தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை
தமிழக சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நேரமில்லா நேரத்தில் பொது முக்கியத்துவம் வாய்ந்த சட்டம்- ஒழுங்கு பிரச்சினை குறித்து பேசினார். இதனைத் தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விருதுநகர், கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த 22 வயது பெண்ணுடன் ஹரிஹரன் என்பவர் பழகி, வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அந்த வீடியோவை அவரின் நண்பர்களுக்கு, முக்கியமாக தி.மு.க.வை சேர்ந்த இளைஞர் அமைப்பாளர் ஜூனைத் அகமது, மாடசாமி மற்ற நான்கு நண்பர்களுக்கு அனுப்பினார்.
இவர்கள் கடந்த 6 மாதம் காலமாக, அந்த பெண்ணிடம் பாலியல் வன்முறை நடத்தியுள்ளனர். கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இது போன்று எத்தனை பெண்களை அவர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்தார்கள் என தெரியவில்லை. முறையாக விசாரணை நடத்தி, கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று சட்டமன்றத்தில் வலியுறுத்தியுள்ளேன்.
அதேபோன்று, இந்த வாரம், வேலூர், காட்பாடியில் இரவு காட்சி பார்த்து விட்டு, ஆட்டோவில் வீடு திரும்பிய ஆண் மருத்துவரை தாக்கிவிட்டு, அவருடன் இருந்த பெண் மருத்துவரை கடத்தி சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். குற்றம் செய்தவர்களை விசாரித்து, காவல் துறை விடுவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. குற்றம் செய்தவர்கள் உண்மையை ஒப்புக்கொண்ட பிறகும், காவல்துறை அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என சட்டமன்றத்தில் வலியுறுத்தினேன்.
இந்த தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கதையாக உள்ளது. 10 ஆண்டு கால அம்மாவின் ஆட்சியில், தவறு செய்தவர்கள் யாராகஇருந்தாலும், கண்டுபிடித்து சட்டத்தை முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தந்தோம்.
ஆனால். இந்த அரசில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர் கதையாகி உள்ளது. சட்டமன்றத்தில், இது போன்ற குற்றங்களை, காவல் துறை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என கேட்டுள்ளோம்.
சென்னையில், ஓய்வு பெற்ற நீதியரசர் பி.டி.செல்வத்தின் பாதுகாவலருக்கே அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. காரில் காவலர் பயிற்சிக்கு சென்றபோது, அசோக் நகர் சிக்னலில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பாதுகாவலர் சக்திவேல் அதை சரி செய்தபோது, அங்கு பைக்கில் வந்த மூன்று பேர், அவரை
அரிவாளில் வெட்டி விட்டு தப்பினர்.
அசோக் நகர் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். சக்திவேல் வடபழனி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
சென்னையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு காவல் ஆணையர் சென்னையில், 3 ஆயிரம் ரவுடிகள் இருப்பதாக கூறுகிறார். அந்த செய்தி, பத்திரிகை, ஊடகங்களில் வெளியாகின. ரவுடிகள் சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள்.
ஓய்வு பெற்ற நீதிபதி முன்பு, பாதுகாவலர் வெட்டப்பட்டது, இந்த ஆட்சியில், சட்ட ஒழுங்கு எப்படி உள்ளது என்பதை காட்டுகிறது. இதற்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை ர்ந்த மணிமாறன் என்கிற சின்னதம்பி கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் தான் ஒரு நடன ஆசிரியர் என்று கூறி அங்குள்ள மாணவியருக்கு நடன வகுப்புகள் நடத்தி வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 16 வயது சிறுமியை கடத்தி சென்று கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் தங்கியிருந்தார்.
பிறகு சுசீந்திரத்தில் தங்கியிருந்த போது அங்குள்ள 19 வயது இளம் பெண்ணை கடத்தி தலைமறைவானார். கோவை மற்றும் கன்னியாகுமரி காவல்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்த நிலையில் தனிப்படைகள் தேடி வந்தனர்.
இந்நிலையில் கன்னியாகுமரியைச் சேர்ந்த இளம்பெண் தனது வீட்டினரை தொடர்பு கொண்டு தாங்கள் திருப்பதியில் இருப்பதாகவும், தங்களை டீ விற்க வைத்து ஆசிரியர் மணிமாறன் கொடுமைப்படுத்துவதாகவும் கூறி அழுதுள்ளார்.
