தமிழ்நாட்டின் உரிமைக்காக எந்த கட்சியையும் எதிர்த்து குரல் கொடுக்க கழகம் தயங்காது

பேரயைில் எதிர்க்கட்சி் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்
சென்னை
தமிழ்நாட்டின் உரிமைக்காக எந்த கட்சியையும் எதிர்த்து குரல் கொடுக்க கழகம் தயங்காது பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று நடைபெற்ற 2022-2023-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-
நிதிநிலை அறிக்கை பக்கம் 23-ல் பாசனம் என்ற தலைப்பின்கீழ் மேகதாது அணை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து நான் தொடர்ந்து அறிக்கை விடுத்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இந்த மாமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது, இதனை நான் வரவேற்கிறேன்.
இருப்பினும், சட்டமன்றத்திற்கு வெளியே, தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் கர்நாடக அரசு மற்றும் கர்நாடக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தமிழ்நாட்டின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, மவுனம் சாதிப்பதை மக்கள் வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரையில், தமிழ்நாட்டின் உரிமை என்று வந்து விட்டால், அது எந்த கட்சியாக இருந்தாலும் அதனை எதிர்த்து குரல் கொடுக்க தயங்காது என்பதை, இந்த மாமன்றத்தில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
முல்லை பெரியாறு அணை குறித்த கேரள அரசின் அத்துமீறல் குறித்தும் நிதிநிலை அறிக்கையில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. முல்லை பெரியாறு பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், பேபி அணையை வலுப்படுத்தவும் ஏதுவாக, அங்குள்ள மரங்களை வெட்டவும், கட்டுமானப் பொருட்களை எடுத்து செல்ல பாதை அமைக்கவும், தொடர்ந்து கேரள அரசு மறுத்து வருகிறது.
மரங்களை வெட்ட முதலில் கேரள அரசு அனுமதித்தபோது, வேக வேகமாக அதற்கு நன்றி தெரிவித்து, முதலமைச்சர் கேரள முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். ஆனால், அதற்கு மறுநாளே அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. ஆனால், இதனை மீண்டும் வலியுறுத்தி முதலமைச்சர் கடிதம் எழுதியதாகவோ, நேரில் பார்த்தபோது வலியுறுத்தியதாகவோ, தெரியவில்லை.
இதேபோல், தமிழ்நாடு அரசின் அனுமதியில்லாமல், கேரள அமைச்சர்களும், அதிகாரிகளும், தன்னிச்சையாக முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது, தன்னிச்சையாக ஆய்வு செய்வது, முல்லை பெரியாறு அணையின் நீர்வரத்து உள்ளிட்ட தகவல்களைப் பெற, கேரள அரசு சார்பில் பொறியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கோருவது, முல்லை பெரியாறு அலுவலகத்தை பராமரிக்க தேவையான தளவாட பொருட்களை கூட எடுத்துச் செல்ல இடையூறு ஏற்படுத்துவது என, தொடர்ந்து கேரள அரசு அத்துமீறி செயல்படுகிறது.
இந்த ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கி வைக்க, கேரள அரசு அனுமதிக்கவில்லை என்று, விவசாய சங்க தலைவர் கூறுகிறார். கேரள அரசின் சட்டத்திற்கு புறம்பான இத்தகைய செயல்களை, தமிழ்நாடு அரசு உடனுக்குடன் தட்டிக் கேட்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் உரிமை என்று வரும்போது, உறவை புறந்தள்ளிவிட்டு உரிமைக்கு தான் குரல் கொடுக்க வேண்டும் என்றும், கேரள அரசின் அத்துமீறிய செயலை கண்டித்தும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் முதலமைச்சரை நான் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டிலுள்ள கம்யூனிஸ்டு கட்சிகளை சார்ந்த தோழர்களும், தங்களது கட்சிக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறார்களோ, அதேபோல தமிழ்நாட்டு மக்களுக்கும் விசுவாசமாக இருந்து, தமிழ்நாட்டிற்கு ஆதரவாக செயல்பட வேண்டுமென்று, தங்கள் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.