ஏமாற்று வித்தை காட்டும் தி.மு.க. அரசுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

திருச்சி
தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தை நிறுத்தி ஏமாற்று வித்தை காட்டும் தி.மு.க. அரசுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
தி.மு.க அரசால் புனையப்பட்டுள்ள பொய் வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள கழக அமைப்பு செயலாளரும், வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் நேற்று 4-வது முறையாக ஆஜராகி கையெழுத்திட்டார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி:- பட்ஜெட்டில் தாலிக்கு தங்கம் இல்லை என்று சொல்லப்படுகிறது. அது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- ஏழை- எளிய மக்களுடைய வாழ்வு மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் செயல்படுத்த முடியாத அளவிற்கு எண்ணற்ற திட்டங்கள் கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சத்துணவு திட்டம் இன்றைக்கும் ஐ.நா. சபையே பாராட்டக்கூடிய ஒரு மகத்தான திட்டமாக உள்ளது. அதேபோல், புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக் காலத்தில் விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
ஆனால் தி.மு.க. அரசு மீன்வளத்துறை, பால்வளத்துறை, கால்நடைத்துறை இவைகளுக்கு அந்ததந்த காலகட்டத்தில் ஒதுக்கக்கூடிய நிதியை எல்லாம் சேர்த்து வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
இது விவசாயிகளை ஏமாற்றக் கூடிய திட்டமாகத்தான் உள்ளது. விவசாயிகளுக்கு தேவையான திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. ஒட்டுமொத்தமாக பார்த்தால் விவசாயிகளை ஏமாற்றும் திட்டங்கள்தான் வேளாண் பட்ஜெட்டில் உள்ளது.
புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சிக்காலத்தில் பள்ளி குழந்தைகளுக்கு ஜாமென்ட்ரி பாக்ஸில் இருந்து ஸ்கூல் பேக், காலர்சிப் வரை. சைக்கிள், லேப்-டாப், தாலிக்கு தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டி இதுபோன்ற இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்த முடியாத எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி மக்களுடைய ஏகோபித்த ஆதரவை பெற்ற, ஒரு சமூக நீதியை நிலைநாட்டக் கூடிய அரசாக அம்மாவுடைய அரசு செயல்பட்டது.
ஏழை- நடுத்தர மக்கள் குறிப்பாக, கிராமப்புற, நகர்ப்புற பெண்கள் தாலிக்கு தங்கம் பெறுகின்ற திட்டம், திருமணத்திற்கு நிதி உதவி திட்டம் என ஏழை மக்களின் கஷ்டத்தை அறிந்து கிட்டத்தட்ட 5000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, டன் கணக்கில் தங்கம் கொடுத்தோம்.
சமூக நீதி என்று வாய்கிழிய பேசுகின்ற தி.முக. அரசாங்கம் ஏழை, நடுத்தர பெண்கள் பயனடையக்கூடிய இந்த திட்டங்களை நிறுத்தி விட்டது. 2 கோடியே 16 லட்சம் குடும்ப அட்டையுள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டு அதுவும் இன்றுவரை கொடுக்கப்படவில்லை.
மக்களை ஏமாற்றுகின்ற வேலையை தான் தி.முக. ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் கிட்டத்தட்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நலத்திட்டம் பெறக்கூடிய நிலை இருந்தது. அந்தநிலை மாறி இப்பொழுது ஒரு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் கூட இல்லை என்கிற நிலை உருவாகியுள்ளது.
யானை பசிக்கு சோளப்பொறி என்கின்ற ஒரு மோசமான வித்தை காட்டும் வேலையில் இந்த அரசாங்கம் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. மக்களை பொருத்தவரை இதை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். தக்க பாடத்தை தேர்தல் களத்தில் கொடுப்பார்கள்.
கேள்வி:- தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு பட்ஜெட்டில் 28 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் கொடுத்து உள்ளார்கள். இலவச மின்சாரம் நிறுத்தப்படும் என்கின்ற பயம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதை பற்றி உங்களுடைய கருத்து என்ன?
பதில்:- இப்பொழுதுதான் உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ளது. இனிமேல் நிறைய பரிசுகளை ஸ்டாலின் உங்களுக்கு கொடுப்பார். பஸ் கட்டணத்தை ஏற்றி பரிசு கொடுப்பார். மின் கட்டணத்தை ஏற்றி பரிசு கொடுப்பார். அதேபோல், பால்விலை உயர்வு, சொத்துவரி உயர்வு இவைகளெல்லாம் கண்டிப்பாக நடக்கும். விரைவில் இதுபோன்ற எண்ணற்ற பரிசுகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
கேள்வி:- ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக உள்ளார். அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் அம்மாவின் மறைவு குறித்த உண்மையை கண்டறிவதற்காக ஒரு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆணையம் உரிய விசாரணை நடத்தி முடிவு எடுக்கும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
பேட்டியின்போது திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன், கழக எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி உள்பட பலர் உடனிருந்தனர்.