விபரம் அறிந்து தனிப்படை காவல்துறையினர் திருப்பதிக்கு சென்று தலைமறைவாக இருந்த மணிமாறனை கைது செய்து இரண்டு பெண்களை மீட்டனர். இந்த ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இதுபோன்ற பெண்களுக்கு எதிரான குற்ற சம்பங்கள் தொடர்கதையாக உள்ளன.
இன்று (நேற்று) சட்டமன்றத்தில், முதல்வர் 110 விதியின் கீழ் சில கருத்துகளை சொன்னார். 2011-ம் ஆண்டு கழக ஆட்சியில், அம்மா அவர்கள் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அம்மா இறந்த பிறகு, நான் முதல்வராக இருந்தபோது, 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டேன்.
10 ஆண்டு காலம், சட்டப்பேரவையின் 110 விதியின் கீழ், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டோம். அந்த அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்தது. இதையெல்லாம், முதல்வர் மறைத்து விட்டு, ஒரு சில அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை என கூறுகிறார். சில பிரச்சினைகள் காரணமாக வை நிறைவேற்றப்படவில்லை, நிலம் தொடர்பாக, பாலம், சாலை அமைப்பதில் பிரச்சினை இருக்கும்.
அந்த வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கும். அல்லது, மத்திய அரசிடம் அனுமதி பெறுவதில் பிரச்சினை இருக்கும். அறிவிப்புகள் ஆய்வு செய்து, பின்னர், அரசாணை வெளியிடுவோம். எனவே, கழக ஆட்சி காலத்தில் தான், 110 விதியின் கீழ் அறிவிப்புகள் நிறைய நிறைவேற்றப்பட்டுள்ளன. நாட்டு மக்கள் பயன் பெற்றுள்ளனர்.
அம்மா இருந்தபோதும், அதன் பிறகும், மாவட்ட ஆட்சியர் மாநாட்டில், அந்தந்த மாவட்ட பிரச்சினைகளை நிறைவேற்றிய அரசு அம்மா அரசாகும். புரட்சித் தலைவர் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா எடுத்து, அம்மாவின் அரசு, பல்வேறு பெரிய திட்டங்களை அறிவித்தது. அதை நிறைவேற்றியது. மானிய கோரிக்கையின் போது அந்தந்த அமைச்சர்கள் கூறிய
அறிவிப்புகளையும் நிறைவேற்றி உள்ளோம்.
இதையெல்லாம், முதல்வர் சுட்டிக் காட்டவில்லை. வேண்டுமென்றே கழக அரசு எதையும் செய்யவில்லை என்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளார். சட்டம்- ஒழுங்கை காப்பாற்ற முடியாமல், முதல்வர், இது போன்ற செய்தியை சொல்லியுள்ளார். கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மடிகணினி திட்டம், இந்த பட்ஜெட்டில் இல்லை. தாலிக்கு
தங்கம் அற்புதமான திட்டம்.
பெண்கள் கல்வியை ஊக்குவிப்பதாக, அம்மா அவர்கள் கொண்டு வந்த தொலை நோக்கு திட்டம், அதையும் கைவிட்டு விட்டார்கள்.
உங்களின் திட்டத்தை குறை கூறவில்லை. அம்மா, ஏழை எளிய பெண்கள், திருமண வயதை எட்டியவுடன், ரூ,25 ஆயிரம், ரூ,50 ஆயிரம் கிடைத்தது. தாலிக்கு தங்கம் ஒரு பவுன் கிடைத்தது.
கிராமப் புறங்களில், பசுமாடு வழங்கும் திட்டம், 3 லட்சம் பேருக்கு, மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும்
திட்டம் என மக்களுக்கு பயன்பட்ட அனைத்து திட்டத்திற்கும் மூடு விழா கண்டு விட்டார்கள்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும், சட்டம்- ஒழுங்கு சீர் குலைந்து விட்டது. ரவுடிகள் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் நாங்கள் வெளி நடப்பு செய்துள்ளோம்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.