல்லவில்லை. விவசாயிகள் ஊடக விவாதங்களில் எல்லா இடங்களிலும் எடுத்து வைக்கிறார்கள்.

இதைத்தான் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஒரு கொள்கை விளக்க குறிப்பாகத்தான் வேளாண் நிதிநிலை உள்ளது என்ற உண்மை நிலவரத்தை, களநிலவரத்தை, விவசாயிகளின் கருத்தை எடுத்து சொன்னார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவரை போலி விவசாயி என்று சொல்கிறார்கள்.

எந்த அர்த்தத்தில் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. பரம்பரை பரம்பரையாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் குலத்தொழிலாக, குடும்ப தொழிலாக விவசாய பணியை செய்து வருகிறார். . அந்த விவசாயத்தை அவர் நேசிக்கிறார். இதைத்தான் இன்றைக்கு நாட்டுமக்கள் கொண்டாடுகிறார்கள்.

ஒரு விவசாய முதலமைச்சராக இந்த நாட்டுக்கு பெருமை சேர்த்தார். அவர் ம திருவாரூர் மாவட்டத்திற்கு சொல்லும்போது டெல்டா மாவட்டத்தை பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தார். அன்றைக்கு அங்கு இருக்கும் விவசாயிகளிடம் நேரடியாக உரையாடும்வாயிலாக வெளியே கொண்டு வந்தீர்கள். இது எல்லா இடங்களிலும் வரவேற்கப்பட்டு, பாராட்டப்பட்டது.

அதற்கு பிறகுதான் அன்றைய எதிர்கட்சித்தலைவர், இன்றைக்கு முதலமைச்சராக இருப்பவர் நடவு செய்த காட்சி எல்லாம். அவர் விவசாயத்தை பற்றி அறிந்ததில்லை. அது அவர் செய்தபாவம் இல்லை. அவர் சென்னையிலே பிறந்து, சென்னையிலே வளர்ந்த காரணத்தினால் விவசாயத்தை பற்றி அறிந்ததும் இல்லை. அதுபற்றி தெரிந்ததும் இல்லை.

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒரு தோட்டத்திற்கு சென்று, பேண்டு, சட்டை போட்டு கொண்டுதான் அவர் நடவு பணிளை செய்தார் என்பது ஊடகங்களிலே வெளிவந்த செய்தி. எனவே இதுதான் நவீன போலி விவசாயி. ஒருபோலித்தனமான செயலை செய்யதைதான் போலி விவசாயி என்று சொல்வார்கள்.

தலைவாசலில் கான்கிரீட் பாதை அமைத்து, சிவப்பு கம்பளம் விரித்து, காலில் அழுக்கு படாமல் கரும்பு தோட்டத்தில் சென்று பார்த்த காட்சி ஊடகத்திலே வெளி வந்திருக்கிறது. ஆகவே இதுதான் போலி விவசாயி.

உண்மையான விவசாயி எப்படி வரப்பிலே நடக்க வேண்டும், எப்படி நடவு செய்ய வேண்டும் என்பதெல்லாம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் நன்கு அறிவார். எங்கள் எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது அவர் செய்த அந்த பணிகளை பார்த்து தான், எல்லோருமே விவசாயிகளை ஊக்கவிக்க வேண்டும் என்று நடவு செய்கிறார்கள்.

இதனை நாங்கள் விமர்சனம் செய்யவில்லை. ஆனால் வேளாண்மைத்துறை அமைச்சர் போலி விவசாயி என்று விமர்சனம் செய்துள்ளார். டெல்டா மாவட்ட விவசாயிகள் காவேரி காப்பாளர் என்ற பட்டத்தை சூட்டியுள்ளார்கள். ஒரு நீண்டகால பிரச்சினையான காவேரி பிரச்சினைக்கு நடுவர் மன்ற தீர்ப்போடு, உச்சநீதிமன்ற தீர்ப்பை பெற்று தந்த கைராசி முதல்வர் என்று அந்த பகுதியிலே இருக்கின்ற டெல்டா மாவட்ட விவசாயிகளால் பாராட்டப்பட்டுள்ளார்.

முல்லை பெரியாறு அணையிலே தீர்வு கண்டுள்ளார். எளிய முதலமைச்சர், சாமானிய முதலமைச்சர், என்பதெல்லாம் மக்கள் அளித்த பட்டங்கள். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் இன்றைக்கு வேளாண் நிதிநிலை அறிக்கை என்ற ஒன்றைக் கொடுத்து விட்டு, அதில் உப்பும் இல்லாமல், சப்பும் இல்லாமல், யானை பசிக்கு சோளை பொறி என்பதைப்போல, 11 துறைகளை ஒருங்கிணைத்து அந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை வேளாண்துறைக்கு ஒதுக்கியதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்கியதை எதிர்கட்சித் தலைவர் எடுத்து காட்டியதால் அந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இப்படி பேசியுள்ளார்.

இந்த வேளாண் நிதி நிலையில் ரூ.33 ஆயிரத்து, 7 கோடியே, 68 லட்சத்து 52 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 11 துறைகளை, வேளாண்மைத்துறையும் சேர்த்து 12 துறைகளை ஒருங்கிணைத்துத்தான் இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளதே தவிர, இது ஒன்றும் புதியதல்ல. வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு என்று சொல்லப்பட வேண்டும்.

ஆனால் இதில் எதுவும் சொல்லப்படவில்லை. ஏற்கனவே இடைக்கால நிதி நிலையில் சொல்லப்பட்ட 82 அறிவிப்புகளில் 80-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை நிறைவேற்றி விட்டோம், அரசாணை வெளியிட்டு விட்டோம் என்று சொல்கிறார்கள்.

அரசாணை என்பது ஒரு திட்டத்தை அறிவிக்கும்போதே வெளியிடப்படும். பேரிடர் காலங்களில் இந்தியாவிலேயே அதிகமான அரசாணை வெளியிட்ட, மக்களை பாதுகாத்த முதலமைச்சர் என்கின்ற சிறப்பு எடப்பாடியாரை சாரும். பிரதமரே எடப்பாடியாரை பாராட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு வெளியிட்ட வேளாண் நிதிநிலையில் தற்போது எதை எதைச் செயல்படுத்தியுள்ளார்கள் என்பதை அவரால் பட்டியலிட்டு சொல்லமுடியாது. இது நிதர்ச்சமான உண்மை. இந்த உண்மையை எதிர்த்து சொல்வதுதான் ஜனநாயக கடமை. அந்த ஜனநாயக கடமையை தான் எடப்பாடியார் செய்துள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் அறிக்கை வெளியிட்ட வேளாண்மைத்துறை அமைச்சரின் செயல் கண்டிக்கத்தக்கது.

இன்றைய முதலமைச்சர், அன்றைய எதிர்கட்சித்தலைவர் தான் மக்களிடத்திலே நமக்கு நாமே திட்டத்தின்போது போலியாக செயல்படுத்தினார். எங்கள் எதிர்கட்சி தலைவரை போலி விவசாயி என்று குறிப்பிட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். இதுபோன்று பேசும் அமைச்சர்களை முதலமைச்சர் கண்டிக்க வேண்டும். எடப்பாடியார் தொடர்ந்து உண்மையை சொல்வார்.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், அரசியல் நாகரீகத்தோடு விமர்சனங்களை முன்வைக்க வேண்டுமே தவிர இப்படி அவர்கள் தரம்தாழ்ந்து சொல்வார்கள் என்றால் நாங்களும் அந்தநிலைக்கு செல்ல வேண்டியநிலை ஏற்படும் என்பதை எச்சரிக்கையாகஎ தெரிவிக்கிறேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.